Friday, May 24, 2013

படித்ததில் பிடித்தது - வானம் வசப்படும்



நீண்ட இடைவெளிக்குப்  பிறகு இந்தத் தலைப்பில் ஒரு பதிவிட நேரம் கிடைத்திருக்கிறது.தமிழில் வரலாற்றுப் புதினங்கள் என்றாலே, பொன்னியின் செல்வனும் சிவகாமியின் சபதமும் தான் நம் நினைவுக்கு வரும்.சற்று வாசிக்கும்பழக்கம் அதிகமுள்ளவர்களுக்கு உடையார்,பார்த்திபன் கனவு, நந்திபுரத்து நாயகி,வேங்கையின் மைந்தன்,காந்தளூர் வசந்தகுமாரன் கதை ஏன் சமீபத்திய காவல் கோட்டமும் கூட நினைவுக்கு வரும்.ஆனால் இந்த நாவலைப் பற்றி நம் தலைமுறையினர் அதிகம் பேசி கேட்டதில்லை. இது புதுச்சேரி வரலாற்றைக் கூறும் கதை.புதுச்சேரி எப்படி உருவானது எங்கிருந்து உருவானது போன்ற தகவல்களைத் தேட வேண்டாம்.இக்கதையின் நிகழ்காலம் 1740-50 என்று வைத்துக்கொள்ளுங்கள் என்று ஆசிரியர் முன்னுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறார்.யார் அந்த ஆசிரியர்?இங்கு குறிப்பிடப்படும் நாவல் எது? வானம் வசப்படும் - சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல் , ஆசிரியர் - திரு.பிரபஞ்சன்.

இந்த நாவலை ஏறத்தாழ இரண்டு மாதங்கள் படித்தேன்.656 பக்கங்கள் தான் என்றாலும் கூட நாவலின் சுவையும், நேரமின்மையும் ஒன்று சேர இந்த நாவலின் கடைசிப் பக்கத்தைப் படிக்க இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.முன்பே குறிப்பிட்டது போல இது புதுச்சேரியைப் பற்றிய கதை.துய்ப்ளெக்ஸ் என்கிற குவர்னர்(கவர்னர் - புத்தகத்தில் குவர்னர் என்றே குறிப்பிடுகிறார்கள்) மற்றும் அவருடைய துபாஷ் ஆனந்தரங்கப்பிள்ளை தான் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்.இந்த ஆனந்தரங்கப்பிள்ளை அவர்களின் தனிச்சிறப்பு என்னவென்றால் தம் கால அரசியல்,சமூக நிகழ்ச்சிகளை 'டயரியாக'ச் சுமார் 25 ஆண்டு காலத்துக்கு எழுதி வைத்துச் சென்றதே.இதை ஆசிரியரே முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.அந்த டயரிக் குறிப்புக்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது தான் இந்த 'வானம் வசப்படும்'.

மற்றொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் பெறுகிறது - அது தான் துய்ப்ளெக்ஸின் மனைவி ழான்(Jeanne).ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்துவதற்கு முன்பே நம் மொத்த நாட்டையும் பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர முயன்றவன் தான் இந்த துய்ப்ளெக்ஸ். தன்னுடைய இந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்று விட்டான். ஆனால் துய்ப்ளெக்ஸின் இந்த வெற்றிகளில் பெரும்பங்கு வகித்தவர் ஆனந்தரங்கப்பிள்ளை தான்.இப்படி குறிப்பிடுவதால் தேச பக்தர்கள் உடனடியாக பிள்ளை மீது வெறுப்பு கொள்ள வேண்டாம்.புதுச்சேரியை நிர்வகித்தக் குவர்னர்களுள் துய்ப்ளெக்சுடன் தான் ஆனந்தரங்கருக்கு நல்ல பழக்கம்.ஆகையால் குவர்னர் துய்ப்ளெக்ஸ் என்றாலும் கூட,ஆட்சிபுரிந்தவர் என்னவோ ஆனந்தரங்கர் என்னும் அளவுக்கு இருந்தது ஊருக்குள் அவருடைய  செல்வாக்கு.

