Friday, December 27, 2013

படித்ததில் பிடித்தது - கறுப்புக் குதிரை



இதன் ஆசிரியர் திரு.சுஜாதா அவர்கள்.இந்தப் பகுதியில் இதற்கு முன் அவரது 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' பற்றி எழுதியிருந்தேன்.இது இங்கே சுஜாதா புத்தகத்தைப் பற்றிய இரண்டாவது பதிவு.'கறுப்புக் குதிரை' - இதுவும் சிறுகதைகளின் தொகுப்புத் தான்.இதனை 'மீண்டும் தூண்டில் கதைகள்' என்ற தலைப்பில் 'ஆனந்த விகடன்' பத்திரிக்கையில் எழுதினார். இவரது இந்த படைப்பைப் பற்றிய பதிவு தான் இது.

இதில் 12 கதைகள் உள்ளன.அதில் என்னை மிகவும் பாதித்த கதை என்றால், 'ஒரு சிபிஐ அதிகாரியின் நினைவலைகள்', 'ஆயிரத்தோராவது பொய்','கார்ப்பெட்டில் ரத்தம்..முகத்தில் புன்னகை'.மற்ற கதைகளும் சுவாரசியமானவையே என்றாலும் இந்த மூன்று கதைகள் படித்த பின்பு பல நாட்கள் இவற்றைப் பற்றிய சிந்தனையே என் மனதில் இருந்தது.

கறுப்புக் குதிரை

இது ஒரு சுவாரஸ்யமான கதை. நகைச்சுவையாகவே இருக்கும் ஆனால் இதில் வரும் நகைச்சுவை நிஜமாகிப் போனது ஆச்சரியம் தான்.தமிழகத்திலிருந்து சர்வதேச போட்டிகளுக்கு நடுவராகும்(umpire) ஒருவர் தான் இந்தக் கதையின் நாயகன். இவர் மனைவிக்கோ கிரிக்கெட் என்றாலே பிடிக்காது. அதுவும் கல்யாண தினத்திலிருந்து தான்.'முதலிரவின் போது நடுவே நிறுத்திவிட்டு ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் மாட்சைப் பார்த்து விட்டு வந்தது தப்பு தான்' - சுஜாதா குறும்பு என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த வரி தான். இந்தக் கதைகள் 95 ஆம் ஆண்டு வெளிவந்தன.இந்தக் கதையில் வரும் கிரிக்கெட் கிச்சா(கே.சுவாமி) என்ற நடுவர் கதாபாத்திரம் நடுவர் வெங்கட்ராகவனை மனதில் வைத்து அமைக்க்பட்டதோ என்று தோன்றுகிறது.

ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் மனைவி,கிரிக்கெட்டை காதலிக்கும் நேர்மையான நடுவராக நம் கதையின் நாயகன்.இந்நிலையில் புகழ்பெற்ற பன்னாட்டு குளிர்பான நிறுவனம் ஒன்று பல உலக நாடுகள் பங்குபெறும் ஒரு கிரிக்கெட் தொடர் நடத்துகிறது. அதில் நடுவராக பங்கேற்கும் வாய்ப்பு நமது கே.சுவாமிக்கு கிடைக்கிறது.ஜெர்மனி நாடும் அதில் முதன்முறையாக பங்கேற்கிறது.ஜெர்மனி பல நாடுகளையும் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்து வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவிருக்கும் நிலையில் ஒரு புக்கி நமது நடுவரை அணுகுகிறான்.

ஜெர்மனி அணியில் இரண்டு வீரர்களே திறமையானவர்கள்,அவர்களில் ஒருவருக்கு தவறான தீர்ப்பின் மூலம் அவுட் கொடுத்து விட்டால் போதும்,வெஸ்ட் இண்டீஸ் வென்று விடும் என்றும்,தான் வெஸ்ட் இண்டீஸ் மீது பெரும் பணம் கட்டியிருப்பதாகவும் சொல்கிறான்.சுவாமிக்கும் பெரும்பங்கு அளிப்பதாகக் கூறுகிறான்.ஆனால் சுவாமி இதை ஏற்க மறுக்கிறார். கிரிக்கெட் தனக்குக் கடவுள் போல என்று கூறி, வந்தவனை அனுப்பிவிடுகிறார்.ஆனால், அவர் எதிர்பார்த்தபடி ஜெர்மனி தோற்கிறது, வெஸ்ட் இண்டீஸ் வென்று விடுகிறது.கதையின் இறுதியில் தான் ஜெர்மனி அணியின் முக்கிய வீரரான க்ரயூபை விலைக்கு வாங்கிய விபரம் தெரிய வருகிறது.இந்தக் கதையை படிக்கும் போது தான் ஸ்ரீசாந்த்,சண்டிலா போன்றவர்கள் சூதாட்ட புகாரில் கைதானார்கள்.சுஜாதா ஒரு தீர்க்கதரிசி.

