Sunday, January 29, 2012

மாஸ் மீடியா - 8


மாஸ் மீடியா -8
Start Camera Action


முந்தைய பாகங்களைப் படிக்க இங்கே செல்லவும்(click here)


ரணுக்கு மதுவிலேயே சில மாதங்கள் கடந்தன.ஏறத்தாழ ஒரு மன நோயாளி போல் ஆகிவிட்டான் என்றால் மிகையல்ல.தொடர்ந்து குடிப்பதும் சாப்பிடுவதும் உறங்குவதுமாய் காலங்கழித்ததால் சரண் மிகவும் குண்டாகி விட்டான்.கண்கள் சிவந்திருந்தது.முகத்தில் பல நாட்களாக சவரம் செய்யாத தாடி.தொப்பையும் தொந்தியும் தாடியுமாக பரிதாமகவே காணப்பட்டான் சரண்.வெறுப்பின் உச்சத்துக்கே போனான்.மீண்டும் மது அருந்த பாட்டிலை எடுத்தான்.வாய் வரை பாட்டிலை கொண்டு சென்றவன் வெறி பிடித்தவனை போல் பாட்டிலை தூக்கி வீசினான். சுவற்றில் பட்டு அது சுக்குநூறாகி போனது.என்ன நினைத்தானோ என்னவோ திடீரென வீட்டை விட்டு வெளியேறினான்.தாடி முகத்தை மறைத்திருந்ததாலும் பழைய அழுக்கான உடுப்புகளை உடுத்தி இருந்ததாலும் சரணை மக்கள் எவரும் அடையாளம் காணவில்லை.

பைத்தியக்காரன் போல சென்னை முழுக்க சுற்றினான்.சென்னை அரசு பேருந்தில் ஏறினான்.50 ருபாய் டிக்கெட் வாங்கியவன் அன்று முழுவதும் பல பேருந்துகளில் ஏறினான்.சென்னையின் பல பகுதிகளை சுற்றி சுற்றி வந்தான். தர்மராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய பட போஸ்டர்கள் பல ஒட்டப்பட்டிருந்தன.ஆத்திரத்தில் சிலவற்றை கிழித்தெறிந்தான்.சுற்றி சுற்றி வந்த சரணுக்கு இதுவும் கண்ணில் பட்டது.தி நகர் அருகே உள்ள ஸ்ரீனிவாசா திரயரங்கரத்தின் வாசலில் நின்றிருந்தான்.அங்கே தான் நடித்த 'அத்தை மகள் ஆனந்தி' படம் re-release செய்யப்பட்டிருந்தது. சரண் மனதில் ஏதோ ஒரு வித்தியாசமான உணர்ச்சி ஏற்பட்டது.திரையரங்கினுள் சென்றான்.டிக்கெட் வாங்கிக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தவனுக்கு பெரும் அதிர்ச்சி.வாயடைத்து நின்றான். அவ்வளவு கூட்டம்.அரங்கம் நிறைந்திருந்தது.

"யோவ் உக்காருய்யா படம் மறைக்குது" - என பின்னாலிருந்து குரல் வர சரண் அமர்ந்தான்.சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்த படம் சரணின் கேரீயரிலேயே மிக பிரம்மாண்டமான வெற்றிப் படம்.சரணின் நடிப்புக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.இந்த படத்தின் மாபெரும் வெற்றி சரணுக்கு பட்டி தொட்டி எங்கும் ரசிகர்கள் எண்ணிக்கையை அதிகரித்தது.A,B,C என அனைத்து சென்டர்களிலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இது.இன்றளவும் இந்த படத்திற்கு ஒரு மரியாதை இருப்பதை இந்த கூட்டத்தை பார்த்த சரண் உணர்ந்தான். நீண்ட நெடு நாட்களுக்குப் பிறகு சுய நினைவு திரும்பியவனை போல் சிந்திக்க தொடங்கினான்.படத்தை பார்ப்பதில் தனது கவனம் இப்போது செல்லவில்லை.தான் நடித்த இந்த படத்தை தானே நூறு முறை பார்த்திருப்பான் சரண்.அவன் கவனம் முழுவதும் வேறு விஷயத்தில் இருந்தது.எந்தெந்த வசனங்கள்.காட்சிகள்,பாடல்கள் கைதட்டல்கள் பெறுகின்றன? எந்த காட்சியில் பார்வையாளர்கள் அரங்கை விட்டு வெளியே செல்கிறார்கள்?என்ன விதமான 'கமெண்ட்' அடிக்கிறார்கள் என ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்க தொடங்கினான்.

படம் முடிந்து,அரங்கிலிருந்து வெளியே செல்பவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என காது கொடுத்து கேட்க தொடங்கினான்.

"ஏன்னா படம் டா..இது re-releaseன்னு நம்பவே முடியல இல்ல?"

"ஆமாம் டா எப்பா..ஏன்னா கூட்டம்..இவ்வளவு திறமைய வச்சிக்கிட்டு இந்தாளு எங்க டா போனான்..படமே இல்ல.."

"இந்த மாதிரி படம் நடிக்க சொன்னா மாஸ் மண்ணாங்கட்டின்னு போயி கடுபெதிட்டான் யா.."

"ஆனா ஒன்னு மட்டும் சொல்றன்,இந்த சரண்,மாஸ் படம் அது இதுன்னு போகாம இந்த மாதிரி படம் நடிச்சான்னு மட்டும் வை,அவன் தாண்டா டாப்பு.."

"திரும்ப வருவார் டா எங்க ஹீரோ..கெத்து காட்ட தான் போறாரு நீயும் பாக்க தான் போற"

இது போன்ற கருத்து தான் பலரிடமும் நிலவியது.இவற்றை கேட்க கேட்க சரண் உணர்ச்சிவசபட்டான்.தன்னை அறியாமலேயே கண் கலங்கி விட்டான்.

"இவன் திரும்ப வந்துட்டாலும்..போடா..பிரபாவதி ரூபாவதின்னு  எவ கூட என்ன பண்ணிட்டிருக்கானோ.. அவன் டைம் எல்லாம் முடிஞ்சி போச்சு"

இப்படி சிலர் ஏளனம் பேசவும் தவறவில்லை.இவை அனைத்தையும் கவனித்து விட்டு சரண் மீண்டும் பேருந்தில் ஏறினான்.மெரினா கடற்கரையில் தனியே நடக்க தொடங்கினான்.அன்று மக்கள் நடமாட்டம் அதிகமில்லை. திடீரென மணலில் அமர்ந்து கடலையே உற்று நோக்க தொடங்கினான். அலைகளையே கவனமாக பார்த்து கொண்டிருந்தான். அவன் பார்வையில் ஏதோ ஒரு அர்த்தம் இருந்தது.ஏதோ ஒரு 'pattern'ஐ கூர்ந்து கவனித்து கொண்டிருந்தான். அலைகள் உயர எழும்பின பின்னர் விழுந்தன.மீண்டும் உயர எழும்பின மீண்டும் விழுந்தன.மீண்டும் எழுந்தன மீண்டும் விழுந்தன..

சரண் எழுந்தான்.தன்னை தானே ஒரு முறை நோட்டம் விட்டு கொண்டான்.வீட்டைச் சென்றடைந்த பின் நிம்மதியாக உறங்கினான்.

மறு நாள் காலை வழக்கம் போல சரணை எழுப்ப வந்த விவேக் அதிர்ச்சி அடைந்தான்.படுக்கையில் சரணை காணவில்லை.அலமாரியில் இருந்த மது பாட்டில்கள் மொத்தமும் மாயமாய் மறைந்திருந்ததை கண்டு வியப்படைந்தான்.நேற்று ஆத்திரத்தில் சரண்,  மது பாட்டில்களை உடைத்தது நினைவிற்கு வர விவேக்கிற்கு உள்ளூர ஒரு பயம் பற்றி கொண்டது.ஒரு வேளை சரண் ஏதேனும் விபரீதமான முடிவை மேற்கொண்டு விட்டானோ என. ஆனால் விவேக்கிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

முகத்தை முழுச் சவரம் செய்திருந்த சரண் வந்து சேர்ந்தான்.ஜிம்மிற்கு சென்று கடும் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளான் என்பதை விவேக் உணர்ந்தான்.இது உண்மையில் விவேக்கிற்கு அதிர்ச்சி தான். ஆனால் இன்ப அதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்.

"பாஸ் You are just awesome today..Full shave, இவ்வளவு காலையில exercise,பாட்டில் எதுவும் காணோம்.. பார்க்கிறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு" - விவேக்

"விவேக் இது தான் என்னோட பிளான்..இன்னும் ஒரு மாசத்துல இந்த தொப்பைய முழுசா குறைக்கணம். உடம்புக்கு full fitness கொண்டு வரணம்.அப்புறம் ஆரம்பிக்கலாம் நம்மளோட செகண்ட் இன்னிங்க்ச"

நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி தெளிவாக பேசிய சரணை கண்டதில் ஏக மகிழ்ச்சி அடைந்தான் விவேக். 'நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது' என குடுகுடுப்பைக்காரன் பேசும் வசனம் தொலைகாட்சியில் தற்செயலாக ஒளிபரப்பாக,விவேக்,பக்குவமாக புன்னகைத்து விட்டு நகர்ந்தான்.


                                                       ***************************



ண்ணப்பன் தயாரிக்கும் படத்தை இயக்க போவது ஸ்ரீதர் தான் என்பது உறுதியாகி விட்டது.படத்திற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டாகி விட்டது.படத்திற்கு பிரம்மாண்டமான பூஜையும் போடப்பட்டு விட்டது. தான் இன்று ஒரு இயக்குனராக பெரிதும் உதவிய காதர் பாய்,நடிகை ஜோயித்தா மற்றும் ஸ்ரீதரின் குருநாதர் சுகுந்தன் என அனைவரும் பூஜையில் கலந்துகொண்டனர்.இந்த ஜோயித்தாவை பார்த்த வாசுவிற்கு வேதாளம் மீண்டும் முருங்க மரம் ஏறிய கதையாக மனதிற்குள் ஆபாச எண்ணங்கள் ஓட தொடங்கின."பேசாம படத்துக்கு இவளை ஹீரோயனா select பண்ண்யிருக்கலாம்..ஆயிரம் சொல்லு செம்ம கட்டை டா இவ..சரி பரவாயில்லை இப்போ select பண்ணியிருக்கிற ஹீரோயினும் அதுக்கு பொருத்தமாத் தான் இருப்பா" - மனதிற்குள் நினைத்து கொண்ட வாசு ஜோயித்தாவை பார்த்து பெருமூச்சு விட்டான்.ஜோயித்தாவோ வாசுவை கண்டுகொள்ளாமல் ஸ்ரீதருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு கிளம்பினாள்.

படத்தின் கதை கண்ணப்பனுக்கு பிடித்து விட்டது. வாசுவுக்கும் இந்த கதையை விளக்கி விட்டான் ஸ்ரீதர்.ஆனால் வாசுவோ ஸ்ரீதர் சொன்ன கதையையோ அல்லது கதையை சொன்ன ஸ்ரீதரை வெகுவாக ரசிக்கவில்லை.இதை ஸ்ரீதரும் கவனிக்கத் தவறவில்லை.இவற்றை விட ஸ்ரீதருக்கு எரிச்சலூட்டிய விஷயம் என்னவென்றால் தான் சொன்ன கதையை கேட்டு அந்த கதையில் வாசு சொன்ன மாற்றங்கள் தான். கதைக்கு சற்றும் சம்மந்தமே இல்லாமல் கதாநாயகியுடன் முத்த காட்சிகள்,படுக்கையறை காட்சிகள்,கதாநாயகியுடன் ஒரு மிக நெருக்கமான மசாலா பாடல் என அனைத்தையும் சேர்க்க வேண்டுமென வற்புறுத்தியது ஸ்ரீதருக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது.தான் சொல்லும் பெண்ணைத்தான் கதாநாயகியாக்க வேண்டுமென திட்டவட்டமாக கூறி விட்டான் வாசு.கண்ணப்பனும் அதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை.இவர்கள் இருவரின் 'எதிர்பார்ப்புகளை' அனைத்து விதத்திலும் 'பூர்த்தி' செய்திருந்த அந்த கதாநாயகியை மாற்ற வேண்டுமென ஸ்ரீதர் சொன்னால் உடனடியாக மாற்றி விடுவார்கள்.கதாநாயகியை அல்ல,படத்தின் டைரக்டரை. மிகுந்த ஆர்வத்துடன் கதை சொல்ல வந்த ஸ்ரீதர் ஏமாற்றத்துடன் தான் திரும்பி வந்தான்.

சுவாரஸ்யமாக ஏதோ புத்தகங்களை புரட்டி கொண்டிருந்த காதர் பாயிடம் நடந்தவற்றை எல்லாம் மிகுந்த வேதனையோடு சொல்லி முடித்தான் ஸ்ரீதர்.

"தம்பி இவ்வளவு நாள் சந்திச்சது சோதனை இல்லை..இது தான் ஆரம்பம்..இன்னும் நீ நிறைய பார்க்க வேண்டி இருக்கும்"

"பாய்,இந்த ஹீரோ கம்மினாட்டி தன்னோட ஆசையை எல்லாம் தீர்த்துக்கனம்னு என் கதையை கண்ணா பின்னான்னு மாத்த சொல்றான் பாய்..இவன் சொல்றபடி செஞ்சா என் கதை 10% தான் இருக்கும், பாக்கி 90% கதை அந்த வாசுவோட கதையா தான் இருக்கும்.."

"நீ ஒன்னும் prove பண்ண டைரக்டர் இல்லையேப்பா.."

"அதுக்காக?"

"அதுக்காக நீ சில compromises பண்ண வேண்டி இருக்கும்..என்னை பத்தி உனக்கு தெரியாத ஒரு விஷயத்தை சொல்றன் கேளு..உன்னை மாதிரி தான் நானும் இங்க வந்தேன்..டைரக்டராகனோம்,சாதிக்கனம்னு தான் கிளம்பி வந்தேன்..இப்படி ஒரு ஹீரோ கேட்டதுக்கு ஒத்துழைக்க மாட்டேன்னு சொன்னதோட விளைவு தான் இன்னைக்கு வெறும் துணை நடிகர்கள் ஏஜண்டாவே இருக்கேன்..வாய்ப்பு வர்றப்போ பயன்படுத்திக்கோ"

"ஆனா பாய் அந்தாளு சொல்றதெல்லாம் எப்படி...?" - என இழுத்த ஸ்ரீதருக்கு அறிவுரை சொல்ல தொடங்கினார் காதர்.

"அவன் சொல்றதெல்லாம் சேர்த்தா என்ன?உன் கதை வெறும் 10% தான் வருதுன்னு சொன்னியே..அதுல கவனம் செலுத்து..பெரிய ஹீரோ படம்..நல்ல பப்ளிசிட்டி இருக்கும்..ஒரு ஹிட் கொடுத்துட்டா போதும்..நாளைக்கி நீ தான் டாப்..இல்லைன்னு அடம் பிடிச்சா நேத்து எப்படி ஒரு காதரோ இன்னைக்கி அப்படி ஒரு ஸ்ரீதர்னு கதை முடிஞ்சிடும்" - என காதர் பாய் சொன்ன அறிவுரையை கேட்ட ஸ்ரீதர்,ஓரளவு convince ஆனான்.