வறுமையில் வாடிய பல தமிழ்ப்புலவர்களுக்கு ஏன் புலவர்களுக்கு என்றே கூறலாம்(ஏனெனில் ஒரு தெலுங்குக் கவிஞரைப்பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது),வள்ளல் போல வாரி வழங்கியவர். சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தது போல,ஆனந்தரங்கர், ராமகவிராயர்,கஸ்துரி ரங்கையன் என பலருக்கும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.ராமகவிராயர் பற்றிய நிகழ்ச்சியைப் படிக்கும்போது மனம் நெகிழ்ந்துத் தான் போனது.இல்லாமை நோயால் சுரம் வந்து படுத்துக் கிடக்கும் மனைவி,அடுத்த வேளைக்குச் சாப்பிட நல்ல சாப்பாடு இல்லை.ஆனந்தரங்கர் உதவுவார் என்கிற  எதிர்பார்ப்புடன் கிளம்புகிறார்.பிள்ளை வீட்டில் இல்லை என அறிந்ததும் அவரிருக்கும் பாக்குமண்டிக்கே உடனே புறப்படுகிறார்.சாப்பாட்டு நேரத்தில் வந்த விருந்தாளிக்கு போஜனம் பண்ணுவிக்காமல் அனுப்புவது மகாபாவமென பிள்ளை சொல்லுவார் என அவர் காரியஸ்தர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் பாக்குமண்டிக்குச் சென்று விடுகிறார்.அங்கு பிள்ளையைப் பற்றிக் கவிபாடி தான் வந்த நோக்கத்தை வெளிப்படுத்துகிறார். அவருடைய நிலையறிந்த பிள்ளை அவர்கள் வேஷ்டி,சால்வைகள்,ஆயிரம் வராகன் காசு,மோதிரம் என அனைத்தும் கொடுத்து சகல மரியாதையுடன் அனுப்பி வைக்கிறார்.

இப்படிப் பல நிகழ்ச்சிகள்,சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.பானுகிரகி என்கிற நாட்டியக்காரி(தேவரடியாள்) கதாபாத்திரத்திற்கும் கணிசமான அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.ஒரு பக்கம் இலக்கியம்,நாட்டியம், ஓரளவு அரசியல் என்றே செல்கிற கதையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவது என்னவோ ழான் அவர்களின் கதாபாத்திரம் தான்.துய்ப்ளெக்ஸ் ஓரளவு நியாயவானகத்தான் இருக்கிறார்.சற்று பணத்துக்கு விலை போய்விடக்கூடிய மனிதர் தான் என்றாலும் கூட,அவர் மனைவியைக் காட்டிலும் எவ்வளவோ மேலானவர் என்றே சொல்ல வைக்கிறது ழான் அவர்களின் கதாபாத்திரம்.

குவர்னருக்கோ ரங்கப்பர்(ஆனந்தரங்கர்) என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால் ழானுக்கோ ரங்கப்பர் மீது எப்போதும் வெறுப்பு.காரணம் ரங்கப்பர் ஒரு தமிழர்(இந்து).

ழான் பல இடங்களில் ரங்கப்பரையும் இந்துக்களையும் காபிரிகள் என்றே குறிப்பிடுகிறார். காபிரிகள் என்பது ஒரு விதமான இழிசொல்.அதனாலேயே அவள் ஆனந்தரங்கருக்கு முன்பு துபாஷாக இருந்த பெத்ரோ கனகராய முதலியாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாள்.பெத்ரோ கனகராய முதலியார் ஒரு கிறிஸ்துவர்.ஆனந்தரங்கருக்கு முன்பே துபாஷ் பதவி வகித்தவர்.அவர் இறந்த பிறகே பிள்ளை துபாஷாக்கப்பட்டார்.துபாஷ் என்பது கவர்னருக்கு அடுத்தபடியான பதவி.கனகராய முதலியார் கிறிஸ்துவர் ஆனாலும் கூட,அவர் பெயரிலுள்ள முதலியார் மறையவில்லை.மதமாற்றம் தீண்டாமையையே ஒழிப்பதில்லை என்னும்போது ஜாதியை எங்கே ஒழிக்கப் போகிறது.ரங்கப்பருக்கு எதிராகப் பல போலி புகார்களும் குவர்னரிடம் கொடுக்கிறாள்.நமது குவர்னருக்கு ஆயிரம் தான் ரங்கப்பர் மீது பிரியமிருந்தாலும் அவர் ஒரு பொண்டாட்டித் தாசன்.மனைவியின் பேச்சைக் கேட்டு பல முறை ரங்கப்பரிடம் கோபப்பட்டுள்ளார்,ஆனால் ரங்கப்பரோ மிகவும் சாமார்த்தியசாலி.மிகத்திறமையான சமாதனங்களைச் சொல்லி குவர்னருக்கு உண்மையைப் புரிய வைத்துவிடுவார்.

