Saturday, May 18, 2013

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி



தமிழக அரசின் இந்த அறிவிப்பு தான் இன்று சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் தம்மைத் தாமே தமிழ்ப் பாதுகாவலர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் அரசு வெளியிட்ட அறிவிப்பு தான் என்ன?

"முன்னதாக, ஆங்கில வழிக் கல்வி தொடர்பாக, சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கையின்போது அமைச்சர் வைகைச்செல்வன் வெளியிட்ட அறிவிப்பு இதுதான்:

'தனியார் பள்ளி மாணவர்களைப் போன்று அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் பயிலும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர் நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 1,6-ஆம் வகுப்புகளில் இரண்டு ஆங்கில வழிப் பிரிவுகள் வீதம் மொத்தம் 640 பிரிவுகள் தொடங்க அரசு அனுமதியளித்தது."[நன்றி விகடன் - http://kalvi.vikatan.com/index.php?aid=1576#cmt241]


இது நமக்கும் ஏற்புடையதாக இல்லை.தனியார் பள்ளிக்கூடங்களுக்கு நிகரான தரமான கல்வியை வழங்க வேண்டுமென்று அரசு நினைத்திருந்தால்,அதில் தவறேதும் இல்லை தான்.ஆனால் அதற்காக அரசு பின்பற்றும் வழிமுறைகள் தான் தவறு. முதலில் நாம் யோசிக்க வேண்டிய முக்கியமான விஷயம் - 'தனியார் பள்ளிகள் உண்மையில் தரமான கல்வி வழங்குகிறதா?' என்பது தான்.இன்று தனியார் பள்ளிகளின் ஒரே லட்சியம் - 'நூறு சதவிகிதம் தேர்ச்சி'.இந்த நூறு சதவிகித தேர்ச்சிக்காக இவர்கள் மாணவர்களை நடத்தும் விதம் பல நேரங்களில் கடும் ஆத்திரத்தையே ஏற்படுத்துகிறது.

தனியார் பள்ளிகள் மாணவர்களை இயந்திரத்தைப் போல மாற்றி விடுகிறார்கள்.ஒரு பத்தாம் வகுப்பு மாணவனின் ஒரு நாள் இப்படித் தான் அமைகிறது.காலை ஐந்து மணிக்கு தனியார் பயிற்சி வகுப்புகளுக்குப் புறப்படுகிறான்.5.30 முதல் 7 மணி வரை ஒரு பாடம்.8 மணிக்கு பள்ளியில் சிறப்பு பயிற்சி வகுப்பு.9.30 முதல் வழக்கமான வகுப்புகள்.இடையில் அரை மணி நேரம் உணவு இடைவேளை.இடைவேளை முடிந்த உடன் ஏதேனும் ஒரு பாடத்திற்கான தேர்வு இருக்கும்.அந்த தேர்வு ஒரு அரை மணி நேரம் வரை நடத்தப்படும்.பிறகு மதிய வகுப்புகள்.இவை முடிந்த பிறகு மீண்டும் மாலை பள்ளியில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள்.பிறகு மீண்டும் தனியார் பயிற்சி வகுப்புகள்.இரவு 10 மணிக்கு வீடு திரும்பும் மாணவன் மறு தின பரிட்சைக்காக தயார் செய்ய வேண்டியுள்ளது.இவ்வளவு செய்தும் ஒரு வேளை தன்னால் தேர்வில் முதல் மூன்று இடங்களுக்குள் வர முடியாமல் போனால் அனைவரும் அந்த மாணவனை வசைபாடி தீர்ப்பார்கள். இது தான் சிறந்த கல்வியைத் தருகிறோம் என விளம்பரங்களின் மூலம் மார்தட்டி கொள்ளும் தனியார் பள்ளிகளின் நிலை.


தனியார் பள்ளிகளின் நிலை இப்படியென்றால் அரசு பள்ளிகளின் நிலை அதற்கு நேர்மார்.பல பள்ளிகளில் பல பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லை. வசதியின்றி படிக்க வரும் ஏழை மாணவர்களை தங்கள் வீட்டு வேலைக்காரனைப் போல் நடத்தும் ஆசிரியர்களும் இல்லாமல் இல்லை. பெண் பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை தரும் பொறுக்கிகளும் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். ஆண்-பெண் என இருபாலர் பயிலும் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் கூட இருப்பதில்லை.கட்டடங்கள் வலிமையானதாக இருப்பதில்லை.திடீரெனெ தீப்பிடித்தால் தப்பிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.