எல்லாமே இப்பொழுதே :

இது ஒரு விதமான காதல் கதை.பணம்,சொத்து மற்றும் அன்பு இவற்றுக்கு நடுவே தான் கதை செல்கிறது.கதையின் நாயகி நிருபமா.செல்வா என்கிற இளைஞனுடன் நட்பு ஏற்படுகிறது.ஆண் பெண் உறவு நட்பில் தொடங்கி காதலில் முடிவது தானே காதல் கதைகளில் வழக்கம்.காதல் மட்டுமே இருந்தால் ஏது சுவாரஸ்யம்?அதனால் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. செல்வாவின் முதலாளி பிரேம்சாகர் மாபெரும் பணக்காரன்.  நினைத்ததை ஒரு நொடியில் சாதிக்கும் பணபலமும் அதிகாரமும் கொண்டவன்.நிருபமாவைக் கண்டதும் பிடித்துப் போய்விடுகிறது.செல்வா மீது கொண்ட காதலால் நிருபமா ப்ரேம்சாகரின் காதலை ஏற்க மறுக்கிறாள். பிரேம்சாகர் செல்வாவை அழைத்துப் பேசுகிறான்.பிறகு செல்வா நிருபமாவை சம்மதிக்க வைக்கிறான்.இதற்கு பிறகு வரும் சம்பவங்களே இந்தக் கதைக்கு சுவாரஸ்யமூட்டுகிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு காதலனை கை விட்டாளா நிருபமா? அல்லது செல்வா விலை போய் விட்டானா? ஒரு வேளை பிரேம்சாகர் செல்வாவை விலைக்கு வாங்கி விட்டானென்றெ வைத்துக் கொண்டாலும்,என்ன விலை கொடுத்திருப்பான்? இந்த கேள்விகளின் பதிலே இந்தக் கதையின் முடிவு.

கி.பி.2887ல் சில விலாசங்கள் :

இது ஒரு 'adults only' வகைக் கதை.கதை நடக்கும் காலக்கட்டம் கி.பி.2887.மகேன் என்பவன் தான் இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரம்.கதை நடக்கும் காலக்கட்டத்தில் விபச்சாரம் முழுதாக தடை செய்யப்பட்டு விட்டது.தகாத உறவில் ஈடுபடுபவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்படும்.இருந்தும் வாலிப வயது இது போன்ற வீர விளையாட்டுகளில் ஈடுபட தூண்டுகிறது.மகேனின் நண்பன் ராகுல் என்பவன் ஒரு மகேனை ஒரு விலாசத்திற்கு அனுப்புகிறான்.விலாசத்தை நேரடியாக கண்டறிய முடியாது.கடும் சிரமத்திற்குப் பிறகு சம்மந்தப்பட்ட பார்ட்டியை கண்டுகொள்கிறான்.சம்பிரதாய உரையாடல்களுக்குப் பின் கூடல் தொடங்குகிறது. இருவரும் உல்லாசமாக இருக்கிறார்கள்.திடீரென எழுந்த மகேன் 'பணம் கொடுக்க வேண்டாமா?நான் புறப்பட வேண்டும்' என்று கூறுகிறான்.தேவயானியோ(பார்ட்டி) 'பணமா முக்கியம்? இன்பம் தானே முக்கியம்' என்று கூற,மகேன் சற்று  கோபமாக  'இங்கே யாரும் இலவசக்காட்சிக்கு வரவில்லை. பணம் கொடுக்க போகிறாயா இல்லையா?' என்று கேட்கும் பொழுது தான் இதில் விபச்சாரம் செய்வது பெண் அல்ல ஆண் என்று புரிகிறது.