                                                       ***************************


 ன் படத்தில் ஒரு விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நடிகை தேடிக்கொண்டிருந்தான் ஸ்ரீதர்.ஸ்ரீதரின் எதிர்பார்ப்பு என்னவென்றால் வெறும் சிவந்த தோல் பெண்ணாக இருந்தால் போதாது.சற்று குண்டாக, அதே சமயம் சற்று அழகாகவும் வயது குறைவாகவும் இருக்க வேண்டும்.முக்கியமாக இதுவரை படங்களில் அறியப்படாத  நடிகையாக இருக்க வேண்டும் ஏனெனில் ஸ்ரீதரின் கதையில் இந்த கதாபாத்திரத்துக்கு ஒரு தனி முக்கியத்துவமுண்டு. நடிக்க சான்ஸ் கேட்டு விண்ணப்பம் அனுப்பியிருந்த ஒரு சில பெண்களின் ஸ்டில்ஸை(stills) பார்த்தான்.தன் எதிர்பார்ப்புக்கேற்ற பெண் கிடைக்கவில்லை. ப்ரொடக்ஷன் மேனேஜர் உதவியுடன் சான்ஸ் கேட்டு காத்திருக்கும் பெண்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்றான் ஸ்ரீதர்.

அங்கே சிவப்பு நிற சேலையை அறையும் குறையுமாக உடுத்தி இருந்த ஒரு பெண்ணை கண்டான்.சென்னை தமிழின் பொன்னான வார்த்தைகளில் அர்ச்சனை செய்து கொண்டிருந்தால் அந்த பெண்.

"அய்யே கசுமாலம் எப்டி பொது பாத்தியா..பையில மொத்தமா பத்து ரூவா இல்ல,இது மொகறைக்கெல்லாம் பொம்பள சுகம் கேக்குது..ஈத்தர நாயிங்க கண்டவன் காசுல குச்சிட்டு எவ கிடைப்பான்னு கொயுத்து போயி அலையறானுங்க.. துத்தேறி நாரப்பய மொவன்..."

"இந்த பொண்ண நடிக்க வைச்சா வசனம் எழுதிற வேலை கூட மிச்சம் போலே" - என எண்ணிய ஸ்ரீதர் மனதில் ஏதோ ஒரு குழப்பம் தோன்றியது.அந்த பெண்ணை அருகில் நெருங்க நெருங்க ஸ்ரீதருக்கு குழப்பம் அதிகமானது..முந்தானை விலகி முழங்கால் தெரியுமளவு புடவையை தூக்கி கட்டியிருந்த அந்த பெண் தலைவிரி கோலமாக நின்றதை கண்டு ஸ்ரீதர் திகைத்து போய் நின்றான்.

"அட..யார்பா நீ...அப்டி பாக்குற..சட்ட பேண்டு கூலிங் க்ளாசு எல்லாம் போட்டுகினு ஷோக்கா கீறியே..ஈரோவா நடிக்க போறியா" - என கேட்ட அந்த பெண் பாக்கு போட்டு துப்பினாள்.

"நீ..நீங்க?" - என இழுத்தான் ஸ்ரீதர்

"அட இன்னாயா வேணும்..சொல்லி தோழா அத்த வுட்டு இப்டி இஸ்துனுக்கீறியே"

"உன்னை நான் பார்த்திருக்கன்..'அத்தை மகள் ஆனந்தி' பட ஷூட்டிங் ஸ்பாட்ல பார்த்திருக்கேன்..நீ நீ  நடிக்க சான்ஸ் கேட்டு வந்த ராணி தானே?"

இதை கேட்ட அந்த பெண் சற்று நிலைகுலைந்து போனாள்.பிறகு பதிலளிக்க தொடங்கினாள்.

"அது அப்போ நைனா..இப்போ நான் ராத்திரில மட்டும் தான் ராணி.."

"நீ எப்படி இப்படி ஆனே ராணி?உன்னோட ஆல்பத்தை நீ அன்னைக்கு தவற விட்டுட்டு போய்ட்ட..உன்னோட அந்த அப்பாவித்தனமான முகமும் முழியும் இன்னும் கண்ணிலேயே இருக்கு எனக்கு..நான் துணை நடிகனா இருந்தப்போ உன்னை பத்தி ஒரு ரெண்டு மூணு தடவை விசாரிச்சிருக்கேன்..but கண்டுபிடிக்க முடியல..ஏன் இப்படி ஆய்ட்ட?" - திடீரென ராணியை இந்த கோலத்தில் கண்ட ஸ்ரீதர் ஏதோ ஒரு குழப்பத்திலேயே கேள்வி கேட்டான்.

இந்த நான்கு வருடங்களில் தன்னிடம் இந்த கேள்வியை ஒருவர் கூட கேட்டதில்லை.ஸ்ரீதர் உண்மையான அக்கறையுடன்  இப்படி கேட்கவே தன்னையறியாமல் கண் கலங்கி விட்டாள் ராணி.நடந்ததெல்லாம் ஒரு சில நிமிடங்கள் ராணியின் மனத்திரையில் ஓடின.சினிமா ஆசையில் அப்பாவின் பேச்சை மீறி யாரோ ஒரு மாமா பையலின் பேச்சை கேட்டு வீட்டை விட்டு வெளியேறிய அன்று பிடித்தது இந்த தரித்திரம். ஸ்க்ரீன் டெஸ்ட் என்கிற பெயரில் அன்று கண்ணப்பன் செய்த அட்டூழியங்கள் ராணியின் நினைவிற்கு வந்தன.

"அதாவது குட்டி..உன் பேரென்ன சொன்ன,அஆன் ராணி..நீ அழகா இருக்க ஆனா நீ ஹீரோயின் ஆகனமுன்னா இன்னும் நிறைய கத்துக்கணம்"  - என கூறி இடையில் கை வைத்த அன்றே கண்ணப்பன் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை கொடுத்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்குமா? "நீ என்னை கவனிச்சிகிட்டன்னு வை உன்னை நான் கவனிச்சுக்குவன்" - என தன்னையும் அணைத்து விளக்கையும் அணைத்த அன்றே தன் வாழ்க்கையும் இருட்டாகிவிட்டதை எண்ணிய போது இப்போதும் கூட ராணியின் உள்ளம் பதறியது.இவை அனைத்தையும் ஸ்ரீதரிடம் சொல்லி முடித்தாள்.

"இவ்வளவு ஆனதுக்கப்புறமும் அவன் உனக்கு சான்ஸ் தரலையா?நீ போய் பாத்தியா அந்தாளை?"

"பாக்காம என்ன..போனதுக்குத்தான் அந்த கெழவன்,'நீ செஞ்ச வேலைக்கி நேத்திக்கே உனக்கு சம்பளம் குடுத்துட்டனே இன்னும் என்னன்னு' நக்கலா பேசி அனுப்சிட்டான்..

"போலீஸ்ல  complain பண்ண வேண்டியது தானே?"

"போலீசா..அட இன்னாபா நீ இம்மாம் பெர்சா வளந்துக்கிற..கொயந்தயாட்டும் பேசறியே..இங்க முக்காவாசி போலீஸ்காரனுங்க நம்ம customer தான்"

இதை கேட்ட ஸ்ரீதருக்கு ஆத்திரம் பொங்கியது..அதை கவனித்த ராணி,

"நீ எதுக்குய்யா டென்ஷன் ஆயினுக்கீர..எல்லாம் விதி..ஒழுங்கா அப்பா பேச்ச கேட்டு காலேஜ்ல படிச்சிருந்தா இந்நேரம் B.Ed படிச்சிருப்பேன்..இப்போ என் பொயப்பு இப்படி ஆய்போச்சி.."

"நீ ஏன் திரும்ப வீட்டுக்கு போல?"

"போவாம என்ன..அதுக்குள்ள எவனோ ஒரு ஊடுகொளுத்தி 'உன் பொண்ணு அந்த மாமா பைய சலீமோட ஓடி போயிட்டா'ன்னு எங்கப்பனாண்ட வத்தி வச்சிட்டான்..அந்தாளு ஒரே பேச்சா சொல்லிட்டான்,சினிமா படத்துல வர்ற மாதிரி.. "உன்ன நாங்க தல முழுகி ஒரு வாரம் ஆச்சு"ன்னு சொல்லிட்டான்..எங்க சித்தி மூதேவி ஒன்னு போதுமே,
"இந்த வீட்ல இன்னொரு படிக்கிற பொண்ணு இருக்கா.. அவ வாழ்க்கையையும் கெடுத்திராதே..இனிமே இந்த வீட்டு பக்கம் வந்துடாதே"ன்னு ஒரே போடா போட்டாளே பாக்கலாம்.."

"சரி ஒரு தபா நடந்துர்ச்சு,இனிமே என்ன நடந்தாலும் சரி,எவனாச்சு புடிச்சு எப்டியாச்சு ஹீரோயினி ஆய்டலாம்னு பார்த்தேன்..ஏன் ஆட்டமெல்லாம் பலிக்காம போச்சு..அதுக்கெல்லாம் ராசி வேணும்யா..அழகா இருந்தா மட்டும் பத்தாது.." - என சற்று உணர்ச்சி வசப்பட்டு கலங்கிய ராணி,திடீரென சுதாரித்து கொண்டு பேசலானாள்,

"என்ன பெத்தவன் கூட இம்புட்டு அக்கறையா பேசினதில்ல..நீ ஒருத்தன் தான் பேசியிருக்க..ஆமா நீ யாரு,இன்னா matteru எங்க வந்துக்கீற?"

"இல்லை என் படத்திலே ஒரு characterல  நடிக்க ஒரு பொண்ணு வேணும்..இங்க சான்ஸ் கேட்டு வர்ற பொண்ணுங்க தங்கியிருக்கிறதா ப்ரொடக்ஷன் மேனேஜர் சொன்னார்..அதான் வந்தேன்.."

"ஹ்ம்ம்..நீயாச்சு நடிக்க வைய்யா..ஸ்க்ரீன் டெஸ்ட் எடுக்கிறேன்னு இன்னொரு பொண்ணு வாழ்க்கைய நாசமாக்கிராத.."

"ராணி இப்போவும் படத்திலே நடிக்கிற ஆசையிருக்கா உனக்கு?"

வெறியோடு தேடிய போது கிடைக்காத சந்தர்ப்பம்,வாழ்க்கையே திசை மாறி போன பின் கிடைத்தென்ன பயன் என நினைத்து கொண்டால் ராணி.ஆனாலும் நடிகையாகி விடடால் ஒரு சில வசதிகள் உண்டென்பதை உணர்ந்திராமல் இல்லை ராணி.அவள் உல் மனத்திலும் நடிகையாக வேண்டுமென்ற ஆசையும் அடியோடு அழிந்து விடவில்லை..

"இன்னாய்யா டமாஸ் பண்றியா"

"இல்லை நிச்சயம் உனக்கு என் படத்திலே நான் வாய்ப்பு தர்றேன்..ஆனா.."

"ஆனா இன்னாய்யா?"

"ஆனா 2 கண்டிஷன்..உனக்கு என்னோட அடுத்த படத்திலே தான் வாய்ப்பு தருவேன்..அதுக்குள்ள நீ இந்த தொழிலை நிறுத்தனம்"

"அப்போ சோத்துக்கு நா இன்னா செய்றதாம்..சோகா சொல்றியே தொயில நிறுத்துன்னு"

"ஏன் ஊருலகத்திலே வேற பொழப்பே இல்லையா என்ன?நீ இதுக்கு சம்மதிச்சா என்னோட அடுத்த படத்திலே உனக்கு நிச்சயம் ஒரு part உண்டு"

"சரி வாத்தியாரே..try பண்றேன்..இதெல்லாம் அம்மாம் சீக்கிரம் உட முடியாது..ஆனா கஷ்ட பட்டா சாதிச்சிடலாம்னு வச்சிக்கோ..ஒரு கேள்வி.."

"என்ன?"

"இந்த படத்திலே ஏன்னா வேசத்துக்குயா ஆள் தேடினிக்கீற?"

"Prostitute"

தேடி வந்த கதாபாத்திரம் கூட விலை மாது கதாபாத்திரமாகத் தான் வந்ததை எண்ணி சற்றே நொந்து கொண்டாலும், அவளுக்கு ஸ்ரீதரின் வார்த்தை நம்பிக்கயூட்டும்படியாக இருந்தது.

(தொடரும்...)  

Monday, January 23, 2012

மாஸ் மீடியா - 7

மாஸ் மீடியா -7
                                                            Start Camera Action


முந்தைய பாகங்களைப் படிக்க இங்கே செல்லவும்(click here)


உதவி இயக்குனராக பணியாற்றி கொண்டே ஸ்ரீதர் தனக்கு தெரிந்த திரையுலக பிரமூகர்கள் மூலம் தனியாக படம் இயக்க வாய்ப்பு கேட்டு கொண்டுத் தானிருந்தான்.ஒரு படம் இயக்க கதை மட்டுமே போதுமென நினைத்து கோடம்பாக்கத்துக்கு வந்த ஸ்ரீதருக்கு, தன் எண்ணம் தவறு என்று விளங்கவே சில வருடங்கள் தேவைப்பட்டது. ஒரு திரைப்படம் வெற்றி பெற நல்ல கதை மட்டுமே போதாது,தரமான இசை,கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிகர்கள், சிறப்பான ஒளிப்பதிவு,சாமார்த்தியமான மார்க்கெட்டிங் என பல விஷயங்களும் எத்தனை அவசியம் என்பதை உணர்ந்தான் ஸ்ரீதர்.நேரடியாக உதவி இயக்குனராகாமல் பல வித இன்னல்களுக்கும் ஆளாகி, கோடம்பாக்கத்தில் இருக்க ஏதோ ஒரு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு,ஹீரோ,ஹீரோயின்,இயக்குனர், ப்ரொடக்ஷன் மேனேஜர் என அனைத்து தரப்பினருக்கும் டீ-காபி கொண்டுவருவது,ஆப்பிள் ஜூஸ் கொண்டுவருவது, கார் துடைப்பது போன்ற பல எடுபிடி வேலைகளும் செய்த பிறகு தான் இன்று உதவி இயக்குனராகி இருக்கிறான். இப்படி பல தரப்பினருடனும் பழகியதால் ஒவ்வொரு தொழிலாளியின் கஷ்டத்தையும் உணர்ந்திருந்தான்.