ழான் பற்றி ஒரு குறிப்பு - ழானுக்கு துப்ளெக்ஸ் இரண்டாம் கணவர் தான். அவள் ஏற்கனவே வேன்சான் என்பவனை மணந்து பதினொரு குழந்தைகள்  பெற்றவள்.வேன்சான் இறந்த பிறகு ழானை துப்ளெக்ஸ் மணக்கிறார். வேன்சான் இறப்பதற்கு முன்பிருந்தே இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள்.இறந்த பிறகு மணக்கிறார்கள்.இது பிரான்ஸ் நாட்டில் சாதாரணம்.

ழான் ஒரு மதவெறி பிடித்தவள்.அவளின் முக்கிய நோக்கம் புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலை இடித்துத் தள்ளுவதும் இயன்ற அளவு இந்துக்களைக் கிறிஸ்துவர்களாக மாற்றுவதும் தான்.ரங்கப்பர் குவர்னர் துறைக்கு மிக நெருக்கமாக இருப்பதால் அவளால் நினைத்த அளவிற்கு காய் நகர்த்த முடியவில்லை.

இந்த நாவலில் மிக முக்கியமான சில சம்பவங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். சம்பாக் கோவிலில்(Church) ஒரு தடுப்புச் சுவர் கட்டப்பட்டிருந்தது.சுவற்றுக்கு ஒரு புறம் தாழ்த்தப்பட்டவர்கள்,மறுபுறம் மற்ற சாதி கிறிஸ்துவர்கள் உட்கார்ந்து பூஜை கேட்க வேண்டும்.ஒரு முறை தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் சம்பாக் கோயிலின் பெரிய பாதிரியாரிடம் இது குறித்து புகார் சொல்கிறார்கள். 'எங்களை ஏன் தனிமைப்படுத்துகிரீர்கள்' என கேட்கிறார்கள்.இதையடுத்து பெரிய பாதிரியார் அந்தத் தடுப்புச் சுவரை இடித்து விடுகிறார்.மறுநாள் முதல் சாதி வேறுபாடின்றி அனைவரும் ஒருசேர அமர்ந்து பூஜை கேட்க வேண்டிவருகிறது..இதனால் மற்ற சாதி கிறிஸ்துவர்கள் கடுங்கோபம் அடைகிறார்கள். இதில் ஞானராசு முதலியார் என்பவருக்கும் பெரிய பாதிரியாருக்கும் நடக்கும் வாக்குவாதம்,மதம் மாறினாலும் சாதி மாறாது என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

உதாரணத்திற்கு,

"எம்மைப் பறையர் உடன் உட்காரப் பண்ணிவிட்டீரே!எம்மைக் கேவலம் பண்ணிப் போட்டீரே, எம்மைப் பூமிக்குக் கீழே எம் மரியாதைகளைப் புதைத்துப் போட்டீரே.." - என்கிறான் முதலி.

பெரிய பாதிரியாரின் இந்தச் செய்கைக்குப் பின் மேல் சாதி கிறிஸ்துவர்கள் என சொல்லப்படுபவர்கள் தேவாலயத்திற்குள் நுழைய மறுக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சமமாகத் தாங்கள் நடத்தப்படுவதை கேவலமாக எண்ணுகிறார்கள்.

மற்றொரு சம்பவமும் குறிப்பிடப்பட்டுள்ளது.சம்பாக் கோயில் பாதிரியார் கடுதே என்பவன் அருகாமையிலிருக்கும் வேதபுரீஸ்வரர் கோயிலுக்குள் நரகலை போட்டு விடுகிறான்.இது குறித்து வேதபுரீஸ்வரர் கோயில் குருக்களும் மற்ற இந்துக்களும் குவர்னரிடம் புகார் செய்கிறார்கள். இதை விசாரிக்க குவர்னர் ஒரு படையை அனுப்புகிறார்.அந்தப் படையில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் பராதி என்பவன்,கிறிஸ்துவ மத வெறியன், பாதிரியாருக்கு ஆதரவாக வழக்கை முடித்துவிடலாம் எனக் கூற,படையில் இருந்த முசே மேர் என்பவர் இதை ஏற்க மறுத்து,குவர்னர் நியாயமான விசாரணை மேற்கொள்ளவே தம்மை அனுப்பினார் எனக் கூறி பாதிரியாரின் குற்றத்தைக் குவர்னருக்கு விளக்குகிறார்.

