Monday, February 25, 2013

படித்ததில் பிடித்தது - விடியலைத் தேடி



இந்த படித்ததில் பிடித்தது பகுதியில் வாரமொருமுறை பதிய வேண்டுமென நினைத்திருந்தேன்.ஆனால் நேரம் ஒதுக்க இயலவில்லை.இந்தப் பதிவில் நான் அலச இருக்கும் புத்தகம் 'விடியலைத் தேடி'.இது எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்கள் எழுதிய நாவல்.

படிப்பதற்கு முன், பெண் எழுத்தாளர் என்பதால் பெண்களைப் பற்றிய 'புரட்சிகரமான' கருத்துக்கள் ஏதேனும் கூறுவாரோ என்று பயந்தேன்.ஆனால் இவர் வேறு விதமான எழுத்தாளர்.ஆங்கிலத்தில் சொன்னால் இவர் ஒரு 'optimistic writer'.இப்போது விடியலைத் தேடி புறப்படுவோம்.

கதை அனுபமா என்கிற பெண்ணைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான்.அனுபமா தான் இந்த கதையின் கதாநாயகி.சிறு வயதிலேயே ஒரு விபத்தில் தாய் தந்தையரை இழந்து தவித்த அனுபமாவை வளர்த்த பெருமை அவளுடைய சித்தி தனபாக்கியத்தையும் சித்தப்பாவையுமேச் சேரும்.இந்த தனபாக்கியம் ஒரு தன பைத்தியம்.இவள் அனுபமாவை வளர்க்க முன் வந்ததே கூட அவளுடைய அப்பாவின் ஆயுள் காப்பீட்டுப் பணத்துக்காகத் தான்.இவர்கள் அனுபமாவை ஒரு அடிமை போல நடத்துகிறார்கள்.அனைத்து வேலைகளையும் அனுபமா தான் செய்ய வேண்டும்.செய்யத் தவறினால் அடி,உதை ஏன் சூடு வைக்கவும் கூட சித்தி தயங்க மாட்டாள்.இதையும் சித்தப்பன் கேட்க வக்கில்லாதவன்.அவன் ஒரு பொண்டாட்டி தாசன்.

ஆனால் அனுபமாவோ சாந்தஸ்வரூபி.அனைவரையும் அனுசரித்து செல்லும் குணம் கொண்டவள்.தனபாக்கியமும் அவள் கணவனும் செய்த ஒரே உருப்படியான காரியம் அனுபமாவை படிக்க வைத்தது தான்.இப்படித் தொடங்கும் கதையை வைத்து இதுவும் தொலைகாட்சிகளில் வரும் மெகா தொடர் ரகம் என்று ஒதுக்கிவிடுவீர்களேயானால் நீங்கள் ஒரு சிறப்பான நாவலை ஒதுக்குகிறீர்கள் என்றே அர்த்தம்.சித்தி தன்னை ஒரு மாபெரும் பணக்காரருக்கு இரண்டாந்தாரமாய் மணமுடித்துத் தர முடிவு செய்துவிடுகிறாள்.அனுபமா மறுத்தால் சூடு போட்டுவிடுவேன் என மிரட்டி அடக்கி விடுகிறாள்.நரக வேதனையை சமாளிக்க முடியாமல்,தன்னையே ஒரு ஆறு மாத காலமாய் சுற்றி வந்த ரகுபதி என்பவனோடு,அனுபமா, இரவோடு இரவாக வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள்.இந்த இருளிலிருந்து விடுபட ரகுபதியுடன் ஒரு புதிய விடியலைத் தேடி புறப்படும் அனுபமா ஏகப்பட்ட திருப்பங்களைச் சந்திக்கிறாள்.அந்தத் திருப்பங்களை ஒருவித படபடப்போடும், விறுவிறுப்பாகவும் சற்று திகிலாகவும் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