ஒரு ஸ்டன்ட் மாஸ்டர் வயதான ஹீரோவுக்கு ஒரு விதமான சண்டைக்காட்சிகள் அமைக்க வேண்டும், நடுத்தர வயதுள்ள ஹீரோக்களுக்கு ஒரு விதமாகவும் மிக இளம் வயதினராக இருப்பவர்களுக்கு ஒரு விதமாகவும் அமைக்க வேண்டும்.இதில் சில ஹீரோக்கள் தங்கள் 'ரசிகர்களை' திருப்தி படுத்த அந்தரத்தில் பறந்து கொண்டே வில்லன்களை அடிப்பது போன்ற காட்சிகளும் வேண்டுமென்று demand செய்வதுண்டு.ஒரு சில நடிகர்கள் அபாயகரமான சண்டைக் காட்சிகளிலும் கூட doupe இல்லாமல் தாங்களே நடிக்கவும் செய்வார்கள்.அப்படி doupe இல்லாமல் இந்த நடிகர் நடித்து விட்டார் என்று அதையே கூட ஒரு விளம்பரப் பொருளாக்கி அதை வைத்தும் publicity தேடும் கதைகளும் கோடம்பாக்கத்தில் இல்லாமல் இல்லை.ஒரு சில நடிகர்கள் 40 மாடி கட்டிடத்திலிருந்து குதிப்பது போன்ற காட்சிகளில் risk  இல்லாமல் doupe போட்டு நடித்து விட்டு, "'doupe' போடாமல் நானே நடித்தேன் என்று சுய தம்பட்டம் அடித்து கொள்ளும் நகைச்சுவைகளும் இல்லாமல் இல்லை.

ஆங்கிலப்படங்களை அப்படியே தமிழில் உல்டா செய்யும் இயக்குனர்களும் இல்லாமல் இல்லை.அந்த படங்களில் வரும் வசனங்களைக் கூட அப்படியே தமிழில் மொழி மாற்றம் செய்து படமெடுத்து விட்டு தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு உயர்த்தி விட்டதாக மார்தட்டி கொள்வதும் ஒரு வித  fashion இப்போது. ஒரு முறை தன் குருநாதர் சுகுந்தனே சில காட்சிகளை ஒரு கொரிய படத்திலிருந்து அப்படியே உல்டா செய்து தனது படத்தில் வைத்திருந்ததை கண்ட ஸ்ரீதருக்கு ஒரு வித disappointment. அப்போது இப்படித்தான் சுகுந்தன் பதிலளித்தார்,

"ஸ்ரீதர், 'The secret to creativity is knowing how to hide your sources.' - இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது. இதெல்லாம் ஒன்னும் தப்பில்லை.. இங்க யாருடைய கதையும் 100% உண்மையான கதை இல்லை."

"அதெப்படி?" - ஸ்ரீதர்

" There will be an inspiration behind every imagination. அந்த inspiration எதுவா வேணும்னாலும் இருக்கலாம்.ஒருத்தர் வாழ்க்கைல நடந்த சம்பவமோ,இல்லை நாம படிச்ச புஸ்தகமோ இல்லை நாம பார்க்கிற ஏதோ ஒரு விஷயமோ..இப்படி எதுவா வேணும்னாலும் இருக்கலாம்..ஒத்துக்குறியா ஸ்ரீதர்?"


ஸ்ரீதர், ஆமோதிப்பது போல் தலையசைத்தான்.

"அதே தான் இதுவும்.So எல்லாமே ஒரு வித inspiration தானே ஸ்ரீதர்" - இப்படி பேசி ஸ்ரீதரின் வாயை அடைத்து விட்டார் சுகுந்தன்.

இத்தனை விஷயங்களை பார்த்ததாலோ என்னவோ சினிமாவைப் பற்றி முழுவதும் புரிந்து கொண்டு விட்டதாக எண்ணினான் ஸ்ரீதர்.அவனுடைய வாய்ப்பு வேட்டை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் ஒரு எதிர்பாராத செய்தி அவனுக்காக காத்திருந்தது.

ஸ்ரீதரின் Cellphone ஒலித்தது.அறிமுகமில்லாத நபரிடமிருந்து அழைப்பு.ஒரு வேளை Kotak Mahindra வங்கியின் சேமிப்பு திட்டத்தை பற்றி பேச, வரும் வழக்கமான இம்சையோ என நினைத்து அழைப்பை துண்டிக்க நினைத்தான்.ஆனால் அப்படிச் செய்யாமல் அழைப்பை ஏற்று பேசினான்.

பேசி முடித்த சில நிமிடங்கள் ஸ்ரீதர் ஆகாயத்தில் பறப்பதை போலவே உணர்ந்தான்.இது நிஜம் தானா? இல்லை இன்னும் உறக்கத்தில் தான் இருக்கிறோமா என கூட தன்னை கிள்ளி சோதித்து கொண்டான்.பெற்ற இன்ப அதிர்ச்சியால் சிறிது நேரம் செய்வதறியாமல் தவித்த ஸ்ரீதர் பிறகு சுதாரித்து கொண்டு சுகுந்தன் வீட்டில் இருக்கிறாரா என தெரிந்துகொண்டு,உடனே அவர் வீட்டுக்கு புறப்பட்டான்.

"என்னய்யா ஸ்ரீதர் இப்படி திடீர்ன்னு வந்து நிக்கிற? என்ன சமாச்சாரம்?" - சுகுந்தன்

"சார் ஒரு முக்கியமான விஷயம்.ரொம்ப சந்தோஷமான விஷயம் சார்.கண்ணப்பன் சார் எனக்கு phone பண்ணார்.."

"சீக்கிரம் சொல்லுப்பா என்ன விஷயம்..நல்ல விஷயம்னு வேற சொல்ற..கேட்கிறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கேன்"

"நான் எழுதி வைச்சிருந்த ஒரு கதைய கொஞ்ச நாளைக்கு முன்னாடி கண்ணப்பன் சார் கிட்டே narrate பண்ணியிருந்தேன்...அது விஷயமாத்தான் phone பண்ணாரு"

என்ன பேசியிருப்பார்கள் என ஒருவாறு ஊகித்துவிட்டார் சுகுந்தன்.ஆனாலும் ஸ்ரீதர் பேசி முடிக்கும் வரை அமைதி காத்தார்..ஸ்ரீதர் தொடர்ந்தான்..

"அவர் அடுத்து தயாரிக்கிற படத்துக்கு என்னையே டைரக்டரா போடறதா முடிவு பண்ணிட்டாங்களாம் சார்.. இத்தனைக்கும் என்ன recommend பண்ணது 'Silver Star' வாசு தானாம்..கூடிய சீக்கிரம் ஷூட்டிங் ஆரம்பிக்க போறாங்களாம்..என்னை நாளைக்கு அவரோட officeல வந்து பார்க்க சொல்லியிருக்காரு.."

"தனியா படம் டைரக்ட் பண்ண போறியா?" - சுகுந்தன் உண்மைலேயே அதிர்ச்சி அடைந்துத் தான் போனார்.

"ஆமாம் சார்..திடீர்னு இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சதும் எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை..எனக்கு சினிமாவிலே நுழையறதுக்கு pass வாங்கிக்கொடுத்தவரு நான் பெருசா மதிக்கிற காதர் பாய்..ஆனா சினிமான்னா என்னன்னு கத்து கொடுத்த குரு நீங்க தான் சார்..அதான் உங்க கிட்டே ஆசீர்வாதம் வாங்கிட்டு போலாம்னு வந்தேன்"

"உனக்கு சினிமா பத்தி என்ன தெரியும்?ஒரு படம் தனியா டைரக்ட் பண்றதுக்கு தேவையான அனுபவம் உனக்கு  இல்லை..நீ இன்னும் நிறைய கத்துக்கணம்..அதுவும் கண்ணப்பன் தயாரிக்கிற படத்துலயா டைரக்டரா அறிமுகமாகுற?இது நல்லதுக்கே இல்லை" - இப்படித் தான் சொல்ல நினைத்தார் சுகுந்தன். ஆனால் தான் இதைச் சொன்னால் ஸ்ரீதர்,கிடைத்த வாய்ப்பை தான் கெடுப்பதாகவும்,ஸ்ரீதரின் முன்னேற்றத்தை தடுப்பதாகவும் தான் எண்ணிக்கொள்வான்.அதனால்,

"ரொம்ப சந்தோஷம் தம்பி.நீ நிச்சயம் பெரியாளா வருவா..உனக்கு என்னோட ஆசீர்வாதம் எப்போவும் உண்டு..வாழ்த்துக்கள்"

ஸ்ரீதர்,சுகுந்தனின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.தட்டி கொடுத்து எழுப்பினார் சுகுந்தன்.விடை பெற்று சென்ற ஸ்ரீதர் வாசலை அடைந்த போது,திடீரென சுகுந்தன்,

"ஸ்ரீதர்,இந்த படத்துக்கு உன்னை யாரு recommend பண்ணதா சொன்னே?"

"'சில்வர் ஸ்டார்' வாசு சார்..இந்த படத்துக்கு ஹீரோவும் அவர் தான்"

                                                     ***************************

குடித்து விட்டு படுக்கையறையில் விரக்தியாக விழுந்து கிடந்தான் சரண்.இப்போது அவனிடம் மிச்சமிருப்பது இந்த வீடும் தன்னுடைய காரும் மாட்டும் தான்.அரசியல் ஒரு மனிதனின் வாழ்க்கையை பல விதத்தில் திசை திருப்பும் வல்லமை கொண்டது.அதுவும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரென்றால் கேட்கவே வேண்டாம்.அரசியலுக்கு வந்தாலும் குற்றம் வராவிட்டாலும் குற்றம்.அரசியல்வாதி ஆதரித்தாலும் சரி, எதிர்த்தாலும் சரி,ஒரு வித ஆபத்து நம்மை நெருங்குகிறது என்றே பொருள்.கடும் புயல் ஏராளமான நாச காரியங்களை செய்த பிறகு நிலவும் ஒரு வித அசவுகரியமான நிலை தான் இங்கும் நிலவுகிறது.தர்மராஜ் தனது தந்தைக்காக பிரச்சாரத்திற்காக அழைத்த போது அதை மறுத்து விட்டான் சரண்.ஆனால் தர்மராஜோ விடாமல் வற்புறுத்த தொடர்ந்து சரண் மறுக்க,வாக்குவாதம் எல்லை மீறி சென்று விட்டது.இருவருக்கும் இடையில் நடந்த இந்த சொற்போரால் கடும் பாதிப்புக்கு உள்ளானதென்னவோ சரண் தான்.

தன்னுடைய 'பன்னீர் செல்வன்' படம் தர்மராஜ் தரப்பால் கிடப்பில் போடப்பட்டது.சோழ ராஜாவாக தான் நடிக்க இருந்த 'அதிசய கனவு' படமும் பகல் கனவாகிவிட்டது.படம் தற்காலிகமாக தான் நிறுத்தப்பட்டுள்ளது என்று பரவலாக பேசி கொண்டாலும்,இனி அந்த படம் தொடர்வதற்கு எந்த ஒரு சாத்தியக்கூறும் இல்லை.தர்மராஜோ அரசியல்வாதி,தனது புத்தியை காட்டி விட்டான்.

அது மட்டுமில்லை ஒரு வேளை வேற படம் ஒத்துக்கிட்டாலோ இல்லை இந்த படத்திலே நடிக்க மறுத்தாலோ படத்துக்காக ஆன மொத்த செலவும் வட்டியோட திருப்பி கொடுக்கனம்


இப்படி எழுதியிருந்த ஒப்பந்தத்தில் சரண் கையெழுத்து இட்டதால் அவனிடமிருந்து பல கோடி ருபாய் பிடுங்கி விட்டது தர்மராஜ் தரப்பு.மேற்கொண்டு சரனை வைத்து எந்த ஒரு தயாரிப்பாளரும் படமெடுக்க முன்வராத அளவிற்கு தர்மராஜ் தரப்பு வேலை பார்த்து விட்டது.தற்செயலாக சரணின் மற்ற சில வியாபாரங்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்தன.தன்னுடைய சொத்துக்கள் பலவற்றை விற்றுத் தான் அவற்றிற்கு ஈடு கட்ட வேண்டியிருந்தது.சுருக்கமாகச் சொன்னால் இன்று சரண் ஒரு 'மாடி வீட்டு ஏழை'.


இது போதாதென்று சரணுக்கு பிரபாவதி என்ற நடிகையுடன் இருந்த தொடர்பையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டான் தர்மராஜ்.அந்த பிரபாவதியை தனது பக்கம் சேர்த்து கொள்ள சில லட்சங்கள் செலவழித்த தர்மராஜ், அவளை வைத்தே சரணுக்கு இருந்த மதிப்பை முழுவதுமாக சீர்குலைத்தான் .இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் சில படங்களை, 'மூன்றாவது கண்' பத்திரிக்கையின் மூலம் வெளியிட செய்தான் தர்மராஜ்.இது போன்ற படங்களை வெளியிடுவதையே தொழிலாக கொண்ட அந்த பத்திரிகை,இந்த புகைப்படங்களை வைத்து இவர்களுக்குள் இருந்த உறவை எத்தனை ஆபாசாமாக சித்தரிக்க முடியுமோ அத்தனை ஆபாசாமாக சித்தரித்து ஒரு சில கட்டுரைகளை வெளியிட்டது.இது சரண் தான் செய்தான் எனவும்,தான் மிகவும் நம்பிய சரண் தன்னை ஏமாற்றி விட்டான் எனவும் பத்திரிக்கைகளில் கண்ணீர் மல்க பேட்டியளித்தாள் பிரபாவதி.இந்த பேட்டிக்கு பின்னணியில் இருந்ததும் தர்மராஜ் தான்.


பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை இழந்து,மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தையும் இழந்து,அடுத்து எந்த பட வாய்ப்புகளுமின்றி ஒரு ஜடம் போலத்தான் இருந்தான் சரண்.வெந்த புண்ணில் வேல் பாய்ந்ததைப் போல,பிரபாவதியுடன் தனக்கிருந்த தொடர்பு வெளிப்பட்டதால், மீதமிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய் விட்டது. இன்று சரண் ஒரு தனிமரம்.அவனுக்கு இப்போது இரண்டே இரண்டு நண்பர்கள் தான்.ஒன்று மது மற்றொன்று விவேக், ஆனால் இவர்கள் இருவரில் சரண் தனக்கு மிக ஆறுதலாக கருதுவது மதுவைத்தான்.உண்மையில் சரணுக்கு நன்மை செய்வதென்னவோ விவேக் ஒருவன் தான்.அனைத்தையும் சரண் இழந்து விட்டபோதிலும் இன்று சரணிடம் இருப்பது தன் வீடு ஒன்று தான்.அதை காப்பாற்றிய புண்ணியம் விவேக்கைத் தான் சேரும்.இப்போதும் கூட தன்னால் இயன்ற வரை சரணுக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.நாய்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் நன்றி உணர்வு உண்டென்று விவேக்கைப் பார்த்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

"பாஸ் பாஸ்..எழுந்திறீங்க..இங்க பார்த்தீங்களா?இந்த நியுச?" - அரக்க பறக்க ஓடி வந்தான் விவேக்.சற்றும் அலட்டி கொள்ளாமல் எழுந்தான் சரண்.'தண்ணீரில் மிதப்பது' என்று கூறுவார்களே,அது சரணுக்குத்தான் பொருந்தும்.முழு மப்பில் எழுந்து உட்காந்தான்.