மீண்டும் ஒரு முறை இதே கடுதே,ஒரு இந்துவின் மீது தவறான தகவல்களுடன் புகார் செய்கிறார்.குவர்னருக்கு பெத்திசியோம்(பெட்டிஷன்) எழுதுகிறார்.இதை விசாரித்தக் குவர்னர் துப்ளெக்ஸ், இந்தப் பாதிரி மீது கடுங்கோபம் கொள்கிறார்.இவரைப் பற்றி பிரான்ஸ் ராஜாவுக்கும்,மன்னர் நீடூழி வாழ்க(ஒவ்வொரு முறை பிரான்ஸ் மன்னரைப் பற்றி குறிப்பிடும்போதும் மன்னர் நீடூழி வாழ்க என்று அனைத்துக் கதாபாத்திரங்களும் சொல்கின்றன), இவருக்கு மேலே இருக்கப்பட்ட சாமியாருக்கும் புகார் எழுதப் போவதாகச் சொல்கிறார் துய்ப்ளெக்ஸ்.

துய்ப்ளெக்சைப் பொறுத்த வரை வியாபாரத்தையும் மதத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளவே மாட்டார்.அவர் தெளிவான சிந்தனையுடவர்.முதலில் தாங்கள் இங்கே வந்தது வியாபாரத்திற்காகத் தானே தவிர மதம் மாற்றம் செய்ய அல்ல என்பதை வலியுறுத்துகிறார்.இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே மதச்சண்டை வந்தால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்திருந்தார் துய்ப்ளெக்ஸ்.ஆனால் அவரும் இந்துக்களை அஞ்ஞானிகள் என்றே கருதுகிறார்,அவர்களை ஞான மார்க்கத்துக்கு(கிறிஸ்துவ மதத்துக்கு) அழைத்து வர வேண்டும் என்பது அவர்களின் கடமை என்றும் கருதுகிறார்.இது கிறிஸ்துவ மிஷினரிகளுக்கே உண்டான மனோபாவம்.

இவர் இப்படி இருக்க,இவரின் மனைவி ழான் வந்து காரியத்தைக் கெடுக்கிறார். பாதிரிக்கு வக்காலத்து வாங்கி அவர் பக்கம் பேசத் தொடங்குகிறார்.ழான் எப்போது இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்தாளோ அப்போதே துய்ப்ளெக்ஸ் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகிறார். மனைவிக்கு எதிராக எதுவும் செய்யும் திராணி அவருக்கு இல்லை.ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல அவர் ஒரு பொண்டாட்டித் தாசன்.

இந்தக் கதையில் அனைவரின் வெறுப்பையும் சம்பாதிக்கும் கதாபாத்திரம் என்றால் அது ழான் தான்.துபாஷ் பதவி தருவதற்காக அன்னபூரண ஐயன் என்பவனிடம் லஞ்சம் பெற்றுக் கொள்வது,செல்வந்தர் வீடுகளுக்கு அடியாட்களை அனுப்பி அநியாயமாகப் பெரும் தொகை வசூலிக்கச் செய்வது , இந்துக்களையும் அவர்களது வழிபாட்டு முறையையும் கேலி பேசுவது, மதமாற்றம் செய்வது,ஆனந்தரங்கப்பிள்ளை மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்துவது என இவள் செய்யும் அனைத்துமே ஆத்திரமூட்டும் காரியங்கள் தான்.

அதிகாலையில் எழுந்திருக்கும் சேஷு பண்டிதன்,உடம்பில் பூணூல்  இல்லையே என்று பதறுகிறான்.பிறகு தான்,தான் ஞானாதிக்கப் பண்டிதனானது நினைவுக்கு வருகிறது.பணத்திற்கு ஆசைப்பட்டு மதம் மாறிய பண்டிதர் கிறிஸ்தவ மதத்தில் சந்தி(சந்தியாவந்தனம்) பண்ண வேண்டுமா என சந்தேகம் கேட்க,அதெல்லாம் இங்கே அவசியமில்லை என விளக்கம் தருகிறார் ஜீவப்பிரகாசமாக மாறிய சிவப்பிரகாச ஐயர்.இந்த மத மாற்றங்கள் ழான் முன்னிலையில் நடக்கின்றன.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அமைகிறது மற்றொரு சம்பவம்.