ஒரு சி.பி.ஐ அதிகாரியின் நினைவலைகள் :

'Mistrust the obvious' என்ற வாக்கியத்துடன் தொடங்குகிறது இந்தக் கதை.ராமபத்திரன் ஒரு CBI அதிகாரி.இவருக்குத் திருமணம் தள்ளிக்கொண்டே போயிற்று.ஆபத்தான உத்தியோகம் என்பதால் எளிதில் பெண் கொடுக்க எவரும் முன்வரவில்லை. இவரும் அத்தனை ஆர்வமாக அதற்கு முயற்சி செய்யவில்லை. இந்நிலையில் இவருடைய உறவுக்காரப் பெண் வர்ஷா சென்னை மாலைக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாகவும் அவளை பார்த்து வருமாறும் ராமபத்ரனின் தாயார் கூற நமது நாயகன் வர்ஷாவை சந்திக்கிறான்.வர்ஷா துறுதுறு குணம் கொண்ட ஒரு இளம்பெண்.இருவரும் சென்னையில் சில இடங்களைச் சுற்றி பார்க்கிறார்கள்.ராமபத்திரன் வர்ஷாவை நேசிக்கத் தொடங்கிவிடுகிறான். "நாம ரெண்டு பெரும் உறவு இல்லையா?" என வர்ஷா கேட்க,உற்சாகமாக "ஒ எஸ்" - என்கிற ஒரு வசனமே போதும்,ராமபத்ரனின் மனதை புரிந்து கொள்ள. இப்படிச் செல்லும் கதையில் ஒரு CBI விசாரணை.அகர்சந்த் என்பவன் மீது அந்நிய செலவாணி மோசடி செய்வதாக புகார் எழுகிறது.

ராம் ரெயிடு செய்வதைப் பார்க்க விரும்பிய வர்ஷாவை,உடன் அழைத்துச் செல்கிறான் ராம்.அப்போது அகர்சந்த் ஒரு சிட்னி ஷெல்டன் புத்தகத்தை வர்ஷாவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறான்.மீண்டும் அவனை ரெயிடு செய்யும்போது ஒரு புத்தகத்தை வர்ஷா பிறந்தநாள் பரிசாக கொடுக்க எடுத்துச் செல்கிறான்.அந்த இரண்டும் ஒரே புத்தகத்தின் வெவ்வேறு பிரதிகள் என்பதை உணரந்ததும் அகர்ச்சந்தின் மோசடியை கண்டுபிடித்து விடுகிறான் ராமபத்ரன்.இதற்கிடையில் வர்ஷா பிறந்த நாள் என்பதால் அந்த ஹோட்டலில் வாசித்துக் கொண்டிருந்த வாத்திய கோஷ்டியை 'ஹாப்பி பர்த்டே வர்ஷா' பாட வைக்கிறான். வர்ஷா நெகிழ்ந்து போகிறாள். இந்த நேரத்தில் தான் ஒரு புதுமுகம் கதையில் அறிமுகாகிறது. "சாரி! எம் ஐ லேட்?" - என்று நுழைகிறான்.ராம் சற்று குழப்பமடைய,வர்ஷா, அவன் பெயர் ஷேக்கர் சீனிவாஸ் என்றும்,அவனை அவள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறுகிறாள். ராம் ஏமாற்றமடைகிறான்.

"நீ இவரைக் கல்யாணம் பண்ணிக்க ஒரு ப்ரோபோசல் இருந்ததா சொன்னியே?"

வர்ஷா,"அம்மா அப்பாவும் சொன்னா,வயசு வித்தியாசம் ஜாஸ்தின்னு..பதினொரு வருஷம்"

"பத்து வருஷம் என்றேன் ஹீனமாக" - ராம்.

"சரி ராம் அங்கிள்! நாளைக்குப் பார்க்கலாமா?" என்றாள். பாரில் இருந்த கண்ணாடியில் தெரிந்தேன்,வழுக்கையின் ஆரம்பங்கள் தலையில்.ஒரு பெண்ணின் வெளிப்படையான வெகுளித்தனத்தை காதல் என்று நினைத்து ஏமாந்து போவது தான் கதையின் 'one liner'.இதைத் தான் ஆரம்பத்திலேயே 'Mistrust the obvious' என்று சொல்கிறார்.