அவள் சந்திக்கும் திருப்பங்களில் முக்கியமானது ரகுபதி பெண்களை விற்கும் ஒரு புரோக்கர் என்பது.இந்த ரகுபதிக்கு அந்த மணவாளப் பெருமாளே(சித்தி பார்த்து வைத்த கிழட்டு மாப்பிள்ளை) தேவலையோ என்று நினைக்கும் அளவிற்கு நொந்து போகும் அனுபமா,ஒடிந்து போய் உட்கார்ந்து விடவில்லை. ரகுபதி மற்றும் அவன் கூட்டாளிகளிடமிருந்து அதே லாட்ஜில் தங்கி இருக்கும் ஒருவனின் உதவியால் தப்பி விடுகிறாள்.அவளுக்கு உதவுபவனின் பெயர் தான் வித்யாதரன்.இந்த வித்யாதரன் தான் இந்தக் கதையின் நாயகன். ஆசிரியை வித்தியாதரனின் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே அமைத்திருக்கிறார்.

இந்த வித்யாதரன் அனுபமாவிடம் மிகக் கடுமையாக நடந்து கொள்ளும் சம்பவங்களை மிக யதார்த்தமாக வடிவமைத்திருக்கிறார்.ஒரு சில நேரங்களில் 'சே என்ன மனிதன் இவன்.அனுபமா போன்ற ஒரு அப்பாவிப் பெண்ணிடம் இத்தனை கடுமை காட்டுகிறானே' என்று கூட தோன்றியது. ஆனால் அப்பாவிப் பெண்களில் கூட சுயநலவாதிகளும் ஆபத்தானவர்களும்   உண்டு என்பது வித்தியாதரனின் கருத்து.அதில் தவறு காண நமக்கு உரிமை இல்லை.வித்யாதரன் அனுபமாவை அவளுடைய சித்தி சித்தப்பாவிடமிருந்தும் கூட காப்பாற்றுகிறான்.அத்தனையும் ஒரு காரியமாகத்தான்.

இது தான் கதையின் மிக சுவாரஸ்யமான கட்டம்.அனுபமாவை தன காதலியாக நடிக்க வைக்கிறான்.அதற்கு பெரும் பணம் வழங்குவதாகவும் உறுதியளிக்கிறான். இது வெறும் நடிப்பு தான், இப்போது வித்யாதரன் முதலாளி அனுபமா அவனிடம் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவள். பார்க்கப்போவதோ காதலி வேலை.இவை அனைத்தும் மரணப்படுக்கையில் கிடக்கும் வித்தியாதரனின் தாயாரை மகிழ்விக்கவே. வித்யாதரனும் கூட வெளிநாட்டிலிருந்த பொது அனுராகா என்ற பெண்ணை காதலித்து ஏமாந்து போகிறான்.தன தாயாரின் உடல் நிலையை கவனிப்பதற்காக இந்திய வருமாறு அழைத்த போது,தனக்கு ஆயா வேலை செய்ய விருப்பமில்லை என்று அனுராகா மறுத்துவிடுகிறாள். இதனாலேயே வித்யாதரனுக்கு பெண் வர்கத்தின் மீதே வெறுப்பு.அவனைப் பொறுத்த வரையில் உலகிலேயே ஒரு பெண் தான் போற்றுதளுக்குரியவள். அது அவனுடைய தாயார் சிவகாமி அம்மாள் மட்டுமே. இப்போது அந்த அனுராகாவாகத் தான் நம் அனுபமா நடிக்கப் போகிறாள்.