குவர்னர் சற்று அசந்த நேரம் பார்த்து அவரிடம் தந்திரமாகப் பேசி, மூளைச்சலவை செய்து, வேதபுரீஸ்வரர் கோயிலை இடிக்க உத்தரவு பிறப்பிக்க வைத்துவிடுகிறாள்.ஈவு இரக்கமின்றி இந்துக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் வேதபுரீஸ்வரர் கோயில் இடிக்கப்படுகிறது. தமிழர்களின்(இந்துக்கள்) தலைவர் போல திகழ்ந்த ஆனந்தரங்கரிடம் இந்துக்கள் முறையிடுகிறார்கள்.

"நாட்டார்களிலே எல்லோரும் ஒரே குரலாய் எதிர்க்கிற போது,குவர்னர் துரை எப்படிக் கோயிலை இடிக்கிறது?" - என்றார் ஒருவர்.ஆனால் உண்மை என்னவெனில் இவர்கள் ஒரே குரலாய் சொல்லவில்லை.இவர்களில் சிலர் பணத்துக்கும் பதவிக்கும் விலைபோய்விட்டார்கள்.அன்னபூர்ண ஐயனுக்குத் துபாஷ் பதவி கொடுக்கும்பட்சத்தில் கோயிலை இடிக்கச் சம்மதம் என்று சிலர் தெரிவித்துவிடுகிரார்கள்.இந்துக்களின் இது போன்ற ஒற்றுமையின்மையே அயல்நாட்டு துஷ்ட சக்திகளுக்கு துணிச்சலைத் தருகிறது.இங்கு இந்துக்களுக்கு மத்தியிலிருக்கும் வேற்றுமைகளைப் பயன்படுத்தி இந்த அயல்நாட்டு சக்திகள் பல விஷயங்களை சாதித்து விட்டன.

இப்போதைய கூடங்குளம் போராட்டம் கூட கிறிஸ்தவ மிஷினரிகளின் தூண்டுதலின் பேரில் தான் நடக்கிறது என்கிற குற்றச்சாட்டு இல்லாமல் இல்லை.

வேதபுரீஸ்வரர் கோயிலை இடிக்கும்பொழுது அருகே இருக்கும் ஒரு மசூதியையும் இடித்துவிடுமாறு துய்ப்ளெக்ஸ் உத்தரவு பிறப்பிக்கிறார்.அப்போது துலுக்கர் படைத் தலைவன் அப்துல் ரகுமான் குவர்னரைச் சந்தித்து மசூதியை இடிக்கும் உத்தரவை திரும்பப்பெறாவிட்டால் அவர்களிடம் இருக்கும் கடைசித் துலுக்கன் உயிரோடு இருக்கும் வரைக்கும், மசூதியின் ஒரு செங்கல் விழுவதையும் அவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்கிறான்.அப்துல் ரகுமானின் மன உறுதியும் நெஞ்சுரமும் குவர்னர் துரையை அச்சமூட்டவே, உத்தரவைத் திரும்பப் பெறுகிறார்.

இந்துக்களிடையே நிலவும் ஒற்றுமையின்மையை இந்தக் காட்சிகள் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஒரு முறை குவர்னர் ஆனந்தரங்கரிடம் கேட்கிறார்,(இந்த உரையாடல் கோயில் இடிப்பின் போது நிகழ்ந்தது அல்ல)

"இந்தத் தேசத்தை மிகச் சுலபமாக வெற்றிகொண்டு விடலாம் என்று சொல்லும்"

அதற்கு ஆனந்தரங்கர் இவ்வாறு பதிலுரைக்கிறார்,

"இந்தத் தேசமென்ன பிரபுவே, ஒற்றுமையோ,இனத்தான் என்கிற பாசமோ, பழகியவன் என்கிற சிநேகிதாமோ இல்லாத மக்களை ஆயுதம் கொண்டல்ல, ஒற்றை விரலால் அடக்கி விடலாமே"

இது போல இந்த நாவலில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. ஆனந்தரங்கரும் அவருடைய நண்பர் நாகாபரணப் பண்டிதரும் நாட்டு நடப்பை அலசும் விதம் யதார்த்தம்.ஆனந்தரங்கரின் மகள் பாப்பாள் திருமணத்திற்குப் பின் இறந்து போவது நெஞ்சை உருக்குவதாகத் தான் இருந்தது.ழான் தன் மகளின் கள்ளக்காதலுக்கு உதவுவது சற்று நகைச்சுவையாக இருந்தாலும், அயல்நாட்டவர்கள் கலாச்சாரம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்துகிறது.