எய்தவன் :

இது ஒரு சமூக பொறுப்புள்ள வக்கீலுக்கும் தவறான,ஊழல் மிகுந்த,ஒரு அரசியல்வாதிக்கும் இடையில் நடக்கும் கதை. சுந்தரலிங்கம் என்பவர் ஒரு நேர்மையான வக்கீல்,அவர் மணிமோகன் என்கிற மந்திரிக்கெதிராக வழக்கு தொடர்கிறார். அடியாள் மூலம் பலமாக தாக்கப்படுகிறார்.உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப் படுகிறது.சுந்தரலிங்கம் குணமாகி வீடு திரும்புகிறார்.ஆனால் பலமாக தாக்கப்பட்டதால் அவர் ஒரு கண்ணை இழக்க நேரிடுகிறது.இந்த விசாரணை மீதெல்லாம் அவருக்கு நம்பிக்கை இல்லை.ஆனால் தன்னைத் தாக்கியவனை அடையாளம் கண்டு கொள்கிறார். ஆனால் போலீசில் அடையாளம் காட்டாமல் இருந்து விடுகிறார். மாறாக அவனுடன் தனிமையில் பேசி,தன்னை தாக்குவதற்காக அவனுக்குக் கொடுக்கப்பட்ட பணத்தை விட அதிகம் தருவதாகக் கூறி மணிமோகனையே தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுவது போல முடிகிறது இந்தக் கதை.

ஆயிரத்தோராவது பொய் :

அழகான தோற்றமில்லாத பெண் ஒருத்திக்குத் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது.எந்த வரனும் அமையாததால் விரக்தியில் பத்மாவதி திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தையே விட்டுவிடுகிறாள்.அந்த நேரத்தில் தான் ஒரு பையன் இவளைப் பெண் பார்க்க வருகிறான்.பத்மாவோ வந்தவனை வா என்று கூட சொல்லாமல் அனுப்பி விடுகிறாள்.ஆனால் வந்தவனோ வீட்டு வேலைக்காரியுடன் நிறைய பேசிவிட்டுச் செல்கிறான்.இந்த வரனும் தவறிவிட்டதே என பத்மாவின் பெற்றோர் வருந்தும் வேளையில் தான் வந்தவன் பத்மாவைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்து விட்டான் என்கிற தகவல் வருகிறது.அனைவருக்கும் ஆச்சரியம், இறைவன் இந்தக் கல்யாணத்தை நடத்த நிச்சயித்து விட்டான் என்று தோன்றுகிறது.

ஆனால் வந்தவன் பெண்ணைப் பார்க்காமல் வேலைக்காரியைப் பார்த்து சம்மதம் சொன்னது சற்று நெருடலாகவே இருக்க,ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்வார்கள்,இது ஆயிரத்தோராவது பொய்யாக இருக்கட்டும் என்று பத்மாவின் மாமா அவள் தந்தைக்கு தைரியம் கொடுக்கிறார்.இறுதியில் தான் தெரிகிறது இந்த உண்மை.வந்தவன் பார்த்தது கல்யாணப் பெண்ணையும் அல்ல,பார்க்க வந்தவனும் மாப்பிள்ளை அல்ல என்று. வந்தவன் மாப்பிள்ளையின் நண்பன் என்று மாப்பிள்ளை சிவராமன் பத்மாவின் தந்தையிடம் கூற,பத்மாவின் தந்தையும் மாமாவும் கை குலுக்கிக் கொண்டார்கள், அதன் காரணம் என்னவோ மாப்பிள்ளைப் பையனுக்கு விளங்கவில்லை.

பெரியவங்க உலகம் :

இது 'extra marital relationship' என்று சொல்லப் படுகிற திருமணமான ஒரு பெண்ணின் தகாத உறவைப் பற்றியும் ஒரு மாணவனின் மன மாற்றத்தையும் சொல்லும் கதை இது. ஒரு நல்ல ஆசிரியரின் மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை மாணிக்கம் என்ற மாணவன் கண்டுபிடித்து விடுகிறான். இதைப் பற்றி ஆசிரியரிடம் அவர் தனிமையில் இருக்கையில் புகார் சொல்கிறான்.அவரோ இது தனக்கு முன்பே தெரியுமென்றும் இதனை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது என்றும் கூறி அனுப்புகிறார். மாணிக்கத்துக்கோ தமயந்தி என்ற பெண் மீது ஒரு ஆசை.இறுதியில் அந்தப் பெண் தானாக முன் வந்து மாணிக்கத்திடம் அவளின் ஆசையை தெரிவிக்கும் பொது, 'வேண்டாம் தமயந்தி எனக்குப் படிக்கணம்' என்று அவனை அறியாமல் சொல்கிறான். இந்தப் பெரியவங்க உலகத்தை அவனால் புரிந்து கொள்ள முடியாமல் இந்த வயதில் தனக்கு ஏற்பட்டிருக்கும் ஆசையும் தவறு என்று உணர்ந்து மனதை மாற்றிக்கொள்கிறான்.