கதையின் முக்கிய கதாபாத்திரமே இந்த சிவகாமி அம்மாள் தான்.அவர் மிகுந்த புத்தி கூர்மை உடையவர்.எழுந்து உட்காரக் கூட சிரமப்படும் நிலையில் இருக்கும் சிவகாமி அம்மாளைப் பார்க்க வித்யாதரனுக்கு ரொம்பவே சங்கடமாக இருந்தது.சிறு வயதிலிருந்தே தாய் தந்தையரை இழந்த அனுபமாவிற்கோ சிவகாமி அம்மாளை ரொம்பவும் பிடித்து விடுகிறது. தான் சம்பளத்திற்கு நடிக்கிறோம் என்பதை மறந்து அனுபமா சிவகாமி அம்மாளை நேசிக்கத் தொடங்கிவிடுகிறாள்.மற்றபடி வித்யாதரனுக்கும் அனுபமாவிற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்.ஒருவரையொருவர் மட்டம் தட்டி கொள்ளாத நிமிடங்கள் மிகக் குறைவு,அரிதானவை என்று கூட சொல்லலாம்.

கதை இப்படிச் செல்ல,சிவகாமி அம்மாள் பிடிவாதமாக அனுபமாவை வித்யாதரனுக்குத் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.இதுவும் தற்காலீகமே  என்று நினைத்த அனுபமாவிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி சிவகாமி உடல் நிலை பூரண குணமடைந்து விடுகிறது.உண்மையைச் சொல்லிவிடலாம் என்றால் அவர் அதிர்ச்சி எதையும் தாங்க மாட்டார் என்று டாக்டர் எச்சரித்தது நினைவிற்கு வந்தது.இதனிடையில் அனுபமா தன்னையும் அறியாமல் வித்யாதறனைக் காதலிக்கத் தொடங்கி விடுகிறாள்.

அனுபமா உல் மனதில் வித்தியாதரனின் மீது ஒரு வித ஈர்ப்பு இருப்பதை இந்த நாடகத்திற்கு அவள் ஒப்புக்கொள்வதற்கு முன்னரே நமக்கு புரிய வைத்துவிடுகிறார் ஆசிரியை.

"உழைப்பில் எந்தவிதக் கேவலமும் இல்லை என்று நினைத்தது மறந்து, இவன் ரசிக்கும் விதமாய்ப் பெருமையுடன் காட்ட அவளது கைகளில் மென்மையோ தூய்மையான வழுவழுப்போ இல்லையே என்று ஏக்கம் பிறந்தது." - இது போன்றதொரு மனநிலையை நான் சில பெண்களிடம் கவனித்திருக்கிறேன். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்,கதையில் அத்தனை யதார்த்தம் என்று விளக்கத்தான்.

கதையில் மற்றொரு பகீர் திருப்பம்.அனுபமா வித்யாதரன் மேல் கொண்ட காதலை உணர்ந்து நாணும் வேளையில்  தான்,அவள் யாராக நடிக்க வந்தாளோ  அவளே அங்கு வந்து சேர்ந்து விடுகிறாள்.அனுராகாவின் வருகை அனுபமாவை நிலைகுலையச் செய்கிறது.அனுபமாவை அனுராக பாடாய் படுத்துகிறாள்,வீட்டை விட்டு துரத்தவும் முடிவு செய்கிறாள்.இடையில் காணமல் போன இந்தக் கதையின் கெடுமதியாளன்(villain),ரகுபதி மீண்டும் வருகிறான்.அவனும் அனுபமாவிற்கு தொல்லை கொடுக்கிறான்.இதை எல்லாம் சமாளிக்க வேண்டிய வித்யாதரன் எங்கோ காணமல் போக, சிவகாமி அம்மாள் எப்படி இவற்றைச் சமாளிக்கிறார்?அனுபமா என்ன ஆனாள்? அனுராகா என்பவள் உண்மையில் யார்?அவளுடைய பின்புலம் என்ன? ரகுபதி என்ன ஆகிறான் - இவை அனைத்தும் கதையின் இறுதி அத்தியாயங்களில் சுவாரஸ்யமாகக் கூறப்பட்டிருக்கிறது.