நாவலின் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் ராபர்ட் கிளைவ்.கிளைவ் பற்றி மிகச்சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.இந்தக் கிளைவ் என்பவனும் துய்ப்ளெக்ஸ் என்பவனும் நம் நாட்டை அடிமைப் படுத்த வந்த அய்யோக்கியர்கள் என்ற நினைப்பை சற்று ஓரம் கட்டிவிட்டு பார்த்தால், இவர்களின் கதாபாத்திரங்களை ரசிக்கலாம். துய்ப்ளெக்ஸ் கவர்னராக இருக்கலாம்,ஆனால் கதையில் கதாநாயகன்(ஹீரோ) அந்தஸ்து என்னவோ ஆனந்தரங்கருக்குத் தான்.25 ஆண்டுகால அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை டயரியில் எழுதி நம் வரலாற்றை நாம் அறியும் வண்ணம் செய்த ஆனந்தரங்கருக்கு ஹீரோ அந்தஸ்து கொடுக்கப்படத்தான் வேண்டும்.

'துரோகிகளே,துரோகிகளை விரும்பார்' போன்ற வசனங்களைக் கொண்ட இந்த நாவலுக்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்ததில் எனக்கு ஒரு ஆச்சரியமும் இல்லை.அந்த காலத்துத் தமிழை நாவலில்  அப்படியே கொண்டுவந்திருக்கிறார் ஆசிரியர் பிரபஞ்சன். சாகித்ய அகாதமி கொடுக்கப்பட்டதற்கு அதுவும் ஒரு முக்கியக்காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இஸ்லாமியர்களைப் பிள்ளை, துலுக்கர்கள் என்றே குறிப்பிடுகிறார்.இந்த நாவலைப் பற்றி எழுதுவதால் அதில் குறிப்பிட்டுள்ளது போலவே சில சொற்களை நானும் பயன்படுத்தியிருக்கிறேன்.உதாரணத்திற்கு - குவர்னர்,துலுக்கர் போன்ற சொற்கள்.மற்றொரு குறிப்பு - நமது ஆனந்தரங்கரின் பெயரில் புதுச்சேரியில் ஒரு வீதி உள்ளது. ரங்கப்பிள்ளை தெரு - இது புதுச்சேரி நேரு வீதிக்கு அடுத்த வீதி.தேவனாம்பட்டினம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.கடலூர் கடற்கரையை(சில்வர் பீச்)த் தான் தேவனாம்பட்டினம் குறிக்கிறது.இப்போதும் கூட இந்தப் பெயர் உள்ளது . தனிப்பட்ட முறையில்,எனக்கு,புதுச்சேரியிலும் கடலூரிலும் வாழ்ந்த அனுபவம் உண்டு.ஆகையால் இந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்களை மிக எளிதாகக் கற்பனை செய்து பார்க்க முடிந்தது.

இந்தப் பதிவு சற்று நீளமானப் பதிவுத் தான்.656 பக்க நாவலைப் பற்றி எழுத வேண்டுமென்றால் சற்று நீளமாகத் தான் எழுத வேண்டியுள்ளது.அரை மணி நேரம் இந்தப் பதிவை படிப்பதற்காக ஒதுக்குங்கள்.முழுவதும் படித்தப் பிறகு வானம் வசப்படும் படிக்க வேண்டுமென்கிற ஆசை எழலாம்.ஒருவேளை அப்படி எழவில்லையென்றால் கூட, ஒரு சிறப்பான நாவலைப் பற்றியத் தகவல்கள் அறிந்து கொண்டோம் என்கிற திருப்தி ஏற்படலாம்.
 

4 comments:

Vengat said...

Nice to read. You have condensed the entire book and shown all the main picture.Oru madrasa pattinam paatha effect irukku :) Saamba koil Vedapureeswarar Koil ellam very good. I remember a old pic of Cathedral Church in 1940 's. Keep writing more and more.

usharaja said...

very intresting summary of the long novel, based on historic incidents.
Look forward to reading more of such blogs.
nanRi

Harish.M said...

@Vengat - thanks for your comments machi :-)

Harish.M said...

@usharaja - thank you very much for commenting :-) will keep this blog updated..thanks :-)