பை நிறைய பணம் :

இது ஒரு வங்கிக் கொள்ளை மையமாகக் கொண்ட கதை. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இறுதியில் பேங்க் மானேஜருக்கும் இன்ஸ்பெக்டருக்கும் இடையில் நடக்கும் உரையாடல் தான்.இன்ஸ்பெக்டர் ஜெயபாரதி கொள்ளையர்களைக் கண்டு பிடித்து விடுகிறார். ஆனால் அதன் விபரங்களை வெளியுலகத்திற்கு தெரிவிப்பதற்கு முன் பேங்க் மானேஜரிடம் தான் கண்டுபிடித்த விபரங்களை மறைத்து விடுவதாகவும் தாங்கள் இருவரும் தலா 50 லட்சம் வரை பணம் பண்ணலாம் என்றும் யோசனை தெரிவிக்கிறார். தெரிவிப்பதற்கு முன் தானும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி,கோபால்சாமியும் ஒரு நேர்மையான வங்கி அதிகாரி. இது வரை பெரிதாக பணம் பண்ணியதில்லை என்றும் கூறுகிறார். ஆனால் கோபல்சாமியோ '"வேண்டாம்ங்க நம்ம மாதிரி ஒண்ணு ரெண்டு அதிகாரிங்க மிச்சம் இருந்தாதான் இந்தச் சபிக்கப்பட்ட நாட்டுக்கு கொஞ்ச நஞ்சமாவது நம்பிக்கை இருக்குது." - என்று கூறுகிறார்.எத்தனைப் பணத்தைப் பார்த்தாலும் கோபால்சாமியின் நேர்மை குறைந்து விடவில்லை.நேர்மையாளர்கள் எல்லாம் இந்த நாட்டில் 'நாம் என்ன சுகத்தைக் கண்டோம்' என்று நொந்து கொள்ளாமல் நாட்டில் நேர்மையை நிலைநாட்டத் தாங்களாவது இருக்கிறார்களே என்று நினைத்துப் பெருமைப்பட வேண்டும் என்பது போல அமைகிறது இந்த முடிவு.


லூயிஸ் குப்பத்தில் ஒரு புரட்சி :

குப்பத்தில் வாழும் பெண்களின் நிலையை மிக யதார்த்தமாக விளக்கும் கதை இது.தன் வீட்டு வேலைக்காரியின் மகள் திருமணத்தில் கதை தொடங்குகிறது.மாப்பிள்ளையை பார்த்தவுடன் அவன் சரியானவன் அல்ல என்பதை முதலாளியம்மா உணர்கிறாள்.அவள் நினைப்பே சரி என்பதைப் போல தினமும் குடித்து விட்டு மனைவியை துன்புறுத்துகிறான் கார்மேகம். வேலைக்காரியின் மகளையும் தன் மகள் போலவே நினைத்த முதலாளியம்மா அவளை தன் வீட்டிலேயே தங்க வைக்கிறாள்.சட்ட ரீதியான பாதுகாப்பும் கொடுத்து,இந்தப் பெண்ணுக்கு மறுமணம் செய்யும் முயற்சியில் இறங்குகிறாள்.இந்த நேரத்தில் தான் பெண்ணின் கணவன் தான் திருந்தி விட்டதாகவும் மனைவி இல்லாமல் தன்னால் வாழ இயலாது என்றும் மலர்விழியை தன்னுடன் அனுப்பிவிடுமாரும் கெஞ்சி கேட்கிறான். மலர்விழியை அழைத்துச் செல்கிறான்.பிறகு இருவரும் சந்தோஷமாக வாழ்கிறார்கள்.சில நேரங்களில் வந்து முதலாளியம்மாவையும் சந்திக்கிறார்கள்.இத்துடன் இந்தக் கதை முடிந்திருந்தால் புரட்சி மலர்ந்து தான் விட்டதென்று நிம்மதியாக இருந்திருக்கலாம்.ஆனால் யதார்த்தம் அதுவல்லவே.நீண்ட நாட்களுக்குப் பிறகு கணவனும் மனைவியுமாக இந்த முதலாளியம்மாவின் வீட்டிற்கு வருகிறார்கள்.மலர்விழி கர்பமாக இருந்தாள்.கார்மேகம் குடித்து விட்டு மலர்விழியை பின்னாலிருந்து உந்தித் தள்ள அவள் முதலாளியம்மாவின் காலருகில் வந்து விழுந்தாள். இது தான் லூயிஸ் குப்பத்தில் நடந்த புரட்சி.