"என்னடா நியுசு..ஏன் இப்படி பறக்கிற,நிம்மதியா தூங்கக்கூட விடாதிங்க.." - ஏதோ எரிச்சலுடன் பேசினான் சரண்.

"பாஸ் உங்க அதிசய கனவு படத்த drop பண்ணிட்டாங்க.." - என தொடங்கிய விவேக்கை இடைமறித்து

"அது தான் எப்போவோ தெரியுமே..என்னவோ புது விஷயம் மாதிரி பேசற..இத சொல்லவா என் தூக்கத்தை கெடுத்த.."

"இல்லை பாஸ்..முழுசா கேளுங்க..உங்க படத்தை drop பண்ணிட்டு இப்போ திரும்ப தர்மராஜ் கம்பனிக்கு நீலகண்டன் ஒரு படம் டைரக்ட் பண்றாராம்.."

"அவன் எக்கேடு கேட்டு நாசமா போகட்டும்..இப்போ அதுக்கென்ன"

"அதுல அந்த தர்மராஜே ஹீரோவா நடிக்கிறானாம்..என்ன அநியாயம் பாஸ் இது"

"பரதேசி நாய்..அவன் மூஞ்ச பாரேன் விவேக்..எப்படி இருக்குன்னு" - ஆத்திரமும் விரக்தியும் கலந்த ஒரு சிரிப்புடன் சரண் தொடர்ந்தான்,

"எரிஞ்சிட்டிருக்கிற பொணத்தை(பிணத்தை), எழுப்பி அதுக்கு powder அடிச்சு விட்டா எப்படி தெரியுமா இருக்கும், இல்லை எப்படி இருக்கும் தெரியுமா? இதோ பேப்பர்ல சிரிசிகிட்டே pose கொடுத்திருக்கான் பாரு இந்த எச்சக்கலை பையன் இவன மாறித்தான் இருக்கும்..ஏன்டா இவனுங்க எல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே பட மாட்டானுங்கள டா..கையில காசு,ஆட்சி, அதிகாரம் எல்லாம் இருக்குன்னு கண்ட கழிசாட பசங்களும் ஹீரோ ஆயிடறாங்க.."

"பாஸ் ரிலாக்ஸ்.." - சரனை சமாதானப்படுத்த முயன்றான் விவேக்,பலனில்லை..மீண்டும் மது அருந்திவிட்டு தொடர்ந்தான் சரண்,

"இந்த புறம்போக்கு நாயிக்கு நடிப்புன்னா என்னன்னு தெரியுமா விவேக்?இவனையும் வைச்சு படமெடுக்க ஒத்துகிட்டானே அவன சொல்லனம்..இல்லை பாவம் அவன் என்ன செய்வான்..இந்த கம்மனாட்டி பைய மிரட்டியிருப்பான்..ஒரே வார்த்தைல சொல்லட்டுமா? இந்த தர்மராஜ் ஒரு 'genuine bastard'..தா..." - வெறுப்பின் உச்சத்துக்கே போன சரணை,விவேக் இடைமறித்து,

"பாஸ் cool down பாஸ்..நீங்க தர்மராஜை இப்படி திட்டுவீங்கன்ற காரணத்துக்காக இதை நான் உங்க கிட்ட சொல்லலை..நீங்க நடந்ததையே நினைச்சி இப்படி வீட்டுக்குள்ளயே கிடந்தீங்கன்னா அதனால உங்களுக்கு ஒரு நல்லதும் நடக்க போறதில்லை"

"இல்லைன்னா மட்டும்..அட போயா"

"பாஸ் நீங்க கொஞ்சமாச்சு வெளி உலகத்தை பார்க்கணம்னு சொல்றேன்..உங்களுக்கு அட்வைஸ் பண்றதுக்கு எந்த தகுதியும் இல்லாதவன் தான் நான்..ஒத்துக்கிறேன்...ஆனா உங்க நண்பனா சொல்றேன்,தயவு செய்து நாலு இடத்துக்கு போயிட்டு வாங்க..எவ்வளவு பிஸி schedule இருந்தாலும் கூட நீங்க இளையராஜாவோட திருவாசகம் சிம்போனிய கேட்காம ஒரு நாள் கூட  இருந்ததில்லை..திரும்பவும் இதிலே எல்லாம் கவனம் செலுத்தனம்.. இது என்னோட request" - அடக்கமாக பேசி முடித்தான் விவேக்..

மீண்டும் மது அருந்தத் தொடங்கினான் சரண்.


(தொடரும்...)



Friday, December 30, 2011

மாஸ் மீடியா - 6

மாஸ் மீடியா -6
                                                            Start Camera Action


முந்தைய பாகங்களைப் படிக்க இங்கே செல்லவும்(click here)

 'திசய கனவு' படத்தில் விக்ரம சோழன் கதாபாத்திரத்தில் கம்பீரமாய் தோன்ற வேண்டுமென்பதற்காக கடும் உடற்பயிற்சி மேற்கொண்டான்.ஒரு சில காதல் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டிருந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடித்துக்கொள்ளப்பட்டது.இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கவில்லை. இதற்கிடையில் தீபாவளிக்கு வெளிவரவிருந்த தனது மாஸ் படமான 'பன்னீர் செல்வன்' படத்தை தர்மராஜே வாங்கிவிட்டார். படம் திட்டமட்டபடி தீபாவளிக்கு வெளியாகவில்லை. "படத்துக்கு promotion போதாது சரண்..நம்ம பேனர்ல மார்க்கெட் பண்ணா சப்ப படம் கூட சுப்பர் ஹிட்டாகும்.. அதனால படத்த அடுத்த மாசம் ரிலீஸ் பண்ணிடலாம்..அதுக்குள்ள நல்லா மார்க்கெட் பண்ணிடலாம்...." - என்று கூறி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தார் தர்மராஜ். இதில் சரணுக்கு சற்றும் உடன்பாடில்லை தான்.ஆனாலும் வேறு வழியில்லை ஏனெனில்,நல்ல விலை என்றதும் அந்த படத்தின் தயாரிப்பாளர், தர்மராஜுக்கு விற்றுவிட்டார்.

விவேக்கை கடுமையாக திட்டியதை எண்ணி வருந்தினான்.ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்பொழுது நடந்த வாக்குவாதம்:

"பாஸ் இந்த படத்த ஒத்துக்காதிங்க..ஆக்ரீமென்ட்ட நான் முழுசா படிச்சிட்டேன்.."  - விவேக்

"அப்போ நான் படிக்கலன்னு சொல்லுறியா?" - சரண்

"பாஸ் argue பண்றதுக்கு இது நேரமில்லை..இந்த படம் முடிக்கிறவரைக்கும் வேற எந்த படமும் commit  ஆகக்கூடாதுன்னு போட்டிருக்கு..அது மட்டுமில்லை ஒரு வேளை வேற படம் ஒத்துக்கிட்டாலோ இல்லை இந்த படத்திலே நடிக்க மறுத்தாலோ படத்துக்காக ஆன மொத்த செலவும் வட்டியோட திருப்பி கொடுக்கனம்னு போட்டிருக்கு..இது நல்லதுக்கே இல்லை.."

"விவேக்,இந்த படத்தோட பட்ஜெட் அதிகம்..அதனால ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும்..இதையெல்லாம் சகிச்சிகிட்டா தான் அடுத்த leagueல enter  ஆக முடியும்" - சற்று கடுமையாகவே சொன்னான் சரண்.

"அதுக்கு சொல்லல பாஸ்..நீங்க நான் சொல்றத புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க.."  - என தொடர்ந்த விவேக்கை கோபமாக பார்த்த சரண்,

"எனக்கென்ன சினிமானா ஒண்ணுமே தெரியாதுன்னு முடிவு பண்ணிட்டியா விவேக்?You are a smart  PA.Agreed!!! பட் நீ என்கிட்டே வேலை பார்க்கிற அதை மறந்திடாதே..நீ இந்த 4  வருஷமாத்தான் எனக்கு PA.ஆனா அதுக்கெல்லாம் முன்னாடியே நான் சினிமாவிலே நிறைய பார்த்தவன்.இன்னைய தேதிக்கு சரண் படம்னா ஒரு மார்க்கெட் இருக்கு.. நீ எனக்கு புத்தி சொல்றத விட்டுட்டு உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு.." - படபடவென பேசி பின் அமைதியானான்..விவேக்கும் மறுத்து பேசவில்லை..கடும் புயல் மழைக்கு பின் நிலவும் அமைதியைப் போல், அந்த அறையில் ஒரு வித அமைதி நிலவியது.பிறகு சுதாரித்து கொண்ட விவேக்,

"Sorry  பாஸ்..இனிமேல் இப்படி நடக்காது" - என்று பணிவாகவே பதிலளித்து விட்டு நகர்ந்தான்.

இப்படி பேசியதற்காக பல முறை வருத்தப்பட்டான் சரண்.தற்சமயம் படப்பிடிப்பும் இல்லை,வெளியாக வேண்டிய தனது படமும் வெளியாகவில்லை.இவை எல்லாம் சரணுக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது.இது ஒருபுறமிருக்க தயாரிப்பாளர் தர்மராஜ் தனது தந்தைக்காக தேர்தல் பணிகளை கவனிப்பதிலேயே மும்முரமாக இருந்தார். சரணுக்கும் அரசியலில் சற்று ஆர்வம் உண்டென்றாலும் அதைப்பற்றி சிந்திக்க இது நேரமில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்தான்.இப்படியே தனது தேதியை வீணடிக்க கூடாதென்று நினைத்தான், தர்மராஜிடம் படப்பிடிப்பை துரிதபடுத்தும்படி கேட்க வேண்டுமென்று முடிவெடுத்தான்.தர்மராஜை அழைக்க தனது கைப்பேசியை எடுத்தான்,ஆனால் அது உடனே ஒலிக்க தொடங்கிவிட்டது.அழைத்தது சாக்ஷாத் தர்மராஜே தான்.உடனே சரணை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்.

உடனே புறப்பட்ட சரண்,தர்மராஜின் அலுவலகத்தை அடைந்தான்.

"சரண் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனம்" - ஒரு வித்தியாசமான தொனியில் பேசினார் தர்மராஜ். எதுவும் புரியாமல் விழித்தான் நமது ஹீரோ சரண்.

"நம்ம தொகுதியிலே இடைத்தேர்தல் வருது.இந்த முறை அப்பா இங்க MP  போஸ்ட்டுக்கு நிற்கிறாரு.."

"சரி,அதுக்கு?" - ஒன்று புரியாத சரண்

"Opposition candidate கொஞ்சம் ஸ்ட்ராங்கான ஆளு தான்.அதனால நீங்க ஒரு உதவி செய்யணம்"

"நான் என்ன உதவி செய்ய முடியும் தர்மராஜ் சார்?எனக்கும் அரசியலுக்கும் ஏழாம் பொருத்தம்" - தெளிவாகவே சொன்னான் சரண்.

"சரண்,அரசியல்ல ரொம்ப முக்கியமான விஷயம் கூட்டம் சேர்க்கிறது தான்..என்னதான் காசு கொடுத்தும், பிரியாணி வாங்கி கொடுத்தும் கூட்டம் சேர்த்தாலும்,அது எல்லா கட்சிக்காரனும் செய்யறது தான்.நாம எப்போவுமே கொஞ்சம் differentன்னு உங்களுக்கு தெரியுமே"

"அதுக்கு என்னை என்ன செய்ய சொல்றீங்க Mr.தர்மராஜ்?" - என்று கேட்டான் சரண்.சரணுக்கு தர்மராஜின் நோக்கம் ஓரளவுக்கு புரிய ஆரம்பித்தது.

"நீங்க மக்கள் கிட்ட கொஞ்சம் பாப்புலரான ஆளு..நம்ம கூட படம் வேற பண்றீங்க..உங்களுக்குன்னு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கு..நீங்க மட்டும் அப்பாவுக்காக இங்க பிரச்சாரம் பண்ணா வரலாறு காணாத வோட்டு வித்தியாசத்துல அப்பா ஜெய்ச்சிடுவார்"

                                                     ***************************


தவி இயக்குனராக நன்றாக தேர்ச்சி பெற்றிருந்தான் ஸ்ரீதர்.ஊரிலிர்ந்து கிளம்பும்போது இயக்குனராகியே தீர வேண்டுமென்கிற லட்சியத்தில் தான் கிளம்பினான்.ஒரு திரைப்படத்தை இயக்குவது என்றால் ஏதோ மேடை நாடகத்தை இயக்குவது போலத்தான் என்றெண்ணி கிளம்பி வந்த ஸ்ரீதருக்கு, டைரக்ஷனில் எத்தனை இருக்கிறதென்பது உதவி இயக்குனராக பணிபுரியும்போது தான் புரிந்தது. இரவும் பகலும் ஓயாமல் உழைத்தாலும் சரி,கதாநாயகனின் காலணிக்கு பாலிஷ் போடுவதென்றாலும் சரி, கதாநாயகியின் நாயை கவனித்துக் கொள்வதென்றாலும் சரி சற்றும் கலக்கமடைந்துவிடவில்லை.இயக்குனராகியே தீரவேண்டுமென்கிற தனது லட்சியத்தை அடையும் நாள் நெருங்கிவிட்டதென்றே நினைத்தான்.

அப்போது இசையமைப்பாளருடன் சுகுந்தன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.படத்தின் முழுக்கதையையும் விவரித்துக் கொண்டிருந்தார்,நீண்ட நேரம் உரையாடிய பிறகு வந்தார், ஸ்ரீதருக்கு இது மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.

"ஸ்ரீதர் சொன்ன மாதிரி நூறு பொம்மை கழுதையை கொண்டு வந்துட்டியா?" - சுகுந்தன்

"எல்லாம் ரெடி சார்.நாளைக்கு ஷாட் எடுக்கறப்போ எல்லாத்தையும் வெளியில கொண்டு வந்துடலாம்." -  ஸ்ரீதர்

"Good good!!!சரி வா இப்போ கிளம்பலாம்..காலையில சீக்கிரம் வர வேண்டியிருக்கும்" - இருவரும் காரில் அமர்ந்தார்கள்.