இதனால் தான் மக்கள் தனியார் பள்ளிகளுக்குப் படை எடுக்கிறார்கள்.ஒரு தனியார் பள்ளியில் தன் மகனைச் சேர்த்தால் அவனுக்கு அறிவு வளர்கிறதோ இல்லையோ, பெயருக்குப் பின்னே ஒரு பட்டத்தையாவது போட்டுக்கொள்ளும் அளவிற்கு முன்னேறிவிடுவான் என்று பெற்றோர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையைக் கூட அரசு பள்ளிகள் ஏற்படுத்தத் தவறுவதால் தான் பெரும்பாலானவர்கள் அவைகளைத் தவிர்க்கிறார்கள். ஆக, தமிழக அரசு முதலில் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்குத் தரமான கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்றுத் தர வேண்டும்.


ஒரு வேளை அடிப்படை வசதிகளை மேம்படுத்தி விட்டால் ஆங்கிலவழிக்கல்வியை அமல்படுத்தலாமா என்றால்,கூடாது என்பது தான் என் கருத்து.


ஆங்கிலவழிக்கல்வியையோ அல்லது ஆங்கிலத்தையோ எதிர்ப்பதற்காக இதை எழுதவில்லை.நான் படித்ததும் கூட ஆங்கிலவழிக்கல்வியில் தான். ஆனால் அன்று என் பள்ளியில் தமிழ் மொழிக்கு எந்த விதத்திலும் ஒரு மரியாதை குறைவு ஏற்பட்டுவிடவில்லை.அது அன்றைய நிலை.இன்று நிலைமை வேறு மாதிரி ஆகிவிட்டது.அன்று ஆங்கிலவழியில் கல்வி கற்று வளர்ந்தவர்கள் இன்று கேட்கும் கேள்வி - 'தமிழ் படிச்சி என்ன சாதிக்கப் போறேன்?தமிழ் படிச்சா பத்து பைசாக்கு பிரயஜோனம் இருக்கா?'.


இப்படிக் கேட்பவர்கள் ஒரு விஷயத்தை உணருவதில்லை.அவர்கள் இந்தக் கேள்வியை கேட்பதும் கூட தமிழில் தான் என்பதை.நம் சிந்தனைகள் யாவும் இயற்கையாகவே நம் தாய்மொழியில் தான் அமையும்.வேற்று மொழியில் சிந்தித்தால் அது அத்தனை சிறப்பாக அமையாது.இன்றைய ஆங்கில மோகத்தின் விளைவு என்னவென்றால் - 'ungalukkaaga seupar(super :D) song onnu vandhutte irukku paathu enjoy pannunga..this is prashant signing off from you.." - இது போன்ற அரைவேக்காட்டுத்தனமான ஒரு மொழி தான். தமிழும் சரியாகத் தெரியாது ஆங்கிலமும் சரியாகத் தெரியாது - இரண்டும் கலந்த ஒரு அரைவேக்காடு மொழி பேசும் ஒரு தலைமுறையாக நாம் உருவாகிவிட்டோம் என்பது தான் கசப்பான உண்மை. இந்த மொழி பரவ சன் மியூசிக் போன்ற தரம் தாழ்ந்த தனியார் தொலைக்காட்சிகள் ஒரு முக்கியக் காரணமே என்றாலும், அரசு பள்ளிகளிலும் கூட முழுக்க முழுக்க ஆங்கிலவழிக் கல்வி அமல்படுத்தப்படுதல் நம் அடுத்தத் தலைமுறையைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


நான் புதுச்சேரி பெடிட் செமினார்(Petit Seminaire) பள்ளியில் படிக்கும்போது அந்த பள்ளியின் முதல்வர் பாதிரியார் திரு.அந்தோணிசாமி அவர்கள் பேசிய இந்த வாக்கியம் என் மனதில் பதிந்து விட்டது.'தாய் மொழியில் கல்வி கற்பவர்கள் யாரும் தாழ்ந்து போக மாட்டார்கள்'.இதே கருத்தை என் தந்தையும் கூட பலமுறை கூறியிருக்கிறார்.இவர்களும் கூட தமிழ்வழிக்கல்வியில் படித்தவர்கள் தான்.உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவரென மதிக்கப்படும் அய்யா அப்துல் கலாம் அவர்கள் கூட தமிழ் வழிக்கல்வியில் படித்தவர் தான்.இது போல பல பேரை உதாரணமாகக் காட்டலாம். தமிழில் படித்ததால் இவர்கள் எந்த விதத்தில் தாழ்ந்து விட்டார்கள்?


அப்துல் கலாம் அவர்கள் பேசும் இந்தக் காட்சியைப் பாருங்கள்.





தமிழில் படித்து தன் கடும் உழைப்பினால் முன்னேறிய இந்த மாமனிதருக்கு - ஒரு இந்தியருக்கு - ஒரு தமிழருக்கு - ஆங்கிலேயர்கள் மத்தியில் எத்தனை சிறப்பென்று.


இதோ மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் இந்த சொற்பொழிவைப் பாருங்கள்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் தொடர்புடையவர். சந்திரயான் திட்ட இயக்குனரும் இவரே.இவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள் :


"சந்திரயான் வெற்றிக்கு தாய்மொழிக் கல்வி தான் காரணம்.அக்குழுவில் இடம்பெற்றிருந்தவர்களில் அதிகமானோர் தாய்மொழியில் படித்தவர்களே. எனவே இளைஞர்களிடையே தாய்மொழிப் பற்றும்,நாட்டுப்பற்றும் அவசியம் இருக்க வேண்டும்" - என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.




"தமிழே,
உன் உன்னதம் உணராமல் எழுதினேன்
 என் வரிக்கெல்லாம் வருமானம் வந்தது
உன் உன்னதம் உணர்ந்து எழுதினேன்
என் வருமானத்திற்கே வரி வந்தது"

 - இது கவிஞர் வாலி அவர்கள் சொன்னது.

இது போன்ற தமிழ் வாக்கியங்களையும் தமிழ்க் கவிதைகளையும் தமிழ்க் கதைகளையும் படிப்பதே ஒரு தனி சுகம் தான்.தமிழ் எழுத்துக்களிலேயே ஒரு வசீகரம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.இப்படிப்பட்ட தமிழில் கல்வி கற்பது ஒருவனுடைய அறிவை மேலும் கூர்மயாக்குமே தவிர குறைத்து விடாது.

ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.தமிழ் வழிக்கல்வியோ அல்லது ஆங்கிலவழிக் கல்வியோ,முன்னேற வேண்டும் என்கிற எண்ணமுடையவனை, சரியான வழிகாட்டிகளைக் கொண்டவனை, எந்த விதத்திலும் பாதிக்காது.மாறாக இது போல தமிழுக்கு அளித்து வரும் முக்கியத்துவம் குறைந்து கொண்டே போனால்,எதிர்காலத்தில் தமிழ் மொழி என்ற ஒன்று வரலாற்றில் மட்டுமே இருக்கும்,வழக்கில் இருக்காது.

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."

இது பாரதியின் கவிதை.அவர் உலகெங்கும் உள்ள கலைச்செல்வங்களை கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்கிறார்.

ஆனால் நாமோ நம் தாய்மொழியை இகழ்ந்து அந்நியர்களின் மொழிக்கே முக்கியத்துவம் அளிக்கிறோம். தமிழர்களே தமிழைப் புறக்கணிக்கத் தொடங்கினால் தமிழ் மெல்லச் சாகத்தான் செய்யும்.ஆகையால் அரசு தமிழ்த்தாய்க்குச் சிலை வைத்து விளம்பரம் தேடிக்கொள்வதைவிட தமிழ் வழிக்கல்வியை ,முன்பு போல முழுவதுமாகத் தொடர்வதும் அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளைப் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுப்பதே தமிழ்த்தாய்க்கு மனநிறைவை ஏற்படுத்தும்.

தமிழின் இன்றைய நிலை : என் பதிவுகளைப் படிக்கும் பெரும்பாலானோர் (தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்), இந்தப் பதிவைக் கண்டதும் கூறப் போகும் காருத்து : "எதுக்குடா தமிழிலே எழுதி சாவடிக்கிற? தமிழ்ப் படிக்கறதெல்லாம் ரொம்ப கஷ்டம்.தயவு செஞ்சி இனிமே தமிழிலே எழுதாதே அப்படி எழுதினா எங்களைப் படிக்கச் சொல்லாதே".

கவிஞர் வாலி அவர்களின் கவிதையிலிருந்து இந்த இரு வரிகளை மட்டும் குறிப்பிட்டு இந்தப் பதிவை முடித்துக் கொள்கிறேன் :

"ஆங்கிலம் அளவிற்கு சோறு போடாது தமிழ்
என சொல்பவர் முகத்தில் உமிழ் "

3 comments:

Siva Pon Gokul said...
This comment has been removed by the author.
Unknown said...

nice blog....hope u update freequently

Harish.M said...

@Siva and Harish - Thanks a lot for your comments guys :-)