பொய் :

இதுவும் கூட ஒரு 'adults only' வகைக் கதை என்றே கூறலாம். முடிவு அப்படி.ராஜாராமன் நீண்ட நாட்களாக பணிபுரியும் ஊழியர்.அவருடைய மானஜெரைவிடவும் அனுபவம் ஜாஸ்தி.அசிஸ்டென்ட் மானஜெர் பதவி ராஜராமனுக்குக் கொடுக்க நினைக்கிறார் ரகுநாத்(மானஜெர்).அலுவலகத்தின் அனைத்து விஷயத்திலும் ராஜாராமனுக்கு இருக்கும் அறிவும் அனுபவமும் இந்த புதிய ரகுநாத்தைத் திகைக்க வைத்தது.ஆனால் ஒரு சீருடை விஷயத்தில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுவிடுகிறது.புதிய சீருடை ஒன்றை அறிமுகபடுத்தி அதனை அணிந்து வரவேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கிறார் ரகுநாத்.ஆனால் 20 ஆண்டுகளாக இல்லாமல் இப்போது என்ன என்று ராஜாராமன் சீருடை அணிய மறுக்கிறார்.இதனால் கோபமடைந்த ரகுநாத் அந்த அசிஸ்டென்ட் மானேஜர் பதவியை கேத்தன் என்ற இளைஞருக்குக் கொடுத்து விடுகிறார்.கேத்தன் ராஜராமனைவிட அனுபவம் குறைந்தவர். அதன் பிறகும் மோதல் போக்கையே ராஜாராமனும் ரகுநாத்தும் கேத்தணும் கடைபிடிக்கிறார்கள். ராஜாராமனை விருப்ப ஓய்வில் செல்ல கட்டாயப்படுத்துகிறார்கள் கேத்தணும் மானேஜரும்.வேறு வழி இல்லாமல் விருப்பமில்லாமல்  விருப்ப ஓய்வில் செல்ல சம்மதிக்கிறார் ராஜாராமன். ராஜாராமன் இவர்களைப் பற்றி பல பொய்கள் சொல்கிறார். கேத்தன் கடும் ஆத்திரம் கொள்கிறான்.இறுதியில் ரகுநாத்துக்கும் கேத்தனுக்கும் 'தாம்பத்ய உறவு' இருப்பதாக வதந்தி பரவுகிறது.

இதையடுத்து முதலாளி தற்காலிகமாக கேத்தனை இடமாற்றம் செய்கிறார்.கேத்தனோ இதை ஏற்க மறுக்கிறான். தான் ராஜினாமா செய்யப் போவதாகக் கூறுகிறான்.ஆனால் எதிர்பாராத விதமாக ரகுநாத் தன் பணியை ராஜினாமா செய்கிறார்.முதலாளி எவ்வளவோ வற்புறுத்தியும் ராஜினாமாவை திரும்பப்பெற மறுக்கிறார் ரகுநாத். முதலாளி கேட்கிறார்,

'ஏன்..ஏன் ஒரு வதந்திக்குப் பயந்துட்டியா?'

அது வதந்தி இல்லை உண்மை என்று எப்படி அவரிடம் சொல்ல முடியும் என்று ரகுநாத் நினைப்பது போல கதை முடிகிறது.

கார்ப்பெட்டில் ரத்தம்...முகத்தில் புன்னகை :

இதுவும் கூட ஒரு 'extra marital relationship'பை மையமாகக் கொண்ட கதை தான்.ஆனால் இது நகைச்சுவையான கதை அல்ல.விறுவிறுப்பான த்ரில்லெர் வகைக் கதை என்று நினைத்துத் தான் படிக்கத் துவங்கினேன்.இந்தக் கதையின் முடிவு என்னை மிகவும் பாதித்து விட்டது.இந்தக் கதை படித்து 6 மாதங்களுக்கு மேல் ஆகின்றன.இன்று வரையிலும் கூட இந்தக் கதையின் பாதிப்பு என் மனதில் இருந்து நீங்கிவிடவில்லை. ஒரு மரணத்தில் கதை துவங்குகிறது.ரவிசேகர் என்கிற பெரும் பணக்காரன் இறந்து கிடக்கிறான்.இவரைக் கொன்றது யார் என்ற ரீதியில் கதை தொடங்குகிறது.இவர் மனைவி ஸ்வேதாவுக்கும் இவருக்கும் சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு கடும் சண்டை.போலீஸ் விசாரணை தொடங்குகிறது.துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்திருக்கிறார் ரவிசேகர்.விஷயத்தைக் கேள்விபட்டதும் ஸ்வேதாவைத் தேடி வருகிறான் சுரேஷ்.சுரேஷுக்கும் ஸ்வேதாவுக்கும் தான் தகாத உறவு.