"சார் எனக்கொன்னு மட்டும்  சுத்தமா புரியவே இல்லை" - ஸ்ரீதர்

"என்ன பா..என்ன புரியல?" - சுகுந்தன்

"மியுசிக் டைரக்டர் கிட்ட பாட்டு வர்ற situation மட்டும் explain  பண்ணா போதாதா?எதுக்கு மொத்த ஸ்க்ரிப்ட்டும் விளக்கணம்?" - ஸ்ரீதர்

"என்னப்பா இப்படி கேட்டுட்டே?நீ நினைக்கிற மாதிரி மியுசிக்னா சும்மா ஏதோ ரெண்டு டூயட்,ஒரு கில்மா பாட்டு,ஒரு டப்பாங்குத்து போட்டுட்டு போறதில்லை.. Music is lot more than தட்" - சுகுந்தன்

"என்ன சார்,2.30 மணி நேர சினிமாவிலே ஒரு அரைமணி நேரம் தான் பாட்டு..அதுக்கு இவ்வளவு importance அவசியமா?" - ஸ்ரீதர்

"ஸ்ரீதர்,இது ரொம்ப தப்பான ஒரு approach ..First  நீ சில விஷயத்த புரிஞ்சிக்கோ..ஒரு சூழ்நிலைக்கேற்ப பாட்டு போடறது ஒரு கலை..இந்த ஆர்டிஸ்ட்டுக்கு இந்த singer  பாடினா நல்லா இருக்குமென்கிற அளவுக்கு ஒரு இசையமைப்பாளர் யோசிக்கணம்.அதோட முக்கியம் சிச்சுவேஷனோட கரெக்டா பொருந்தனம். உதாரணத்துக்கு நீ வெள்ளி விழா படத்துல வர்ற "காதோடு தான் நான் பாடுவேன்"(click here to watch the song) பாட்ட எடுத்துக்கோ.. அந்த பாட்டு கேட்டிருக்கல்ல?"

"கேட்டிருக்கேன் சார்..நம்ம L R ஈசுவரி மேடம் பாடினது"

"Yes ..மியுசிக் டைரக்டர் யாருன்னு தெரியுமா?"

"என்ன சார் இது தெரியாதா..V Kumar தானே!!"

"கரெக்ட்..எங்க MSVன்னு சொல்லிடுவியோன்னு பயந்தேன்..அந்த பாட்டு எவ்வளவு melodiousஆ இருக்கும்.. அந்த பாட்டுக்கு,குமார் நினைச்சிருந்தா சுசீலா மேடமை பாட வைச்சிருக்கலாம்..ஆனா அவர் கொஞ்சம் வேகமான பாட்டெல்லாம் பாடுற ஈஸ்வரி மேடைமத் தான் select  பண்ணார்..அதான் ஒரு இசையமைப்பாளரோட sense of  observation..சுசீலா குரலோட ஈஸ்வரி மேடம் குரல் தான் அந்த பாட்டுக்கு பொருத்தமா இருக்கும்னு நான் சொல்றேன்..நீ என்ன சொல்ற?"

"இது வரைக்கும் நான் இப்படி யோசிச்சதில்லை..ஆனா L R ஈஸ்வரி மேடம் பாடினதோட நல்லா யாராலையும் அந்த பாட்ட பாடிட முடியாது"

"அந்த படத்தை டைரக்ட் பண்ண பாலச்சந்தர் சாருக்கு எப்போவுமே ஒரு நல்ல இசைஞானம் உண்டு"

"ஆமாம் சார்..அவரோட சிந்து பைரவி படத்திலே டிரைவரா வர்ற கவிதாலயா கிருஷ்ணன் கூட சங்கீத ஞானம் இருக்கிறவரா காட்டியிருப்பாரு.. அந்த scene(click here to watch the scene) பிரமாதமா இருக்கும் சார்..He is a real genius!!!..அதனால தான் MSV யோ இளையரஜவோ இல்ல மரகத மணியோ இல்ல நம்ம ரகுமானோ,யாரு மியுசிக் போட்டாலும் ஒரு class  இருக்கும்"

"Yes ..அப்படி பட்ட பாலச்சந்தர் சார் ஒரு மியுசிக் டைரக்டரோட முழுத்திறமையையும் பயன் படுத்துவார்..ஒரு பாடலாசிரியர் கிட்டயோ ஒரு மியுசிக் டைரக்டர் கிட்டயோ ஸ்க்ரிப்டை முழுசா விளக்குவாரு..அவர் மட்டுமில்லை இன்னும் சில டைரக்டர்சும் இப்படி செய்யறதுண்டு"

சுகுந்தன் பேசுவதை ஆர்வமாய் கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீதர்,அப்படியா என்பது போல் பார்த்தான்.

"நீ பாட்டைப் பத்தி மட்டுமே பேசறியே BGM பத்தி உனக்கு கொஞ்சம் கூட யோசனையே வரலையா என்ன?பின்னணி இசை ஒரு படத்துக்கு எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சிக்கோ..இப்போ எல்லாம் நிறைய மியுசிக் டைரக்டர்ஸ் பாட்டுல வாய்ச(voice) cut பண்ணிட்டு டியூன பின்னாடி ஓட விடறதுக்கு பேரு தான் BGMன்னு நினைச்சிட்டிருக்காங்க.. ஒவ்வொரு மூட்கும் எத்த மாதிரி இருக்கணம் மியுசிக்..action scenes வர்றப்போ கொஞ்சம் பரபரப்பா இருக்கணம், emotional scenes வர்றப்போ மனச உருக வைக்கிற மாதிரி இருக்கணம்,detective மாதிரியோ இல்ல suspense சீன்லையோ,audience அமைதியா உணர்ற மாதிரி இருக்கணம் ஆனா அதே சமயம் ஒரு haunting BGM இருக்கணம்,சத்தம் அதிகமா இருக்க கூடாது,ஒரு sensual - love making situation பொறுத்த வரைக்கும்,ஒரு போதை ஏத்திற மாதிரி BGM இருக்கணம்..இந்த மாதிரி சீன்ல சிணுங்கல் சத்தத்துல அதிகமா கவனம் செலுதிட்டா,அழகா ரீச் ஆக வேண்டிய காமம்,ஆபாசமா மாறிடும்,அது சில நேரத்திலே அருவருப்பாவும் போயிடும்..  " என்று ஒரு குட்டி சொற்பொழிவே நடத்தி முடித்தார் சுகுந்தன்.

இத்தனை விஷயங்களையும் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீதருக்கு மெய்சிலிர்த்து போனது.சுகுந்தன் சொன்ன அத்தனை விஷயங்களையும் கற்பனை செய்து பார்த்தான்.சிறிது நேரம் பேச்சே வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. பிறகு சுய நினைவு வந்தவனாய் பேசத்தொடங்கினான்,

"சார்,ஆனா Background musicன்னு சொன்னதுமே இளையராஜா தான் சார் என் நினைப்புக்கு வர்றார்"

"அவர் தமிழ் சினிமாவுக்கு கிடைச்ச ஒரு பொக்கிஷம்!!!கடவுள் நமக்கு கொடுத்த ஒரு வரம்ன்னு கூட அவரைச் சொல்லலாம்..உனக்கு பின்னணி இசைன்னா அவர் ஞாபகத்துக்கு வர்றார்,நிறைய பேருக்கு இசைனாலே அவர் தான் ஞாபகத்துக்கு வருவார்,நான் உட்பட"

பிறகு இருவரும் அமைதியானார்கள்,மிதமான வேகத்தில் கார் நகர்ந்து கொண்டிருந்தது.


                                                     ***************************


னது சமீபத்திய படங்கள் பெரும் வெற்றி அடைந்ததால் மிகுந்த உற்சாகத்தில் இருந்தான் வாசு.இந்த உற்சாகமிகுதி  மெல்ல மெல்ல தலைக்கனமாக மாறியது. தயாரிப்பாளர் கண்ணப்பனின் அடுத்த படத்தில் வாசு தான் ஹீரோ. கண்ணப்பனும் வாசுவும் விரைவிலேயே நண்பர்களாகி விட்டார்கள். ஏனென்றால் இருவருக்கும் அத்தனை நல்ல பழக்கங்களும் உண்டு.இருவரும் தோட்டத்தில் மது அருந்தி கொண்டிருந்தனர்.

"வாசுன்னா வெற்றி வெற்றின்னா வாசு" - வாசு

"ஆமாம் தம்பி உங்க சமீபத்திய படமெல்லாம் சூப்பர் ஹிட்.சில்வர் ஸ்டார் வாசு தொட்டதெல்லாம் Gold ஆகிற நேரமிது" - கண்ணப்பன்

"இப்போ மட்டுமில்ல, இனிமே நான் தான் நிரந்தரமான டாப் ஹீரோ,எனக்கு ஈடு கொடுத்துட்டிருந்த ஒரே ஹீரோ சரண் தான்..இப்போ அவனும் field out...I am an incomparable Star..Silver Star" - வெறி பிடித்தவனை போல் கூச்சலிட்டான் வாசு.கண்ணப்பன் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. இப்படி பல சில்வர் ஸ்டார்களை பார்த்தவர் தான் இந்த கண்ணப்பன்.சில ஸ்டார்களுக்கு மது கூட ஊற்றி கொடுத்துத் தான் இன்றைக்கு தயாரிப்பாளர் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.

"Mr.கண்ணப்பன் நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்" - வாசு

"என்ன?" - கண்ணப்பன்

"நானே ஒரு படம் டைரக்ட் பண்ண போறேன்..தமிழ் சினிமால...ம்ஹும்ம் இந்திய சினிமா சரித்திரத்திலேயே இப்படி ஒரு படம் வந்ததில்லைன்னு சொல்ற அளவுக்கு இருக்கும் அந்த படம்"

"தம்பி உங்களுக்கு ஜாஸ்தி ஆயடிச்சுன்னு நினைக்கிறேன்..நான் கிளம்பறேன்..நாளைக்கி காலைல பார்க்கலாம்" - வாசு போதையில் உளறுகிறான் என்றெண்ணி கிளம்ப நினைத்தார் கண்ணப்பன்.

"கண்ணப்பன் சார்,என்ன மப்புல பேசறன்னு பார்க்கிறீங்களா?நான் எப்போவும் steady.. இன்னைக்கி நேத்து இல்லை நானும் ரொம்ப நாளாவே ஒரு படம் எடுக்கனம்னு யோசிச்சிட்டிருக்கேன்..எனக்கிருக்கிற டேலண்ட கரெக்டா யூஸ்  பண்ற அளவுக்கு எந்த டைரக்டருக்கும் சரக்கில்லை சார்"

"தம்பி நீங்க டைரக்ட் பண்ணியே தீரனமா?தெளிவாத்தான் பேசறிங்களா?" - கண்ணப்பன் சற்று தெளிவாகவே கேட்டார்

"Yes ofcourse!!!நீங்க தயாரிக்கப் போற படத்தை நான் தான் இயக்கப் போறேன்..அப்போ தான் இந்த வாசு தமிழ் சினிமாவுக்குக் கிடைச்ச ஒரு மாபெரும் கலைஞன்னு தெரியும்"

இதை சற்றும் எதிர்பாராத கண்ணப்பன் திக்குமுக்காடிப் போனார்..இவரை வைத்து படம் பண்ணும் எண்ணத்தையே மாற்றி கொள்வது தான் நல்லதோ என்று கூட சிந்திக்க தொடங்கி விட்டார்..ஆனால் படம் பூஜை கூட போடவில்லை..வெறுமனே இவரை வைத்து படம் தயாரிக்கிறோம் என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டதற்கே படத்தை பல கோடி கொடுத்து வாங்க விநியோகஸ்தர்கள்(distributors) நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு வந்தது இவர் நினைவுக்கு வந்தது..அப்போது அங்கே அமர்ந்திருந்த வாசுவின் காரியதரிசி நரேஷ்,

"வாசு சார் நீங்க டைரக்ட் பண்ணலாம்,ஆனா ரிஸ்க்கும் எடுக்க தேவை இல்லை..அதுக்கொரு ஐடியா இருக்கு.."



                                                                                                                                   (தொடரும்...)




Thursday, December 15, 2011

மாஸ் மீடியா - 5

மாஸ் மீடியா -5
யக்குனர் நீலகண்டனிடம் தொலைபேசியில் உரையாடிய பிறகு தயாரிப்பாளருடன் கூடி பேசி சம்பளம் முதலிய அனைத்து விஷயங்களையும் முடிவு செய்து விடுவதென்று தீர்மானித்தான் சரண்.பிறகு இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விடலாமென்றும் முடிவு செய்தான்.சென்னை கிண்டியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் இதை பற்றி விவாதிப்பென்று மூவரும் ஒப்புக்கொண்டார்கள்.அந்த வெள்ளிக்கிழமை மாலை இதை பற்றி விவாதிக்க மூவரும் ஆயத்தமானார்கள்.வெள்ளை நிற pant ஒரு வித நீல நிற casual shirt அணிந்து தயாரானான் சரண்.

உடன் விவேக்கும் தயாரானான்.முழு formal உடையில் பொருத்தமான பீ.ஏ என்று சொல்லும்படி இருந்தான்.பல யோசனைகள் சரணின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.ஏதோ கவனத்தில் படி இறங்கும்போது சற்று தடுமாறி விழுந்தான்.உடனே சமாளித்துக்கொண்டு எழுந்தான்.

"பாஸ் சகுனமே சரி இல்லை..இந்த படத்த அவசியம் பண்ணியே ஆகனமா?" - விவேக்

"இப்படி கால் வழுக்கறது கை வழுக்கரதெல்லாம் கெட்ட சகுனம்னு உங்களுக்கெல்லாம் யாருய்யா சொல்லித்தந்தாங்க?" - செயற்கையாக கேலி பேசினான் சரண்

"பாஸ் இந்த 'பகுத்தறிவுவாதம்' எல்லாம் உங்க படத்த விநாயகர் கோயில்ல வச்சி பூஜா போடறப்போ மறந்துடுவீங்களா?" - என்று விவேக் கேலி பேசியது, ஏற்கனவே குழப்பத்தில் இருந்த சரணுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

"கொஞ்ச நேரம் அமைதியா இரு டா இது என் career ல யே ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரப்போற படம்.. wait and watch"

"ஊருக்குள்ள எவ்வளவோ நல்ல டைரக்டெருங்க இருக்காங்க..எவ்வளவோ நல்ல producers இருக்காங்க.. ஆனா இவர் ஏன் இந்த ஏழரைய மடியில கட்டிக்கிட்டு அலையராறோ தெரியல..இந்த நீலகண்டன் ஒரு நல்ல டைரக்டர் தான்..ஆனாலும் இவன் Story discussionன்னு சொல்லி ஹோட்டல்ல ரூம் போடவே நாலு கோடி ரூபா செலவு வைச்சவன்..இதுல வேற producer இருந்தாலாச்சு இவன் கொஞ்சம் பயந்துகிட்டு வேலை பார்ப்பான்.. இந்த தர்மராஜே ஒரு தருதல.. எவ்வளவு சொன்னாலும் இவர் கேட்க மாட்டேன்கிறாரே.. எல்லாம் விதி" - தனக்குள் தானே பேசிக்கொண்டிருந்தான் விவேக்.

காரில் செல்லும்போது புதிதாக வெளியாக இருக்கும் ஒரு படத்தின் பாடல்களை கேட்டுக்கொண்டே சென்றார்கள். இந்த பாடல்கள் சரணை பெரிதும் இம்ப்ரெஸ் செய்துவிட்டன

"இந்த படத்துல பாட்டெல்லாம் பிரமாதமா இருக்கு விவேக்.."

"சுமன்னு ஒரு புது பையன் compose பண்ணியிருக்கான் பாஸ்"

"நல்லா வருவான்னு தோணுது..இவனே கூட நம்ம படத்துக்கு மியூசிக் போட்டா தேவலாம்"

விவேக் பதிலேதும் பேசாமல் ஆமோதிப்பது போல் அடக்கமாக தலையாட்டினான்.