அனுபமா அனுராகாவாக மாறி மீண்டும் அனுராகாவாகவே அனுபமாவாகும் காட்சிகளை ஆசிரியை தனக்கே உரிய பாணியில் நகர்த்தியிருக்கிறார்.இந்தக் கதைக்கு ஒரு 'drama touch' இருந்தாலும் கூட,விறுவிறுப்பாக நகர்கிறது.சில வசனங்கள் சுளீரென்று விழுகிறது.

' உன் சித்தி என்றால் உன்னை விட இரு மடங்கு வயது அதிகமிருக்க வேண்டும்.அவளை எதிர்க்க உன் உடம்பில் பலம் இல்லாமல் போவானேன்?திட்டுவாள் கத்துவாள் என்றால் உன்னாலும் அது முடியும் தானே?சுருக்கமாகச் சொல்லப்போனால் நீயும் முதுகெலும்புள்ள மனுஷி தானே?நிமிர்ந்து நிற்பதற்கென்ன?

உன் சித்தியின் சூடுகோலுக்குப் பயந்தா இந்த ரகுபதியுடன் வெளியேறினாய்? ஒன்று இரண்டு சூடு போட்டால் தான் என்ன?அதற்காக இந்த நரகத்திலா விழுவாய்?"  - வித்யாதரன் அனுபமாவிடம் பேசும் வசனங்கள். நாம் அனைவருமே முதுகெலும்பு உள்ளவர்கள் தானே. பிரச்சனைகளைக் கண்டு ஒடுவானேன்?நின்று சமாளிப்பது தானே முறையாகும்.பிரச்சனைகளைக் கண்டு ஓடுவது ஒரு தீர்வாகாது என்பது தான் இந்த வசனத்தின் உள்ளர்த்தம்.

என்னையும் அறியாமல் அனுபமா மீது ஒரு அனுதாபம் ஏற்பட்டது என்பதை மறுக்க இயலாது.வித்யாதரன் மீது சில நேரங்களில் வெறுப்புத் தோன்றினாலும் கூட இந்த வித்தியாதரனின் மனநிலையிலும் நம்மில் பெரும்பாலானோர் சில நாட்களாவது இருந்திருப்போம்.இந்த மனநிலையைக் கடக்காமல் வாழ்வது மிகக் கடினம்.

அனுபமா சித்தியின் கொடுமை தாங்காமல் ஏதோ ஒரு விடியலைத் தேடி ரகுபதி போன்ற காலிப்பையலின் சுயரூபம் தெரியாமல் வீட்டை விட்டு ஓடி விடுகிறாள். ஆனால் இன்று நாட்டில் பல அனுபமாக்கள் கண்ணின் மணியாகக் காக்கும் பெற்றோரை இருளென நினைத்து அரைவேக்காட்டு ரகுபதிகளுடன் பொய்யான விடியலைத் தேடி அலைந்து காலத்தின் ஓட்டத்தில் தொலைந்தே போகிறார்கள்.தங்களுடைய அறியாமையால், தவறான பாதையில் செல்லும் அனுபமாக்களில் சிலரேனும்  இந்தக் கதையைப் படித்து திருந்த வாய்ப்புண்டு.எல்லாப் பெண்களுமே அனுராகாப் போலத்தான் என எண்ணிப் பெண் வர்கத்தை வெறுக்கும் வித்யாதரன்களுக்கு   அனுபமாக்களும் இருக்கிறார்கள் என்பதையும், ரகுபதி போன்ற ஆண் அரக்கர்களும் இருக்கிறார்கள் என்பதையும் இந்தக் கதை  உணர வைக்கும்.

இது போல இந்தக் கதையில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. நான் மேலே விவரித்தது ஒரு சிறு பகுதியைத் தான்.'Feel Good' வகைக் கதைகளின் பிரியர் நீங்களென்றால்,விடியலைத் தேடி உங்களுக்கான நாவல் என்றே சொல்லலாம்.

1 comment:

Vengat said...

Good review about the novel. We should stay away from wrong notions in this world. But what to do we judge people just by some incidents by some other people.