இந்த சம்பவத்தை விசாரிக்க வரும் எஸ்.பி. பழனிவேலு என்பவர் சுரேஷுக்கும் ரவிசேகருக்கும் எந்த அளவு நட்பு என்பதை விசாரிக்கிறார்.ஒரு சமயம் சுரேஷுக்கும் ஸ்வேதாவுக்கும் கள்ளத் தொடர்பா என்றும் கேட்கிறார், இவர்களும் 'ஆம்' என்று உண்மையை ஒத்துக் கொள்கிறார்கள்.விசாரணை இவர்கள் இருவரில் ஒருவர் தான் கொலையாளி என்கிற ரீதியில் கூட சில சமயம் செல்கிறது.இருவரையும் சற்று கேவலமாகவே நடத்துகிறார் எஸ்.பி. பிறகு துப்பாக்கி கிடைத்தவுடன், 'ஜன்னல் வழியாக யாரோ சுட்டுக் கொன்று விட்டு  ஓடி இருக்க வேண்டும்' என்று தெரிகிறது.

தீவிர விசாரணைக்குப் பிறகு தான் அந்த உண்மையை போலீஸ் கண்டுபிடிக்கிறது.அந்த உண்மை என்னவென்றால், ரவிசேகர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்திருக்கிறார். அதாவது இது கொலை அல்ல தற்கொலை. அவர் சமீபத்தில் தொடங்கிய மோட்டார் பைனான்ஸ் கம்பெனியால் பலத்த நஷ்டம் அடைந்திருக்கிறார். கடனை திரும்ப செலுத்த வழி இல்லாமல் இறந்திருக்கிறார் என்று முடிகிறது வழக்கு.ஆனால் ஒரு கேள்வி எழுகிறது. தற்கொலை செய்து கொண்டவர் ஏன் அதை கொலை போல தெரியவைக்க முயற்சி செய்தார் என்பது தான் அந்தக் கேள்வி.இதற்கும் பழநிவே லுவே விளக்கம் தருகிறார். தற்கொலை என்றால் ஒரு வித அவமானம்..அதனால் தான் இது கொலை போலத் தெரிய வேண்டும் என நினைத்திருக்கிறார்.இதற்கு பிறகு ஸ்வேதா ஒரு பதில் சொல்கிறாள்.இந்த மொத்தக் கதையும் அந்த ஒரு வரியில் புரிந்து விடுகிறது.

"இல்லைங்க" என்றால் ஸ்வேதா.அவள் கண்களில் நீர் இயல்பாக வடிந்தது.

"பின்ன எதனாலங்கறீங்க?"