கார் பார்க்கிங்குக்கான இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு லிப்டுக்குள் ஏறினார்கள்.மூன்றாவது மாடிக்கு லிப்ட்டில் சொகுசாக வந்திறங்கினார்கள் சரணும் விவேக்கும்.ரூம் நம்பர் 324ல் தர்மராஜும் நீலகண்டனும் சரணின் வருகைக்காக காத்திருந்தனர்.

"சாரி சார்,வழியில கொஞ்சம் டிராபிக் அதான் late ஆய்டிச்சு..ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா?" - சரண்

"அதெல்லாம் பரவாயில்லை சரண்..நாங்க இப்போ தான் வந்தோம்.. ஒரு 10 நிமிஷமாச்சு..ஹீரோன்னாலே கொஞ்சம் லேட்டா வர்றது இண்டஸ்ட்ரீல சகஜம் தானே" - என்று நகைச்சுவையாக கூறினார் தயாரிப்பாளர் தர்மராஜ்.

"நீலு சார் ஒரே ஒரு வாட்டி பிரொடியுசெருக்கும் எனக்கும் மட்டும் கதைய சொல்லிடுங்க..மத்த விஷயத்தையும் இன்னைக்கே finalize பண்ணிடலாம்"

நீலகண்டன் சாதரணமான ஜீன்ஸ் மட்டும் டீ ஷர்ட் அணிந்திருந்தார். எப்போதும் அவர் ஒரு கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிவது வழக்கம்.இவர் ஒரு சில நல்ல படங்கள் எடுத்திருந்தாலும் இவரை ஒரு சைக்கோ என்றும் பலர் கூறுவதுண்டு.இவர் இயக்கிய படங்கள் பல விருதுகள் பெற்று விட்டன.ஆனால் அவற்றை தயாரித்தவர்கள் வீதிக்கு வந்து விட்டார்கள்.இவர் எப்போது pack up சொல்லுவார் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.அந்த இறைவன் மீதும் இவருக்கு நம்பிக்கை கிடையாது.இவர் படங்களின் லொகேஷனுக்கும் பாடல்கள்-காட்சிகளுக்கும் ஆகும் செலவு என்னவோ மிகக் குறைவு தான்.ஆனால் தன்னைத் தானே ஒரு perfectionist என்றெண்ணிக் கொண்டு இவர் செய்யும் அடாவடிகள் தான் படத்தின் பட்ஜெட்டை பல மடங்கு உயர்த்தி விடுகிறது.எடுத்தக் காட்சிகளையே மீண்டும் மீண்டும் re-shoot செய்வார்.இதனால் படச்சுருள்கள் ஏகத்துக்கும் வீணாகும்.இது போன்ற காரணங்களால் தான் இவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்கள் தெருவுக்கு வந்தார்கள்.
 
"இது ஒரு fantasy movie சார்..சரண் அதுல டபுள் ரோல் பண்றாரு..தொல்பொருள் ஆராய்ச்சியாளரா ஒரு ரோல் இன்னொரு ரோல்ல 12 ஆம் நூற்றாண்டுல வாழ்ந்த விக்ரம சோழனா நடிக்கிறாரு..இந்த ஆராய்ச்சியாளருக்கும் அந்த சோழ ராஜாவுக்கும் என்ன தொடர்பு..இவர் ஆராய்ச்சி எதை பத்தி,இவர் ஆராய்ச்சி ஜெயச்சதா தோற்றதான்னு கடைசியல ஒரு ட்விஸ்ட் வைச்சு சொல்லுவோம் சார்.." - என்று ஆரம்பித்து கதையை சுருக்கமாக சொல்லி முடித்தார் நீலகண்டன்.

அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார் தர்மராஜ்.சுமார் ஒரு 30 - 32  வயது மதிக்கத்தக்கவர் தான் இந்த தர்மராஜ். இவருடைய அப்பா கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவர். அன்றைய அரசியல்வாதிகளுக்கு 'பல' விதத்திலும் உதவியாக இருந்து ஏகத்துக்கும் பணம் சம்பாதித்தவர்.சம்பாதித்த பணத்தை பாதுகாக்கவும் மேலும் மேலும் சொத்து சேர்க்கவும் அரசியலில் குதித்து வெற்றிகரமாக தொழில் நடத்தி வருபவர். அரசியல்வாதியின் மகனான தர்மராஜுக்கு படிப்பு ஏறவில்லை (அரசியல்வாதியின் மகனாயிற்றே), அப்பன் சொத்தை எப்படி செலவு செய்வதென்று தெரியாமல் தவித்த தர்மராஜுக்கு சினிமா வழி செய்தது.விளம்பரத்துக்கு விளம்பரமும் கிடைத்தாயிற்று வருமானத்திற்கு வருமானமும் கிடைத்து விட்டது.தர்மராஜுக்கு ரேஸ்,சூதாட்டம்,மது,மாது என அனைத்து பழக்கங்களும் உண்டு.இந்த தர்மராஜ் சொல்படி கேளாத பலருக்கு இவன் யமதர்மராஜாக மாறிய சம்பவங்களும் உண்டு.தர்மராஜ் சற்றே வில்லங்கமான தயாரிப்பாளர் தான்.

கதை முழுவதும் கேட்டு முடித்த பிறகு அவர் பேச தொடங்கினார்,

"நல்லா இருக்கு நீலு சார்..டைட்டில் என்ன வைச்சிருக்கீங்க?"

"அதிசய கனவு" - ஆர்வமாக சொன்னார் நீலகண்டன்.

"இது பகல் கனவாகாம இருந்தா சரி" - இவ்வாறு நினைத்துக் கொண்ட விவேக்,தனது கடமையை உணர்ந்து பேசத் தொடங்கினான்,

"சார்,அப்படியே இந்த சம்பள விஷயத்தையும் முடிவு பண்ணிடலாமே" - விவேக் சற்று பணிவாகவே சொன்னான்.

"பண்ணிட்டா போச்சு" - அலட்சியமாக பதிலளித்தார் தர்மராஜ்.

இந்த அலட்சியம் சரணுக்கு சற்று கோபத்தை உண்டாக்கினாலும்,விக்ரம சோழனாக நடிக்கும் வாய்ப்பை விட்டு விட கூடாதென்று சற்று அமைதி காத்தான்.

"சரண் இந்தாங்க 10  lakh க்கு செக் போட்டிருக்கேன்..மத்தத போக போக பேசிக்கலாம்" - என்று சற்று அதிகார தொனியிலேயே சொன்னார் தர்மராஜ்.

"சார் இவரோட மார்க்கெட் படி 3  கோடி வாங்கிறது வழக்கம்" - பணிவாக சொன்னாலும் உறுதியாகவே சொன்னான் விவேக்.

"இதோ பாருங்க வரிசையா உங்களுக்கொரு 3 -4  flop...அடுத்த படத்துக்கும் பெருசா எதிர்பார்ப்பு இருக்கிற மாதிரி தெரியல..இந்த நேரத்துல சம்பளத்த பேரம் பேசி வர்ற 'ராஜ' வாழ்க்கைய விட்டுடாதிங்க..அதாவது சோழ ராஜா ஆகர வாய்ப்பை சொன்னேன்.."

"சரிங்க இந்த பத்து லட்சம் அட்வான்சா இருக்கட்டும்..மத்தத அப்புறம் பாத்துக்கலாம்" - என்று தன ஆத்திரத்தை கட்டுப்படுத்தி கொண்டு,முகத்தில் எந்த ஒரு உணர்வும் காட்டாமல் ஒரு எந்திரத்தை போல் பேசிவிட்டு எழுந்தான் சரண்.

"இது புத்திசாலித்தனம்..சீக்கிரம் official press meet arrange பண்ணுங்க சரண்" - தர்மராஜ் கூறியதற்கு எந்த ஒரு பதிலும் தராமல் கம்பீரமாக அறையை விட்டு வெளியேறினார்கள் சரணும் விவேக்கும்


                                                     ***************************

ஸ்ரீதர் முதன்முதலாக ஒரு உதவி இயக்குனராக பணியாற்ற போவதை எண்ணி பேரானந்தம்  அடைந்தார் காதர் பாய். தனக்கு அடைக்கலம் கொடுத்து சினிமா என்றால் என்னவென்று ஓரளவேனும் புரிந்து கொள்ள உதவியவர் காதர் பாய் என்பதால் ஸ்ரீதர் மனதில் அவருக்கு என்றுமே ஒரு தனி மரியாதை உண்டு.அதிகாலையிலேயே காதர் பாயிடமிருந்து விடை பெற்று சென்றான் ஸ்ரீதர்.பிறகு அருகிலிருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டான். பிறகு வழக்கம் போல் நெற்றியில் விபூதி-குங்குமம் இட்டுக்கொண்டு புறப்பட்டான். சொன்ன நேரத்திற்கு முன்பாகவே ஷூட்டிங் ஸ்பாட்டைச் சென்றடைந்தான். பிறகு சுகுந்தன் மற்றும் மற்ற பல தொழில்நுட்ப கலைஞர்களும் வந்து சேர்ந்தார்கள்.படப்பிடிப்புக்கு அனைவரும் தயாராகிக்கொண்டிருந்தனர்..

"வாயா ஸ்ரீதர்..நீ சொன்ன நேரத்துக்கு முன்னாடியே வருவன்னு நான் எதிர்பார்த்தது வீண் போகலை" - என்றார் சுகுந்தன்.ஸ்ரீதர் அற்ப சந்தோஷங்களை எதிர்பார்த்தும் அரைகுறை திறமையை வைத்துக் கொண்டும் சினிமாவிற்கு வரவில்லை என்பதை சுகுந்தன் உணர்ந்திருந்தார். ஸ்ரீதர், சினிமாவில் தான் ஒரு சிறந்த இயக்குனராக வேண்டுமென்ற லட்சியத்தில் உறுதியாக இருப்பதையும், சுகுந்தனால் உணர முடிந்தது. சுகுந்தனின் கேள்விக்கு அடக்கமாக புன்னகையை பதிலாக தந்தான் ஸ்ரீதர்.

"என்னய்யா நெத்தியில விபூதி,குங்குமம் எல்லாம் வைச்சிருக்க" - என்று ஒரு வித ஏற்ற இறக்கமான தொனியில் கேட்டார் சுகுந்தன்.

"இல்ல சார் இது என் நம்பிக்கை.இந்த விபூதி குங்குமம் வைக்கிறப்போ நான் கடவுள மனசுல நினைச்சி தான் வைக்கிறேன்.இப்படி குங்குமம் விபூதி எல்லாம் வைக்கிறது மனசுக்கு ஒரு வித நிம்மதியா தருது,அது மட்டும் இல்ல தப்பான விஷயத்துல இருந்து என்ன காப்பாத்துதுன்னு ஒரு சின்ன நம்பிக்கை அதான்..." - பணிவாக சொன்னான் ஸ்ரீதர்.

இந்த பதில் சுகுந்தனை மேலும் impress  செய்தது என்று தான் சொல்ல வேண்டும்.

"ஏன் யா யோவ்,நீ இருக்கிறது தமிழ் சினிமால..இங்க கடவுள் இல்லைன்னு சொல்லுறவன் தான் அறிவாளி,அதி புத்திசாலி,அறிவுஜீவி etc etc  எல்லாம்.. நீ என்னடான்னா ஸ்கூல் பையன் மாதிரி பேசிகிட்டிருக்க.." - என்று நகைச்சுவையாக சொன்னார் சுகுந்தன்.

"கே.பாலச்சந்தர்,ராமநாராயணன் இவங்க எல்லாம் நாத்திகவாதிங்க இல்லையே சார்..இவங்க நூறு படம் டைரக்ட் பண்ணியிருக்காங்களே, அவங்கள inspirationஆ எடுத்துக்கிறேன்" - ஸ்ரீதர்.

"நல்லா புத்திசாலித்தனமாத்தான் பேசற..இதே மாதிரி நான் சொல்றப்போ sceneக்கு ஏற்ற மாதிரி வசனம் எழுதிரியான்னு பார்க்கிறேன்..சரி எல்லாம் செட் ஆயடிச்சுன்னு நினைக்கிறேன்.வா ஒருவாட்டி நாம போயி செக் பண்ணிடலாம்" - சொல்லிவிட்டு நடந்தார் சுகுந்தன். ஸ்ரீதரிடம் நகைச்சுவையாகத் தான் சுகுந்தன் நாத்திகம் பேசினாரே தவிர சுகுந்தனுக்கும் கடவுள், சாஸ்திரம், சம்பிரதாயம் ஆகியவற்றில் நம்பிக்கை உண்டு.

செட்(set) எல்லாம் சரியாக அமைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்த்தார் சுகுந்தன்.

"ஸ்ரீதர்,அந்த bag  எடு"

தனது பையிலிருந்து ஒரு மடி-கணினி(laptop) எடுத்தார்.அதில் தான் வரைந்து வைத்திருந்த படங்களுடன் செட்டையும் ஒப்பிட்டு பார்த்தார்.தனது ஷூட்டிங்கில் எப்படிப்பட்ட செட் அமைக்க வேண்டுமென்று முன்னரே வரைந்து வைத்துக் கொள்வது சுகுந்தனின் வழக்கம்.அதன் படியே செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடக்கும்.தமிழ் சினிமாவில் பதினைந்து படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளதால் சுகுந்தன் அத்தனை சுலபமாக கோபப்படவோ பதற்றப் படவோ மாட்டார்.அனைத்து விஷயங்களையும் நன்றாக சமாளிக்கக் கூடியவர்.

பிறகு ஒன்பது மணிக்கு வர வேண்டிய கதாநாயகி 10  மணிக்கும்,கதாநாயகன் 11  மணிக்கும் வந்து சேர்ந்தனர். இரண்டு மணி நேரம் வீணாகி விட்டதே என்று ஆத்திரப்பட்டான் ஸ்ரீதர்.அவனுடன் இருந்த மற்ற இரண்டு உதவி இயக்குனர்கள் சற்றும் அலட்டிக்கொள்ளவில்லை.இயக்குனர் சுகுந்தனோ கதாநாயகனிடமும்,கதாநாயகியிடமும் மிக சகஜமாக காட்சிகளை விளக்கிக் கொண்டிருந்தார்.

ஸ்ரீதருக்கு சற்று ஆச்சரியம்.."இந்த ஹீரோவா தாக்கி பத்திரிக்கைல மகா கேவலமா பேட்டி கொடுத்தாரு..அவரோட மாஸ் படத்த எல்லாம் கொச்ச படுத்தி திட்டினாரு..இப்போ அவர் கூடவே படம் பண்றாரு..சரி அரசியல் மாதிரி சினிமாலையும் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை போல" - இவ்வாறு நினைத்துக் கொண்டான் ஸ்ரீதர்.

"யோவ் ஸ்ரீதர் உனக்கு கில்லி,பம்பரம் இதெல்லாம் ஆட தெரியும் இல்ல?" - கேட்டார் சுகுந்தன்.

"தெரியும் சார்,அதுக்கென்ன இப்போ?"

"நம்ம ஹீரோயினுக்கு கொஞ்சம் ட்ரெயினிங் கொடு..ரொம்ப அலட்டிக்க வேண்டாம்,சும்மா ஒரு 2 -3  ஷாட் எடுக்கணம்..அந்த அளவுக்கு சொல்லிகொடுத்தா போதும்.."

இடை ஆட்டி ஸ்டைலாக நடந்து வந்த கதாநாயகிக்கு கற்றுக் கொடுக்க கிளம்பினான்.

"ப்ரதர் ஒழுங்கா சொல்லி கொடுங்க,கொஞ்சம் தப்பாச்சுனாலும் டைரக்டர் உங்கள காய்ச்சிடுவார்" - மற்றொரு அசிஸ்டன்ட் டைரக்டர் மிதமான குரலில் எச்சரிக்கை செய்தான்.

"இந்தாளு கிட்ட அசிஸ்டண்டா சேர்ந்தா தொழில் கத்துக்கலாம்னு பார்த்தா,காபி வாங்கிட்டு வர்றதுக்கும், ஹீரோவோட டிரெஸ்ஸ அட்ஜஸ்ட் பண்றதுக்கும் யூஸ் பண்றான் நம்மள.." - உதவி இயக்குனர்களில் ஒருவன் மற்றொருவனிடம் சொன்னான்.

"இதுல பாதி வசனம் நாம தான் எழுதறோம்,டைட்டில் கார்டுல மட்டும்,'கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்'ன்னு இவர் பேர போட்டுக்குவாரு..எடுக்கறது தமிழ் படம்,இதுல பாதி வசனத்த Englishல எழுத சொல்லி சாவடிக்கிறான்" - என்று அலுத்துக் கொண்டான் மற்றொருவன்.

"அது வரைக்கும் இந்த புது பையன் அதிர்ஷ்டசாலி..பம்பரம்,கில்லி எல்லாம் சொல்லித்தர்ற சாக்குல ஹீரோயின அங்க இங்க தொடலாம்..அந்த சான்ஸ் கூட நமக்கு இல்லாம போச்சே" - என்று சற்றே பெருமூச்சு விட்டான் முதலில் பேசியவன்.

ஸ்ரீதரோ இப்படி எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனக்கு கொடுத்த வேலையே செய்வதில் கவனமாக இருந்தான்.

"மேடம் இந்த ஷாட்ல நீங்க கிராமத்துல பண்ற குறும்புத்தனத்த ஷூட் பண்றாங்க..so முகத்துல கொஞ்சம் குறும்புத்தனம் காட்டுங்க..பம்பரத்த குறி பார்க்கிற மாதிரி சீரியஸா பார்க்கனம்..பம்பரத்த விட்டதும் 'ஹே'ன்னு குதிக்கணம்.." - இப்படி சற்று ஆர்வமாகவே சொல்லிக்கொடுத்தான் ஸ்ரீதர்.

ஸ்ரீதர் சொல்லிக்கொடுத்த படியே கதாநாயகி நடித்ததில் சுகுந்தனுக்கு ஏக மகிழ்ச்சி..முதல் டேக்கிலேயே ok செய்து விட்டார்கள்.

"Brilliant ஸ்ரீதர்..இப்படி தான் இருக்கணம்..பம்பரம்னா பம்பரம் விட்ரதோட சேர்த்து அந்த சீனோட முக்கியத்துவத்த சொல்லி கொடுக்கணம்..Well done!!!Keep it up!!!" என்று ஸ்ரீதரின் தோள்களை தட்டிக்கொடுத்து விட்டுச் சென்றார் சுகுந்தன்.

இப்படி இவர் தங்களை ஒரு நாள் கூட பாராட்டியதில்லையே என்று மற்ற இரண்டு உதவி இயக்குனர்களும் வியப்பில் ஆழ்ந்தனர்.. "அப்படி இந்த ஸ்ரீதரிடம் என்ன தான் இருக்கிறது?வந்த முதல் நாளே நல்ல பெயர் வாங்கி விட்டானே" - என்று ஆச்சர்யத்தில் ஆழ்ந்தார்கள். பறவையின் கண்கள் மட்டுமே தெரிகிறதென்று சொன்ன அர்ஜுனனைப்போல்,பம்பரம் கற்றுத் தரும்போது,படத்தில் இந்த காட்சியை எப்படி சிறப்பாக அமைக்க முடியுமென்கிற சிந்தனை மட்டுமே ஸ்ரீதரின் மனத்தில் இருந்தது, கதாநாயகியின் கவர்ச்சியான உடையில் அவனுடைய கவனம் செல்லவில்லை. இப்படிப் பட்ட ஸ்ரீதர் பாராட்டப்படுவதும், முதல் நாளே நல்ல பெயரெடுப்பதும் சகஜம் தானே.



(தொடரும்)

Saturday, December 3, 2011

மாஸ் மீடியா - 4

  மாஸ் மீடியா - 4


விலையுயர்ந்த வெள்ளை நிற பைஜாமா ஜிப்பாவில் 'எளிமையாக' தயாரானான் சரண்.நெற்றியில் சற்று திருநீறும் இட்டுக்கொண்டு,பெரிய ஹீரோ போன்று பந்தாவாக தோன்றாமல் எளிமையாகவே காட்சியளித்தான். உடனே விவேக் உள்ளே நுழைந்தான்.


"பாஸ் ரிபோர்ட்டர்ஸ் எல்லாம் காத்திருக்காங்க..சீக்கிரம்"


"ஹ்ம்ம்" - ஆமோதித்தான் சரண்.


"பாஸ் பிறந்த நாளாச்சே அப்டி இமயமலை பக்கம் போயிட்டு வர கூடாதா,அங்க கொஞ்சம் நிம்மதி கிடைக்குமே" - நக்கலாக சொன்னான் விவேக்.


"உனக்கு வாய் ஜாஸ்தி ஆய்டிச்சு வர வர" - சற்று கடுமையாகவே கூறிவிட்டு ஹாலுக்குச் சென்றான் சரண்.பத்திரிக்கயாளர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். சரண் வந்ததும் மும்முரமாக புகைப்படமெடுக்கலானார்கள். சிறிதும் பதற்றப்படாமல், அவசரப்படாமல் அமைதியாக போஸ் கொடுத்தான் சரண். சரணைப் பற்றி திரையுலகில் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவினாலும் பக்குவமாக பேசுவதிலும் தெளிவாக சிந்தித்து முடிவெடுப்பதிலும் சரணுக்கு நிகர் சரண் தான் என்று சொல்லலாம். சரணுடன் அனைவரும் கை குலுக்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.பிறகு இருக்கைகளில் அமர்ந்து கேள்விகளை கேட்க தொடங்கினர்.


"இந்த Birthday என்ன சார் ஸ்பெஷல்"


"Its just another day" - சரண்.


"உங்களோட இந்த வளர்ச்சிக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?"


"உழைப்பு,தன்னம்பிக்கை எல்லாத்துக்கும் மேல என்னோட ரசிகர்கள்" ,அடக்கமாக சொன்னான் சரண்.


"சமீப காலமா உங்களை ஆளுங்கட்சிக்கு நெருக்கமான பிரபல financier செல்வராஜோட அடிக்கடி பார்க்க முடியுதே"


"என்னோட அடுத்த படத்துக்கு finance பண்ண சொல்லி அவர் கிட்ட பேசிகிட்டிருக்கோம்.தொழில் ரீதியான நட்பு தான்"


"நேரடியாவே கேக்கறோம் நீங்க அரசியலுக்கு வருவீங்களா?"


""ஆமாம் நான் தப்பி தவறி ஏதாச்சு சொல்லனம் அந்த ஜாதி கட்சித் தலைவரு,படத்துல சிகரெட் புடிக்கிறான்,தண்ணி அடிக்கிறான்னு என் படம் ஓடற தியேட்டரை உடைக்கணம்,படப்பெட்டிய கொளுத்தனம்,என்ன வைச்சே ஒரு மாசம் நியூஸ் போடனம்..நல்ல எண்ணம் டா உங்களுக்கு"" - இவ்வாறு எண்ணிக் கொண்டான்,பிறகு பதிலளித்தான்.


"இல்லை"


"உங்களுக்கும் நடிகை தரணிக்கும் நடுவுல ஏதோ இதுன்னு கிசுகிசுக்கிராங்களே.." - சற்று விஷமத்தனமாகவே கேட்டார் ஜோல்னா பையுடன் அமர்ந்திருந்த அந்த பத்திரிக்கைக்காரர்.


"யார் கிசுகிசுக்கிராங்களோ அவங்க கிட்டயே கேக்கலாமே சார்.நான் இந்த கிசு கிசு எல்லாம் படிக்கிறதில்லை பாருங்க..Anyway Dharani is my best friend" - சற்று அடக்கமாகவும் கம்பீரமாகவும் பதிலளித்த சரண்,தொடர்ந்து,"ஆமாம் நீங்க எந்த பத்திரிகை?"


"மூன்றாவது கண் சார்"


"ஓ இந்த பூபால்னு ஒருத்தர்,மீசை பெருசா வச்சிருப்பாரே,அவர் நடத்துற பத்திரிக்கையா..ok ok அடுத்த கேள்வி" - என்று சற்று ஏற்ற இறக்கமாக அந்த நிருபரைப் பார்த்து கூறினான் சரண்.


"உங்க படமெல்லாம் ஏன் சார் ஒரே மாதிரி இருக்கு?வழக்கமான intro song, குத்துப் பாட்டு,ஆறு fight,பஞ்ச் டயலாக்குன்னு..ஏன் வேற எதுவும் ட்ரை பண்றதில்லை?"


"நீங்க கூட தான் எல்லா நடிகர்களையும் அரசியலுக்கு வருவீங்களா அரசியலுக்கு வருவீங்களான்னு ஒரே கேள்விய கேக்கறீங்க..நாங்க எதாச்சு கேட்டோமா" - முகத்தில் லேசான சிரிப்புடன் கூறினான் சரண்.


"இது மழுப்பலான பதில்"


"On a serious note,இப்போ இந்த மாதிரி படம் தான் மக்கள் என் கிட்ட எதிர்பார்க்கறாங்க..ஆனா கூடிய சீக்கிரமே ஒரு வித்தியாசமான படத்தோட அறிவிப்பு வெளிவரும்"


பத்திரிக்கயாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்..


"என்னய்யா இவ்வளவு அடக்கமா பதில் சொல்லிட்டான்..ஏதாச்சு திட்டுவான்,அதை வச்சு பரபரப்ப உண்டாக்கலாம்னு பார்த்தா இப்படி பண்ணிட்டானே.."


"அட விடுப்பா,இவனும் அந்த வாசு மாதிரி பிரஸ் மீட்லயே  காச் மூச்சுன்னு  கத்தாம விட்டானே..அதை நெனச்சி பெருமைப்படு"


"அப்படி கத்தினா நாங்க தான் வீடியோவ Youtubeல ரிலீஸ் பண்ணிடுவோம்ல" என்று கமெண்ட் அடித்து சிரித்தார் அந்த சினிமா கிசு கிசு எழுதும் நிருபர்.




"One final question sir. வரிசையா உங்களுக்கொரு 3-4 flops..உங்களோட அடுத்த படம் மறுபடி உங்களை டாப்புக்கு கொண்டு போகும்னு நம்புறீங்களா?"


"நம்பிக்கை தானே வாழ்க்கை"


"படம் இப்போ எந்த அளவில இருக்கு?"


"Post production work போயிட்டிருக்கு..தீபாவளி ரிலீஸ்"


"ஆல் தி பெஸ்ட் சார்" - என்று ஒரு நிருபர் வாழ்த்து தெரிவிக்க பத்திரிக்கையாளர் கூட்டம் கலைந்தது.


தன் அடுத்தப் படம் இழந்த தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் என நம்பிக்கையோடு பதில் கூறினாலும், சரணுக்கு  உள்ளுக்குள் பயமில்லாமல் இல்லை. இயக்குனர் நீலகண்டன் சொன்ன கதை சரணுக்கு மிகவும் பிடித்திருந்தது. அது ஒரு சரித்திரப் படம். பட்ஜெட் பல கோடி ருபாய் வரை போகும். இந்த படத்தில் நடித்து விட்டால் தமிழ் சினிமாவில்  தான் மிக உயர்ந்த இடத்தை பிடித்து விடலாம் என்பது சரணின் எண்ணம். ஆனால் இந்த படம் தோல்வியடைந்தால் சரணின் நிலை ஏறத்தாழ field out தான். தயாரிப்பாளர் தர்மராஜுக்கோ எந்த பிரச்சனையும் ஏற்பட போவதில்லை, காரணம் அவர் படமெடுப்பதே கருப்பு பணத்தில் தான். இயக்குனர் நீலகண்டனும் தொடர்ந்து 5 வெற்றிப் படங்களை கொடுத்தவர். அதனால் அவருக்கும் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. தொடர்ந்து தோல்விப் படங்கள் கொடுத்து வரும் சரணுக்குத் தான் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். தான்  இந்த கதையில் நடித்தே ஆக வேண்டுமென்று சரண் தீர்மானமாக இருந்தாலும், அவனுக்குள் ஏதோ ஒரு புரியாத குழப்பம் குடைந்து கொண்டு தான் இருந்தது. ஏதோ ஒரு விபரீதம் நேரப்போகிறது என்பது போன்ற உணர்வு சரணை பெரிதும் வேதனைப்படுத்தியது.அதனாலேயே இந்த படத்தை அறிவிக்கும் முடிவை பல முறை தள்ளிப்போட்டான்.


இனியும் தாமதிப்பதில் பயனில்லை.நமக்கு தேவை ஒரு மெகா ஹிட். இப்போது வெளிவரவிருக்கும் படம் ஒரு வேளை வியாபார ரீதியாக வெற்றி பெற்றாலும் கூட,அதனால் தனக்கு மிக அவசியமான Image make-over ஏற்பட வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தான். நீலகண்டனிடம் இன்று உறுதி படுத்திக் கொண்டு படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இந்த வாரத்திற்குள் வெளியிட முடிவு செய்தான். உடனடியாக நீலகண்டனை தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.


"ஹலோ!! நீலு சார்..."


                                                     ***************************


ஜோயித்தாவின் வரவிற்காக காத்திருந்தான் ஸ்ரீதர்.தன்னை எதற்கு அழைத்தாள் என்று இது வரை ஸ்ரீதருக்கு விளங்கவே இல்லை.நிச்சயம் ஏதோ நல்ல விஷயம் தான் என்று தோன்றியது.தன் கதை பிடிக்கவில்லை என்றால் முழு கதையும் கேட்டிருக்க மாட்டாள்.நிச்சயம் பிடித்துத் தான் இருக்கும்."ஆனால் பிடித்திருந்தால் மட்டுமென்ன? ஜோயித்தாவால் என்ன செய்து விட முடியும்? ஒரு கதாநாயகியை நம்பி படம் தயாரிக்கும் துணிச்சல் கோலிவுட்டில் எந்த தயாரிப்பாளருக்குமில்லை. அதுவும் கதாநாயகியை நம்பி அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் நிலைமை  இங்கு வந்து விடவில்லை.சே சே..என்ன இது அளவுக்கதிகமாக யோசிக்கிறோமோ.. இயக்குனர் வாய்ப்பு கிடைப்பதென்ன அத்தனை சுலபமா?பின் எதற்கு தான் நம்மை அழைத்தாளோ.." - என்று பல விதமான குழப்பங்கள் தோன்றியது. இப்படி குழப்பத்துடன் நின்றிருக்கையில் ஜோயித்தாவின் டிரைவர் உள்ளே வந்தான்.

"சார் நீங்க ரெடி தானே? மேடம் கார் ல வெயிட் பண்றாங்க..உங்கள உடனே வரச்சொன்னாங்க" 

டிரைவரை பின் தொடர்ந்தான் ஸ்ரீதர்.

ஜோயித்தா, காருக்குள் சிவப்பு நிறச் சேலையில் ஸ்டைலாக அமர்ந்திருந்தாள்.இவள் சாதாரண உடை அணிந்தாலே பார்ப்பவர்களுக்கு போதை ஏறும்.இதில் விலையுயர்ந்த இது போன்ற கவர்ச்சியான சேலை அணிந்திருந்தால் சொல்லவே வேண்டாம். ஜோயித்தாவை பல முறை மிக அருகில் பார்த்திருந்தாலும் இத்தனை அலங்காரத்துடன் இதற்கு முன்பு ஸ்ரீதர் பார்த்ததில்லை.இதனால் சற்று திகைத்துத் தான் போனான்.ஷூட்டிங் முடிந்து ஓய்வெடுக்க நேரமின்றி உடனே கிளம்பியதால் ஜோயித்தாவின் முகத்தில் ஒரு வித சோர்வு இருப்பதை உணர முடிந்தது, ஆனாலும் திரையுலகினருக்கு glamor மிக முக்கியம். பொதுவாகவே பெண்கள் தங்கள் கைப்பையில் ஒரு make-up kit வைத்திருப்பது வழக்கம்.சில பெண்கள் ஆட்டோ-பஸ்சுக்கு சில்லறை வைத்திருக்கிறார்களோ இல்லையோ முகத்தை பொலிவுடன் வைத்துக் கொள்ள அழகு சாதன பொருட்களை வைத்திருக்க தவறுவதில்லை. அப்படி இருக்க பிரபல கதாநாயகி,இளைஞர்களின் கனவுக்கன்னி ஜோயித்தா பற்றி சொல்லவா வேண்டும். முகத்திற்கு ஏதேதோ இடைவிடாது தடவி கொண்டே இருந்தாள்.

"மேடம் நாம எங்கே போறோம்..தயவு செஞ்சி சொல்லுங்களேன்..என் தலையே வெடிச்சிடும் போல இருக்கு"

"அதான் சொன்னனே ஹோட்டல் பார்க்னு"

"ஐயோ எதுக்கு போறோம்னு சொல்லிடுங்களேன் ப்ளீஸ்.."

"சொன்னா தான் டைரக்டர் சார் வருவீங்களோ..உன்ன அதை பத்தி யோசிக்க கூடாதுன்னு சொன்னேன்ல" - என்றாள் ஒரு குறும்பான புன்னகையுடன்.

"எதுக்குங்க என்ன கலாய்க்கிறீங்க..இப்படி எல்லாம் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா உங்க கிட்ட நான் கதையே சொல்லிருக்க மாட்டேன்" - என்று அலுத்துக் கொண்டான்.

"அவசரப்பட்டு என்ன திட்டிடாதே..நாம இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு..இறங்கு.." - என்றாள்.

இருவரும் இறங்கி நடந்தார்கள்.உள்ளே மாபெரும் விருந்து(பார்ட்டி) நடந்து கொண்டிருந்தது.ஸ்ரீதருக்கு ஜோயித்தாவின் நடையில் ஒரு மாற்றம் தெரிந்தது.அந்த மாற்றம் நடையில் மட்டுமல்ல அவளது நடவடிக்கைகளிலும் இருந்ததை உணர்ந்தான்.ஒரு முன்னணி கதாநாயகிக்கே உரிய கர்வம்,திமிர் என அனைத்தையும் கண்டான்.சரளமாக ஆங்கிலத்தில் பீட்டர் விடுவதையும் கவனித்தான்.பிறகு,

"ஸ்ரீதர் இப்போ உன்னை ஒருத்தர் கிட்ட introduce பண்ண போறேன். Try to impress him"

ஸ்ரீதருக்கு இப்போதும் கூட ஒன்றும் விளங்கவில்லை.மந்திரித்து விட்டவனைப் போல் ஜோயித்தாவின் பின்னாலேயே நடந்தான்.ஜோயித்தாவைக் கண்டதும்,

"ஹலோ ஜோயித்தா.." - என்று புன்னகையுடன் அன்பாக வரவேற்றார் பிரபல இயக்குனர் சுகுந்தன்.

"ஹாய்..அப்புறம் உங்களோட லேட்டஸ்ட் ப்ராஜெக்ட் எப்படி போயிட்டிருக்கு" - சாதாரணமாக கேட்டாள் ஜோயித்தா.

"ஹ்ம்ம் ஓடிகிட்டிருக்கு..கதைக்கி பொருத்தமா இருப்பான்னு நினைச்சி இந்தாள ஹீரோவா போட்டா அரசியல் பஞ்ச் டயலாக் வைக்கச் சொல்லி உயிரை வாங்குறான்..producer புலம்பியே தீர்க்கறான்..எப்படியோ படத்த ஓரளவுக்கு முடிச்சாச்சி..சரி ஏதோ முக்கியமான விஷயம் பேசனம்னு phone பண்ணியே..என்ன...?" - என்றார் சுகுந்தன்.

"ஒன்னும் இல்லை சுகுந்தன்..ஒரு சின்ன help.. இது ஸ்ரீதர்..துணை நடிகரா இருக்கான்..எனக்கொரு நல்ல friendன்னு கூட சொல்லலாம்.." - என்று சொல்லி சற்று நிறுத்தினாள்.

"துணை நடிகர் உனக்கு frienda? ஆச்சரியமா இருக்கு...பேர் என்ன?" - என்றார் ஸ்ரீதரை நோக்கி.

"ஸ்ரீதர் சார்" - என்றான்.ஸ்ரீதருக்கு இப்போது தான் ஜோயித்தா தன்னை அழைத்து வந்ததன் காரணம் லேசாக புரிய ஆரம்பித்தது.

"சுகுந்தன் - இவன் வெறும் துணை நடிகனாவே இருந்துட கூடாது. இவன் என் கிட்ட ஒரு கதைய narrate பண்ணான். முதல்ல நான் தமாஷா தான் கேட்க ஆரம்பிச்சேன்..ஆனா இவன் சொல்ல சொல்ல எனக்கொரு தனி interest create ஆய்டிச்சு.In fact இவன் டைரக்ஷன்ல ஒரு படம் பண்ணா நல்லா இருக்கின்ற அளவுக்கு போயிட்டேன்"  - ஜோயித்தா இடைவிடாது பேசிய போது குறுக்கிட்ட சுகுந்தன்,

"அப்போ பண்ண வேண்டியது தானே" - என்றான் 

"நான் என்ன மாஸ் ஹீரோவா? புதுமுக டைரக்டருக்கு சான்சும் கொடுத்து ஒரு காரும் வாங்கி கொடுத்து சீன் போட"

"சரி சரி..நீ மாஸ் ஹீரோ பத்தி எல்லாம் பேசாதே..ஏதோ ஷூட்டிங்குக்கு ஆட்டோல வர்றனே அப்போ அவர் கார் வாங்கி கொடுத்தாரு..இப்போ ஏன் அதெல்லாம்..நான் என்ன செய்யனம்னு எதிர்பார்க்கிற நீ?"

"இவனுக்கு திறமை இருக்கு..ஆனா அதை மட்டும் வச்சி சினிமா எடுக்க முடியாது..ஒரு படம் டைரக்ட் பண்றதுன்னா எவ்வளவு கஷ்டம்னு உனக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை..இவன் முதல்ல சினிமானா என்னன்னு புரிஞ்சிக்கணம்.." - என நிறுத்தினாள் ஜோயித்தா

"அதுக்கு?" - கேள்வி கேட்டார் சுகுந்தன்.

"அதுக்கு..அதுக்கு இவன் உன் கிட்ட Assistant டைரக்டரா இருந்தா கரெக்டா இருக்கும்னு feel பண்றேன்.." - என்று தயங்கி தயங்கி சொன்னாள்

"ஓ recommendation வேறயா  ..என் கிட்ட அ சிஸ்டண்ட்டா சேர்ரதுன்னா நான் கொஞ்சம் qualifications எதிர்பார்ப்பனே..இவர டெஸ்ட் பண்ணி தான் சேர்த்துகலாமா வேண்டாமான்னு முடிவெடுப்பேன்"

"இது என்ன 100% ரிசல்ட் காட்டிறதுக்காக நல்லா படிக்கறவன மட்டுமே சேர்க்கற school,tuition மாதிரி இருக்கே" 

"அப்படி இல்லை ஜோயித்தா..இங்க நிறைய directors  அவங்களோட உதவி இயக்குனர்களை தெரு நாய் மாதிரி நடத்துவாங்க..ஆனா நான் அப்படி இல்லை..என் கிட்ட ஒருத்தன் உதவி இயக்குனரா இருக்கான்னா அவன் உண்மைலேயே எதுக்காச்சு உதவனம்..அதுக்கு கொஞ்ச நஞ்சமாச்சு விஷயம் தெரிஞ்சிருக்கணம்..அப்போ தான் எனக்கு உபயோகமா இருக்கும்..அதுக்கு மேல தொழில் கத்துக்கிட்டு ஜெயிக்கிறது அவன் சாமார்த்தியம்.. அதனால நான் எதிர்பார்க்கிற சில விஷயங்கள் இவர் கிட்ட இருந்தா மட்டும் தான் என்னால சேர்த்துக்க முடியும்"

"சரி அந்த டெஸ்ட் எப்போ வைக்கலாம்னு இருக்க?அதுக்கு எங்க வர வேண்டி இருக்கும்..?"

"நீ ரொம்ப யோசிக்கிற..ஸ்ரீதர் நான் கேட்கற கேள்விக்கு நேர்மையா உண்மையை மட்டும் சொல்லுங்க.."

"கண்டிப்பா சார்" - என்றான் சற்று உற்சாகத்துடன்.உள்ளுக்குள் ஒரு பயமும் இருந்தது..ஏனெனில் மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு என்பது கனவில் கூட கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.ஆகையால் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற படபடப்பு அவனுக்கு இருக்கத்தான் செய்தது.

"புஸ்தகம் படிக்கற பழக்கம் உண்டா?"

"நிறையவே படிப்பேன் சார்"

"என்ன மாதிரி புஸ்தகமெல்லாம் படிச்சிருக்க"

"நிறைய சார்.. Ken Follett, Jeffrey Archer,Irving Wallace,James Herriot,Leo Tolstoy, Sidney Sheldon, John Grisham,J K Rowling,Mario Puzo, Dan Brown, Chetan Bhagat, even Amish..." - என்று சொல்லிக்கொண்டே போன ஸ்ரீதரை நிறுத்தி சற்றே ஆச்சரியத்துடன் கேட்டார் சுகுந்தன்,

"அவ்வளவு தானா?"
"இல்லை சார் இன்னும் இருக்கு தமிழ்ல கல்கி,சுஜாதா,பாலகுமாரன்,ராஜேஷ் குமார்,அனுராதா ரமணன்,ரமணி சந்திரன்..."
"போதும் பா..இவங்க எழுதின எல்லாத்தையும் படிச்சிருக்கியா என்ன?"

"முடிஞ்ச அளவுக்கு படிச்சிருக்கேன் சார்"

"சொந்த ஊரு எது?"

"தென் சாரம் சார்,விழுப்புரம் பக்கம் ஒரு கிராமம்"

"ஏன்யா கிராமத்துல இருந்துகிட்டே எப்படியா இவ்வளவு படிச்ச?"

"எங்கப்பா தாசில்தாரா இருந்தவரு..அவர் நிறைய படிப்பாருங்க..அவர் கிட்ட இருந்து கத்துகிட்டது தான்..இவங்களோட கதையெல்லாம் படிச்சி தான் சினிமால சாதிக்கனம்னு ஒரு ஆர்வம் வந்ததுன்னே சொல்லலாம்"

"English படமெல்லாம் பார்ப்பீங்களா?"

"நிறையவே சார்..Benhur,Omar Mukhtar,Pursuit of Happiness,Dark Knight,A beautiful mind, Inception.."

"ok ok போதும்..உங்களுக்கு இந்த நல்ல நாள்,நட்சத்திரம் இதெல்லாம் பார்க்கிற பழக்கம் உண்டா?"

"எதுக்கு சார்?"

"இல்லை நீங்க அசிஸ்டன்ட்டா join பண்ணா நல்ல நாள் பார்த்து தான் சேருவீங்களான்னு கேட்க வந்தேன்"

"சார் உங்க கிட்ட அசிஸ்டன்ட்டா join பண்ற நாள் தான் சார் எனக்கு நல்ல நாள்,நீங்க எப்போ சொல்றீங்களோ அப்போவே சேர்ந்துடுவேன்"

"Alright.. நாளைக்கி VGPல shooting இருக்கு..அங்க வந்துடுங்க..நாளைல இருந்து நீங்க என்னோட அசிஸ்டன்ட்..பரவாயில்லை ஜோயித்தா,கரெக்டான ஆளை தான் introduce பண்ணிருக்கீங்க.. இப்போ happyயா?"

"Definitely..Thanks a lot!!!.."

"மேடம் lifeல என்னைக்கும்  உங்களை மறக்க மாட்டேன்.." - என்று சற்று உணர்ச்சி வசப்பட்டான் ஸ்ரீதர்.

"ஹலோ..இதெல்லாம் ஒரு படம் ஹிட் கொடுத்தப்புறம் சொல்றீங்களான்னு பார்க்கிறேன்..All the best ஸ்ரீதர்.. நீங்க பெரியாளா வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு"

தான் காண்பது கனவா இல்லை நிஜம் தானா என்று இன்னும் கூட ஸ்ரீதருக்கு ஒரு சந்தேகம் இருந்து கொண்டு தான் இருந்தது. ஸ்ரீதருக்குக் கடவுள் பக்தி அதிகம்.இறைவன் ஏதோ ஒரு ரூபத்தில் தனக்கு உதவி கொண்டு தானிருப்பான் என்று தீர்க்கமாக நம்புபவன். இன்று அந்த இறைவன் இந்த அழகிய பெண் ரூபத்தில் உதவி இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டான்.இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உறுதி கொண்டான் ஸ்ரீதர்.
(தொடரும்)