"தற்கொலைன்னா இன்ஷூரன்ஸ் பணம் எனக்கு வராது" என்றாள்.இந்தக் கதை படித்தவுடன் 'ஜீனியஸ் சார் நீங்க' என்று சுஜாதாவைப் பற்றி நினைத்துக் கொண்டேன். 'இறப்பதற்கு முன்பு ஏதோ சொல்ல நினைத்திருக்கிறான். கதவைத் தட்டி இருக்கிறான்','ஐ லவ் யு ஸ்வேதா என்றார்' போன்ற வசனங்கள் கதையின் ஆரம்பத்தில் இடம் பெறுகின்றன.இறுதியில் ஸ்வேதா கூறும் அந்த ஒரு வாக்கியம் ரவிசேகர் அவளை எந்தளவு நேசித்திருக்கிறான் என்பதை உணர்த்துகிறது.தன்னுடைய அன்பை வெளிப்படுத்தத் தெரியாமல் வாழ்ந்திருக்கிறான். ஸ்வேதாவோ அவனைப் புரிந்து கொள்ள முயற்சி கூட செய்யாமல் சுரேஷோடு உறவு வைத்துக் கொண்டாள். வியாபாரத்தில் பலத்த நஷ்டம்,மனைவியின் துரோகம், புரிந்து கொள்ள ஒருவரும் இல்லாதது என அனைத்தும் கவலைகளும் ஒன்று சேர்ந்து ரவிசேகரை மனதளவில் எப்போதோ கொன்று விட்டது.தன உயிர் பிரிவதற்கு முன்பாவது ஸ்வேதா மீது தான் வைத்திருக்கும் அன்பை உணர்த்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காகத் தான் தன் தற்கொலையை கொலை போலத் தெரியவைக்க முயற்சி செய்திருக்கிறான்.இதை உணர்ந்து குற்ற உணர்ச்சி வாட்டியெடுக்க வாய்விட்டு அழுகிறாள் ஸ்வேதா. இந்தக் கதைக்கு மட்டும் ஏன் இத்தனை பெரிய விமர்சனம் என்று இதைப் படிப்பவர்கள் நினைக்கலாம்.இதை இப்படி எழுதினால் மட்டுமே என் மனதில் இருக்கும் பாரம் சற்று குறையும். ஏனென்றால் இந்தக் கதையை பேச்சுவாக்கில் சொன்னால் முழுசாகக் கேட்கும் பொறுமை பலருக்கும் இல்லை.என் போன்றவர்கள் பேசுவதையே கேட்கும் பொறுமை பலருக்கும் இருப்பதில்லை.அதனால் தான் இங்கே என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்து விட்டேன்.

நான் மல்லிகாவோட மகன் :

இது சற்று பழக்கப்பட்ட கதை தான்.தனது தாய் மல்லிகாவை  திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிய ஒருவனைப் பழி வாங்கும் கதை தான் இது.இந்தக் கதையிலும் கிளைமாக்ஸ் காட்சியே சிறப்பம்சம்.செல்வம் மல்லிகாவின் மகன்.தன் தந்தையான பரந்தாமனைக் கொல்ல சென்னைக்கு வருகிறான்.அவரைக் கூட்டத்தில் சந்தித்துத் தான் தான் மல்லிகாவின் மகன் என்கிற விபரத்தைச் சொல்கிறான். வீட்டிற்கு அழைத்துத் தனிமையில் பேச்சு வார்த்தை நடத்துகிறார் பரந்தாமன்.செல்வம் என்றோ ஒரு நாள் வருவான் என்கிற எதிர்பார்ப்புடன் இருந்தவர் போல பேசுகிறார்.மல்லிகா எப்படி இறந்து போனாள் என்றாள், 'பசி,ஏழ்மை,சிபிலிஸ்' என்கிறான் செல்வம்.முக்கியமாகக் கவனிக்க வேண்டிய வார்த்தை 'சிபிலிஸ்'.சிபிலிஸ் என்பது தகாத உடலுறவினால் ஏற்படக்கூடிய ஒரு வியாதி.

பரந்தாமன் செல்வத்தை சமாதானப் படுத்த எவ்வளவோ முயற்சிக்கிறார்.மல்லிகா ஒரு நடத்தை கெட்டவள் என்றும் பலருடன் தொடர்புடைய வேசி என்றும் கூட சொல்லிப்பார்க்கிறார்.செல்வமோ,மல்லிகா அப்படி ஆனதற்கே பரந்தாமன் காரணம் என்கிறான்.பரந்தாமன் ஏதோ ஒரு முக்கியமான விஷயம் சொல்ல நினைக்கிறார், அதற்குள் செல்வம் தன் கையில் இருந்த கையிற்றால் அவர் கழுத்தை இறுக்குகிறான்.பேச்சு மூச்சில்லாமல் பரந்தாமனின் உடல் கீழே விழுகிறது.வந்த காரியம் முடிந்ததென்று செல்வம் மீண்டும் திருச்சிக்கேச் சென்று விடுகிறான்.

பிறகு ஒரு நாள் பரந்தாமனின் வக்கீலின் ஆட்கள் செல்வத்தைத் தேடி வருகிறார்கள்.அவனுடன் சற்று பேச வேண்டும் என்கிறார்கள்.

"எதுக்கு" என செல்வம் கேட்க,

"பரந்தாமன் தன் அத்தனை சொத்தையும் உங்க பேர்ல எழுதி வெச்சிருக்காரு"

(புதிய தூண்டில் கதைகள் நிறைவு பெறுகிறது).

அனைத்துக் கதைகளிலுமே சுஜாதாவின் இறுதி கட்ட வசனங்கள் 'Top Notch'.

No comments: